Tuesday, July 27, 2010

கொள்கையின் நிறம் கருப்பு

வணக்கங்க,எனக்குன்னு யாருமே கெடையாதுங்க, அதான் சும்மா ஒங்ககிட்ட கொஞ்சம் பேசலாம்னு நெனைச்சேன்.எனக்கு சொந்தம்னு சொல்லிக்க என்னோட கொள்கைகள் தான் இருக்கு.யாரும் இல்லாத எனக்கு அதுங்க தான் அம்மா,அப்பா, பாட்டி, மச்சான், ஒண்ணு விட்ட சித்தி எல்லாமே.அப்படி என்னடா உன்னோட கொள்கைன்னு கேட்கற மூடுல நீங்க இல்லேன்னாலும் நான் சொல்ற மூட்ல இருக்கேன்.ஒன்னா ரெண்டா கூட்டு குடும்பம் மாதிரி நெறைய இருக்கு, முதன் முதலா ஒரு பதிமூனு வயசு இருக்கும், அப்ப என்னோட அம்மா உசுரோட இருந்துச்சு, கோவிலுக்கு போனோம். காசு குடுத்து நிக்குற வரிசையில வேகமா போகவிடுறாங்க, தர்ம தரிசனத்துல மட்டும் ஒரே தேக்கம். கொதிச்சி போய் கோபமா நான் வெளிய வந்திட்டேன்.அன்னிக்கு முழுக்க கோபமாவே இருந்தேன். என்னைப் பொறுத்தவரைக்கும் நீண்ட நேரக் கோபத்துக்கு பேரு தான் கொள்கை.கோயிலுக்கே இனி போகக்கூடாதுன்னு ஒரு கொள்கை சும்மா கம் போட்ட மாதிரி ஒட்டிகிச்சு. அடுத்த வருசமே அம்மாவும் போனதுனால யாரும் என்ன வற்புறுத்தலை.இப்படியே டீக்கடை , பஸ்ஸுன்னு போன இடம் எல்லாம் ஒரு கொள்கை வந்து சேர்ந்துகிச்சு. ஒரு சத்திரத்துல தங்கினேன்,ஒரு வக்கீல் எனக்கு பள்ளிகூட ஃபீஸ் எல்லாம் கட்டி படிக்க வெச்சாரு. சத்திரதுல சாப்பாடு, மதியம் சத்துணவு, செல நேரம் ராத்திரிக்கு வக்கீல் ஐயா வீட்ல சில்லரை வேலைகளிருந்தா செஞ்சிட்டு அங்கயே சாப்பாடு, இப்படி நல்லா போய்க்கிட்டு இருந்துச்சு பத்தாப்பு முடிக்குறவரை.அப்புறம் சத்திரத்தை யாரோ ஒரு மந்திரி வாங்கிட்டான்னு வெளிய பத்தி விட்டாங்கிய.ஒரு மாசம் வக்கீலோட வீட்டு திண்ணைல தங்கினேன், எதோ பட்டு புடவை காணாபோச்சுன்னு சொல்லி முதுகெல்லாம் சூடு வெச்சாங்க, வெளிய தொரத்திவிட்டுடாங்க, உங்களுக்கே தெரியும் திருடக்கூடாதுன்னு ஒரு அடிப்படை கொள்கை கூட எனக்கு இல்லாமலா ?.




ஒரு பேப்பர் ஏஜண்ட் கிட்ட காலைல பேப்பர் போடுற வேலைல சேர்ந்துகிட்டேன். ஒரு பெரிய கூடாரம் இருக்கும் அதுல என்ன மாதிரி பத்து பேரு தங்கியிருந்தோம்.வெறும் தரை தான்,நடு ராத்திரி பேப்பர் வந்ததும் எந்திரிச்சி, ஏரியா பிரிச்சி எடுத்துகிட்டு போகனும்.பகல்ல ஏஜண்டோட மச்சான் வெச்சிருக்குற ஹோடல்ல வேலை.குறிப்பா இது தான்னு சொல்லமுடியாது, என்ன வேணும்னாலும் செய்யனும், இந்த டேபிள் கூட தொடச்சிடலாங்க, அந்த கழிப்பறை கீளீனிங்க் தாங்க ரொம்ப கஷ்டம்.காய்கறி மூட்டைய கொண்டு போய் ஸ்டோர் ரூம்ல போடணும். இத்தனைக்கும் அங்க சம்பளம் இல்லை, ரெண்டு வேளை சாப்பாடு தான். பேப்பர் ஏஜண்ட் மாசத்துக்கு நானூறு ரூபாய் தருவாரு, அதுவும் மாசாமாசம் இல்ல, எப்போவாச்சும் , ஊருக்கு போகனும்னா அல்லது தீபாவளி , பொங்கல் பண்டிகைன்னா சேத்து வச்சி குடுப்பாரு, சம்பளம் கூடக் கேட்டா அப்போ தங்குற எடத்த நீயே பாத்துக்கன்னு சொன்னதுனால யாரும் பேச மாட்டோம். ஏஜண்ட் கூட பரவாயில்லைங்க, அந்த சூப்பர்வைசர் தான் ரொம்ப மோசம், அங்க இருந்தவங்கள்ல நான் தான் அதிகம் படிச்சவன், அப்படியும் என்ன மதிக்க மாட்டாரு சூப்பர்வைசர். ஒரு தடவை ஒரு நர்ஸ் வீட்ல பேப்பரோட சேர்த்து அவங்க புருஷனுக்கு தெரியாம ஒரு லெட்டர் தரனும்னு சொன்னாரு, சரியா என்னன்னு புரியலைன்னாலும், என்னோட ஏதாவதொரு கொள்கைக்கு அது எதிராயிருக்கும்னு தோணிச்சு.போயா நீயும் உன்னோட வேலையும்ன்னு விட்டுட்டேன்.சம்பளம் பாக்கி வாங்கும்போது நான் உண்மைய சொன்னா போலிஸ்ல பொய் வழ்க்கு போட்டு உள்ள வைப்பேனுட்டான் சூப்பர்வைசர்.

ஒரு கெமிகல்ஸ் கம்பெனில டெலிவரி பைய்யனா சேர்ந்தேனுங்க,பெரியவரு ஆரம்பிச்ச கம்பெனி அவரு மகங்க ரெண்டு பேரும் பாத்துகிட்டாங்க, மூத்த மகன், பொம்பளை சகவாசம்,ரெண்டாம் மகன் முழுக்குடிகாரன்.ராத்திரிக்கு அப்பாரு வீட்டுக்கு போனதும் ஒரே கூத்தும் கும்மாளமும் நடக்கும் குடௌன்ல,சின்னவருக்கு நான் தான் சரக்கு வாங்க போகனும் , பெரியமகனுக்கு மெடிக்கல் ஷாப்ல போய் அசிங்கம் புடிச்ச பலூன் வாங்கி வரனும். ரெண்டு நாள் பொறுத்து பாத்தேங்க. பொறுக்க முடியல, சரக்கு வாங்க குடுத்த காச நேரா பெரியவர் வீட்ல குடுத்துட்டு வேலைய விட்டே நிக்கலாம்னு போனேன்.அங்க போனா அந்த ராத்திரி நேரத்துல ஆபீஸ் டைபிஸ்ட் அக்கா நைட்டியோட கதவ தொறக்குறாங்க.ரெண்டு நாளைக்கு போய் என்ன சம்பளம் குடுப்பாருன்னு நெனைச்சேன்,ஆனா முன்னூறு ரூபாய் கொடுத்துட்டாரு பெரியவரு.



ஒவ்வொரு தடவையும் வேலைய விடும்போது ஒரு அசரிரி சிரிப்பு சத்தம் கேட்கும் எனக்கு. அப்போ நெனைச்சிக்குவேன், செல்வம், கல்வி, வீரம், தரித்திரம்னு எல்லாத்துக்கு ஒரு தேவதை இருக்குறா மாதிரி கொள்கைக்குன்னு ஒரு தேவதை என்னை வாழ்த்துதோன்னு. நான் தான் கலியுகத்துல கொள்கி அவதாரம்னு கூட தோணும். ஊரைவிட்டு போய் சம்பாதிக்கலாம்னு முடிவு செஞ்சு, இருந்த மூனு சட்டை,ரெண்டு பேண்ட், மூனு கைலியோட, கெளம்பி செண்ட்ரல் பஸ் ஸ்டேண்ட்க்கு போய்ட்டேன். ராத்திரி பத்து மணிக்கு மறுபடியும் தேவதையோட சிரிப்பு கேட்டுச்சு அப்போ தான் புரிஞ்சிச்சு அது சிரிப்பு இல்லங்க, பசியில வயிறு சத்தம் போடுது.போய் ரோட்டோரக் கடைல நாளு இட்லி சாப்ட்டேன்.ரேடியோ பெட்டில "ஆனந்த தேன் காற்று தாளாட்டுதே, அலைபாயுதே" பாட்டு மணிப்பூர் மாமியார்ன்னு வெளிவராத ஒரு படத்துலேந்து ஓடிச்சு.பாட்டுல என் முழு வயிறும் நெரம்பிடிச்சுங்க.திரும்ப பஸ் ஸ்டேண்ட் வந்தா அங்க ஒரு நடுத்தர வயசுக்காரரு,இந்நேரத்துக்கு இங்க இருந்தா சந்தேக கேஸ்ல புடிச்சுகிட்டு போகும் போலீஸ் அதுனால பக்கத்துல இருக்குற கொட்டகைல படம் பாக்கலாம்னு சொன்னார். சினிமா பாக்ககூடாதுன்னு ஒரு கொள்கை சினிமா டிக்கெட் விலைய ஏத்தினப்போவே இருந்துச்சு, இப்போ போலிஸா கொள்கையான்னு பட்டி மன்றம் வச்சி பாத்தா, சாலமன் பாப்பையா மாதிரி "போலிஸ் கொள்கை"ன்னோ, "கொள்கையுள்ள போலிஸ்"ன்னோ குழப்பிக்காம, போலிஸ் பயம் தான் ஜெயிச்சுதுங்க."வறுமையின் நிறம் சிகப்பு" படம் ரொம்ப நல்லா இருந்துச்சு, என்ன பத்தின கதை மாதிரி தோணிச்சு எனக்கு.என்ன வித்தியாசம்? அதுல டெல்லி எனக்கு திருச்சி, அவர் எதொ பெரிய படிப்பு நான் பத்தாவது அவ்வளவு தான் வித்யாசம்.படம் பாத்ததும் அந்த நடுத்தரவயசுக்காரரு "நீ ஏன் விந்தி விந்தி நடக்குற ஒனக்கு ஹிரண்யா இருக்கா?"ன்னாரு."அதென்னங்க ஹிரன்யா?"ன்னு கேட்டேன், டாக்டர்கிட்ட போனா ரொம்ப துட்ட புடுங்குவாங்க, நானே பாத்து சொல்றேன், அந்த சந்து மறைவுக்கு வான்னு கூப்பிடாரு.நானும் நம்பி போனேன், நல்ல வேளையா அஹிம்சைக் கொள்கை இல்லாததுனால செவுத்தோட சேத்து நாளு சாத்து சாத்திட்டு வந்தேன்.எதோவொரு வண்டியை புடிச்சு எங்கயோ போகனும்போல இருந்துச்சு.மெட்ராஸ் பஸ்ல ஏறிட்டேன்.



ரொம்ப பயமா இருந்துச்சு மெட்ராஸ் சேரும் வரைக்கும்,பஸ்ல பக்கத்துல யாரு உக்காந்தாலும் , நான் தூங்கவே இல்ல. பேரிஸ் கார்னர்ல ஒரு ஹோட்டல்ல வேலைக்கேட்டேன்,நான் ஒருத்தன் நிக்கிறமாதிரியே முதலாளி காட்டிக்கலை.அப்போ ஒரு வெள்ளைவேட்டி சட்டையோட ஒருத்தர் வந்தார், "தம்பி ஊருக்கு புதுசா? சாப்பிட்டியா?"ன்னு கேட்டாருங்க. என்னைய அம்மாவுக்கு அப்புறம் அப்படி கேட்டது அவரு தாங்க."வேலை வேனும்"னு சொன்னதும்,"நல்லா சாப்ட்டா தானே நல்லா வேலை செய்யலாம்"னு சொல்லி "பிடி காசு, சாப்பிடு" என்றார். பூரி கெழங்கு ஒரு பிலேட், ஒரு வெங்காய ஊத்தப்பம் சாப்ட்டேன், மறுபடியும் சிரிப்பு சத்தம் கேட்டுச்சு, வயிறு நன்றி சொல்ற சத்தங்க.ஆனா ஹோடல்ல பக்கத்துல இருந்தவங்க எல்லாம் என்ன மொறைச்சி பாத்து மூக்க மூடிக்கிட்டாங்க."என் மாப்ளை அண்ணா நகர்ல ஆட்டோ ஓட்டுறான் அவன்கிட்ட இந்த பலகாரத்தையும் என் மகளுக்கு கொஞ்சம் மருந்தும் கொடுத்துட்டு இங்க வா"ன்னாரு வெள்ளைவேட்டி சட்டை(பேரு தெரியலங்க)."இந்தா பிடி பைய"ன்னாரு, "எப்படி போனும் தெரியுமா? அதோ நிக்குது பாரு பிடி அந்த பஸ்ஸ, தண்ணி தொட்டி ஸ்டாப்ல எறங்கி ரோட்ட க்ராஸ் பண்ணா ஆட்டோ ஸ்டேண்ட் அங்க, வாசுன்னு ஒரு ஆட்டோ ட்ரைவர் இருப்பாரு அவர்கிட்ட இத கொடுக்கனும், அதே பக்கம் வரும் பஸ்ஸ பிடி திரும்பி இங்க வரலாம்".

பஸ்ஸுக்கும் பணம் குடுத்தாருங்க. அடிக்கடி "பிடி" "பிடி"ன்னு சொன்னதுனால அவர பிடியண்ணன்னு நான் மனசுல ஃபிக்ஸ் பண்ணிகிட்டேன்.பஸ்லயிருந்து கீழ எறங்குறதுதான் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.னல்ல கூட்டம் ஆனலும், பலகாரம் மருந்து பையை பத்திரமா வெச்சிருந்தேன், ரோடு தாண்டி அந்த பக்கம் போகும் போது நெறைய ஆட்டோ நின்னுகிட்டு இருந்துச்சு, எல்லா ஆட்டோகாரங்களும் ஒரு சஃபாரி சட்டைகாரர சுத்தி நின்னு பேசிகிட்டிருந்தாங்க, சவாரியா இருக்கும், வாசு சவாரில போய்ட்டார்ன்னா அப்புறம் புடிக்க முடியாதுன்னு, அவசர அவசரமா ஓடிப் போய் "இங்க யாருங்க வாசு?"ன்னேன். "நீங்க யாரு தொரை"ன்னு சம்மந்தமே இல்லாம அந்த சஃபாரி சட்டைக்காரரு கேட்டாரு," அவர் மாமனார் அனுப்பினாரு சார் இத கொடுக்கச் சொன்னார்"ன்னு சொன்னேன்.

அந்த பையையும் புடிங்கி வெச்சிகிட்டாரு.

"வாசு ஏற்கனவே மாமியார் வீட்ல தான் இருக்காரு , எந்த ஏரியால மாமனாரு இருக்காரு?".."பேரிஸ் கார்னர்லங்க, நான் ஊருக்கு புதுசு, இன்னைக்கி காலைல தான் வந்தேன்"ன்னு சொன்னேன்...

"மாட்டினா இப்படி சொல்லனும்னு சொல்லிக் கொடுத்தாங்களா?"ன்னு பேசிகிட்டே இருந்தவரு பளார்னு அறைஞ்சிட்டாருங்க என்னை.

இடுப்புலேந்து ஒரு பெரிய ஃபோன் எடுத்து, யாருக்கோ ஃபோன் பண்ணாரு,இன்னொரு தடவை ஃபோன எடுத்து "கம்"ன்னாரு ரெண்டு நிமிஷத்துக்கெல்லாம் ஒரு போலிஸ் ஜீப் வந்து நின்னுச்சு.

"பிடிங்க அவன"ன்னு என்ன கைய காட்டினதும், மூனு நோஞ்சான் ஏட்டு வந்து என்ன ஜீப்ல ஏத்திட்டாங்க. காலைலேயிருந்து பிடி பிடி ன்னு கேட்டவனுக்கு இந்த பிடி தாங்க பீதிய கெளப்பிடிச்சு.ஸ்டேஷன் கூட்டிகிட்டு போனாங்க.நம்ம பிடியண்ணே எனக்கு முன்னாடியே அங்க ஆஜர். டௌசரும் பனியனும் அவருக்கு அவ்வளவு நல்லா பொருந்தலைங்க.

பதினஞ்சு நாள் உள்ள வெச்சி நெனைக்கும்போதெல்லாம் அடிப்பாங்க.அப்புறம் வெளிய வந்து, ஊரெல்லாம் சுத்தி,என்னய நீங்க பாத்திருக்கலாம் ஹோட்டல்ல,வீட்டுக்கு தண்ணீ கேன் எடுத்துட்டு வர்றவனா,பார்கிங்க்ல கார் கழுவ கெஞ்சியிருப்பேன், பேப்பர் போட்டிருக்கலாம், சிக்னல்ல ஊதுபத்தியும் துண்டும் விக்கறவனா பாத்திருக்கலாம் அப்பாவியா இருக்கானே அடுத்த தடவை வரும்போது பழய சட்டை தரனும்னு நெனைச்சிருப்பீங்க அதுகுள்ள என் கொள்கை எதாவது என்னை வேலைய விட்டு தூக்கியிருக்கும்,"எங்க அந்த பையன்?"ன்னு நீங்க கடைல கேட்டா"அவன் கல்லால கை வெச்சிட்டான், அவன் ஏற்கனவே ஜெயில்ல இருந்தவன்னு எதாவது கேள்விப் பட்டிருப்பீங்க". இப்போ ரொம்ப வருஷமா இங்க இருக்கேங்க.காலைல குளதாங்கரையில குளியல் வேளைக்கு சோறு,ஒண்ணும் தொந்தரவு இல்லைங்க, எப்போ வந்தேன்னு நெனவு இல்ல,தலை தான் கொஞ்சம் பாரமா இருக்கு, முடி வெட்டனும், எவ்வளவு முடி வளந்திருக்குன்னு பாக்கலாம்னா, முடியல, கைய சங்கிலியால கட்டி வெச்சிருக்காங்க.

காரணமே இல்லாம ஒருத்தர் மட்டும் கையில பிரம்போட வந்து எல்லாரையும் அடிக்கிறாருங்க.

"ஒரு வேளை அவர் பைத்தியமோ?"

Monday, July 26, 2010

கிலிச் சங்கிலி

"மச்சான் இப்பொ கொஞ்சம் கஷ்டம்டா, அமௌண்ட் கெடச்சா நானே உனக்கு ஃபோன் செய்யறேன்டா மச்சி".கேட்டு கேட்டு அலுத்துபோன வசனத்தை மறுபடியும் கேட்டது வெறுப்பேற்றியதால் தொலைப்பேசி இணைப்பை துண்டித்தேன்.இதுவரை ஆறு பேரிடம் கேட்டாயிற்று,எல்லோருமே இதே ரீதியில், வெவ்வேறு வார்த்தை பிரயோகங்களில் தங்கள் இயலாமையை சொல்லிவிட்டார்கள்.எல்லோரும் இரண்டு விஷயத்தில் ஒற்றுமையை கடைப்பிடித்தார்கள், ஒன்று "பணம் இல்லை", அடுத்து "ஃபோன் செய்யாதே" என்பதை நாசூக்காக "நானே ஃபோன் செய்யறேன்"என்கிறார்கள். என் கடந்த கால நண்பர்கள்!

எனக்கும் அறிவில்லாமல் போய்விட்டது, பரீட்சை முடிந்ததும், கோடைக்கானல் போக திட்டமிட்டு , மூன்று பைக்குகளில் ஏழு பேர் சென்று சாகசம் புரிந்ததால் வந்த வினை.எல்லோரும் வர விருப்பம் உண்டு ஆனால்,தற்சமயம் கையில் பணம் இல்லை, திரும்பி வந்ததும் தங்கள் பங்கை தருவதாக, சூடம் தாண்டி, இல்லை துண்டை கொளுத்தி, (வேண்டாம் விடுங்கள் கோபத்தில் உளரல் அதிகமாகிறது) சத்தியம் செய்தார்கள்.

மேலும் "ஃப்ரெண்ட்ஸுக்கு ஒண்ணுன்னா நம்ம கோபி சும்மா இருக்க மாட்டான்டா" என்று சகவிரோதி உசுப்பேற்றியதன் விளைவு, துணிந்து மூன்று பவுன் சங்கிலியை சேட்டிடம் அடகு வைத்தேன்.நாங்கள் ஏழுபேர் தான் போகிறோம் என்று அதுவரை நம்பிக்கொண்டிருந்த எனக்கு ஏழரை சனியனும் உடன் வருவது தெரிந்திருக்கவில்லை.போகும் வழியில் போகக்கூடாத வேகம் போய், "கர்த்தரே" என்று நின்றிருந்த "மாதா லாரி சர்வீஸ்" லாரியில் மோதினான் என் அருமை நண்பன், குதித்து விட்டதால் அவனுக்கு ஒன்றும் ஆகவில்லை.

இரண்டு நாட்களுக்கான போதையையும், கோடைக்கானலின் குளுமையையும் தியாகம் செய்து என் செலவில் வண்டி பழுது பார்க்கப்பட்டது.திரும்பி வந்ததும் பணம் கொடுப்பதில் பெரும்பங்கு அவனுடையது,"இருந்தா தர மாட்டமா?" என்று நெஞ்சில் ஈட்டி பாய்ச்சுகிறான்.என் வேதனை புரியாமல் என் தந்தை "அந்த கரையாண் புத்துல மருந்தடிக்கனும், இல்லேன்னா கந்து வட்டி மாதிரி வளர்ந்துகிட்டே போகும்" என்றார் கொள்ளைபுறத்தில் இருந்த புற்றை நோக்கியவாரே.என் தில்லு முல்லு அவருக்கு தெரிந்து விட்டதோ என்று எனக்கு ஒரு திடுக், பின் எப்போதும் உவமையோடு பேசும்பழக்கம் கொண்டவர் என்பதால் கொஞ்சம் சமாதானம் அடைந்தேன்.

வீட்டில் "சங்கிலி எங்கேடா கோபி?" என்று கேட்டு தொலைத்தால் பதில் சொல்ல இயலாது என்பதால் எந்நேரமும் கழுத்தை மறைக்கும் சட்டையோடு இருந்தேன்.எண்ணெய் குளியலை தவிர்த்தேன்.என் தனியறையை சிறையறையாய் பாவித்து முடங்கி கிடந்தேன். ஒரு வாரம் கழிந்தும் எந்த முன்னேற்றமும் இல்லை. நடுத்தெருவில் யார் பார்வைக்கும் படாமல் ஒரு நான்காயிரத்து முன்னூறு ரூபாய் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்றெல்லாம் நினைத்தேன். யார் பார்வைக்கு பட்டதோ இல்லையோ என் பார்வைக்கு பத்து பைசா கூட சிக்க வில்லை.யாராவது உதவ மாட்டார்களா? குலதெய்வத்தை முதன் முறையாக வேண்டினேன்.

ஒரு எலிகாப்டர் பறக்கும் ஓசை நெடுந்தூரத்தில் கேட்டு, அதன் வீரியம் பெருகி, என் வீட்டு வாசலில் அடங்கியது.வந்தது குலதெய்வமல்ல என் கல்லூரி நண்பன் உமேஷ், அது எலிகாப்டர் அல்ல அவன் பஜாஜ் எம்80."என்னடா கோபி டல்லா இருக்க?" என்றவாரே என் அறைக்குள் நுழைந்தான்.

நல்ல சட்டை, பேண்ட், ஷூ எல்லாம் அணிந்திருந்தான்.உமேஷ் இதுவரை அவ்வளவு நேர்த்தியாக உடை அணிந்து இப்பூவுலகம் பார்த்திருக்க வாய்ப்பில்லை."என்ன ஆச்சு உனக்கு எதையோ பரிகொடுத்தா மாதிரி இருக்க?" என்று அவன் கேட்டது தான் தாமதம் கோடைக்கானல் முதல் கரையான் புற்று வரை ஒப்பித்தேன்.இவனாவது எனக்கு உதவமாட்டானா என்று நினைக்கும்பொழுதே, "கோபி உன் பிரச்சனை தீர்ந்தது! கவலைய விடு" என்று தோளில் தட்டினான். நான் மெய் சிலிர்த்து நின்றேன்.கூடவே வந்து கூத்தும் கும்மாளமும் அடித்து பின்னர் கை விரிக்கும் துரோகிகள் மத்தியில் தானே வலிய வந்துதவும் உமேஷ் தன் உருவம் போலவே என் மனதில் விஷ்வரூபம் எடுத்து நின்றான்.மானசிகமாக புகழுரைப் புணைந்து கொண்டிருந்த என்னை திசை திருப்பியது அவனது செல்ஃபோன் சத்தம்."ஹலோ உமேஷ் ஹியர், சொல்லுங்க சதீஷ், உங்க செக் அனுப்பிட்டேன், ஓகே பை".மிக சுருக்கமான பேச்சுடன் வைத்து விட்டான்."செல்ஃபோன் வாங்கிட்டியா?" என்றபடி அவனது செல்ஃபோனை வாங்கி பார்த்தேன், எரிக்ஸன் ஒரு கரும்பலகை துடைப்பான் அளவில் கனமாக இருந்தது.ஒரு நிமிடம் வரும் இன்கமிங்க் அழைப்பிற்கு பத்து ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்ட காலம் அது.பங்களா, காருக்கு அடுத்தபடியான அந்தஸ்தைப் பெற்றிருந்தது செல்ஃபோன் என்று சொன்னால் நம்புவதற்கு இப்பொழுது கடினமாகத்தான் இருக்கும்.

"ஆமாம் மாப்ள,என்னோட பிஸ்ணஸுக்கு இது அவசியம் தேவை, மேலும் எனக்கு ஒரு பார்ட்னர் வேனும்,முதல் கூட ரொம்ப போட வேண்டாம், நல்லா உழைக்கிற புத்திசாலி தான் வேணும்,அதான் உன்ன பாக்க வந்தேன், ". என்னைத்தான் புத்திசாலி என்று சொன்னான்!

"ஆனா என்கிட்ட தான் காசில்லையே, ஏற்கனவே சேட்டுகிட்ட வாங்கின 4300 ரூ கடன்". இந்த பொன்னான வாய்ப்பை இழக்கவும் மனதில்லை.

"கஷ்டத்தோட கஷ்டமா, உன்னோட வண்டி புக்க அடமானம் வெய், எப்படியும் பதினஞ்சாயிரம் கெடைக்கும், மீதி பணத்துல ,வெறும் 5550 ரூ குடுத்தா போதும் எனக்கு நீ பார்ட்னர்". பதில் சொல்ல எத்தனிக்கும் முன் போட்டியாக ஒலித்தது, அவனது செல்ஃபோன், "ஹலோ , உமேஷ் ஹியர் நான் முக்கியமான ஒருத்தர்கிட்ட பேசிகிட்டு இருக்கேன், அப்புறமா பேசறேன், பை.".அவன் குறிப்பிட்ட அந்த 'முக்கியமான ஒருத்தர்' நான் தான் என்பது பேரின்பதிர்ச்சியாக இருந்தது,பெருமையாக இருந்தது."யாரு மச்சான் ஃபோன்ல?" என்று கேட்டதற்கு, என்னக்கு மேல ஒரு பாஸ் இருக்காரு அவரு தான் என்று அலட்சியமாக சொன்னான்.தனது பாஸை புறக்கணித்துவிட்டு என்னிடம் பேசுவதை எண்ணி எனக்கு உச்சந்தலையில் என்னவோ செய்தது.மேலும் சில நாட்களுக்கு முன் சாதாரணமாக இருந்தவன் இப்போது வசதியோடு கணப்படுவது தெம்பளித்தது."சரி உமேஷ் நான் முடிவு செஞ்சிட்டேன் "நாடகத்தனமாக கையை நீட்டினேன்."ஆனா, போட்ட பணத்தை எடுக்கலாமா?"

"கோபி, சர்கஸ்ல யானையை கயிறால தான் கட்டி வெப்பாங்க ஆனா அது தப்பிக்காது, குட்டி யானைய சங்கிலியால கட்டுவாங்க, ஏன் தெரியுமா?".

என் கேள்விக்கு தொடர்பின்றி ஒரு கேள்வி பதிலாக வந்ததில் கொஞ்சம் குழம்பினேன், ஒரு வேளை இதற்கு பதில் சொல்லா விட்டால் பார்ட்னர் ஆக்கி கொள்ள மாட்டானோ என்றும் ஒரு பயம். ஆகவே மையமாக மண்டயை ஆட்டி வைத்தேன்.குழப்பம் அறிந்து கொண்டு அவனே விடை முடிச்சை அவிழ்த்தான்."சின்ன வயசுல யானையை சங்கிலியால கட்டினதும் அதை தகர்த்து ஓட முயற்சி செய்யும்,அதால முடியாது, ஸோ எப்பவுமே நம்ம இந்த கட்டுலயிருந்து தப்பிக்க முடியாதுன்னு ஒரு முடிவுக்கு வரும், அப்படி முடிவு செஞ்ச யானைய கட்ட சங்கிலி ஏன் கயிறு கூட வேண்டாம், வெறும் நூலே போதும், மைன்ட் செட் புரியுதா? நல்லதே நெனைச்சா நல்லதே நடக்கும்". "அடேங்கப்பா என்னமா பேசுறான்" என்று வியந்தேன், எனக்கும் அவனது நம்பிக்கை தொற்றிக்கொண்டது, அதுவும் முழு நம்பிக்கை.மேலும் ஒரு நாய் கதை, ஒரு தவளைக் கதை மற்று சில மீன் கதைகளைச் சொல்லி என்னை உற்சாகபடுத்தினான்.

"சரி கோபி, நான் கெளம்புறேன், நாளைக்கு ஒரு கான்ஃபரன்ஸ் இருக்கு நீயும் வரணும்" என்று கூறி விட்டு தனது பஜாஜ் எம்80யை கிளப்பி சென்றான். வரும்போது எலிகாப்டர் போல் தொன்றிய அவன் வாகனம் இப்பொது எனக்கு புஷ்பகவிமானம் போல் தோன்றியது.தெருவில் யாரும் இல்லாதிருந்தால் அவன் வந்து சென்ற திசையை தலை தாழ்த்தி வணங்கியிருப்பேன்.கான்ஃபரன்ஸ் என்றதுமே இனிய உணர்வுகளும், கற்பனைகளும் ப்ரவகிக்க தொடங்கியது.

எனது கற்பனைக் கான்ஃபரன்ஸில் காரசாரமான விவாதம்,அத்தனை பொறுப்புகளையும் யார் சுமப்பது என்று சர்ச்சை, இறுதியில் கோபியை விட்டால் வேறு யாரும் இதை பேணி காக்க முடியாது என்று முடிவு செய்து என்னையே டைரக்டர் ஆக்கிவிடுகிரார்கள் மாதம் பதினைந்தாயிரம் சம்பளம்.நான் தங்குவதற்கு நீச்சல் குளம் கூடிய வீடு, ஃபியட் யூனோ வண்டி ,என்னை வஞ்சித்த அந்த ஆறு பேருக்கும் ,பியூன், செக்யூரிட்டி போன்ற வேலை, இதைத் தவிர ரொக்கமாக 4300ரூ பணம் என்று கற்பனை சென்று கொண்டிருந்தன.

மறுநாள் மாலை டை சகிதம் வந்த உமேஷ், எனக்கும் ஒரு டை கொடுத்து அணியச் சொன்னான்."கெளம்பலாமா?" என்றபடி தனது கருப்புப் பையை என்னிடம் கொடுத்தான்.அவனது சட்டைப் பையில் முக்கியமான காகிதங்கள் இருந்ததால்,அவனுடைய செல்ஃபோனும் என் சட்டைபையில் தஞ்சம் புகுந்தது.டை பை செல்லுடன் நானும் ஒரு தினுசாகத்தான் இருந்தேன்.எதிர் வீட்டு மாலதி முதன் முதலாக என்னைப் பார்த்து சிரித்ததே என் தோற்றத்து மேன்மைக்கு சாட்சி.கான்ஃபரன்ஸ் நடப்பதாக இருந்த ஹோட்டலை தவிர்த்து நேராகப் போனான்.

"என்ன மச்சி இந்த பக்கம் போற?".

"ஒரு சின்ன வேலை இருக்கு முடுச்சிட்டு வந்துடலாம், கான்ஃபரன்ஸ்க்கு இன்னும் நெறைய நேரம் இருக்கு", என்றவன் பஜாஜ் எம் 80ஐ நிறுத்திய இடம் ஒரு வண்டிப் பட்டறை."இது தான் நான் வாங்கியிருக்குற பைக்" என்று ஒரு யமஹாவை காட்டினான்,நாங்கள் யமஹாவிற்குத் தாவி "ஜென்னிஸ் ரெஸிடன்ஸீ" என்று நியான் விளக்குகள் உறுதி செய்த இடத்தை அடைந்தோம்.என் மூச்சே நின்றுவிடும்படி ஒரு அழகு தேவதை முண்டா சுடிதாரில் நின்றுகொண்டிருந்தாள்.எங்களைக் கண்டவுடன் அருகில் வந்தாள்."கோபி இதுதான் வித்யா,நம்ம கூட பிஸ்னஸ் செய்யறாங்க" என்று அறிமுகபடுத்தினான் உமேஷ்."ஓ! இவர் தான் கோபியா? ஸ்மார்ட்டா இருக்காரே" என்றபோது நான் இப்பூவுலகில் இல்லை.போதாக்குறைக்கு என் கையை பிடித்துக் கொண்டு "சரி நேரமாச்சு உள்ள போகலாம்" என்றபடி இழுத்துச் சென்றாள்,அந்த கான்ஃபரன்ஸ் அறையில் என்னருகிலே அமர்ந்தாள்.அதன் பிறகு யார் யாரோ வந்தார்கள்,என்னென்னவோ பேசினார்கள், எதுவும் எனக்கு எட்டவில்லை, எனது கனவு ஃபியட் யூனோ காரின் இடபக்க இருக்கைக்கு இவள் தான் பொறுத்தமானவள் என்று முடிவி செய்து விட்டேன்.அவளை மணம் முடிப்பதாக கற்பனையை துவக்கினால், அது நீண்டச் சங்கிலியைப் போல நீண்டது. களைப்பாக வீடு திரும்பும் நான் சொஃபாவில் அமர்கிறேன், எனது கழுத்து டையை தளர்த்திவிடுகிறாள்.

தனது சேலை தலைப்பால் என் வியர்வையை ஒற்றி எடுக்கிறாள்,தேநீர் கொடுத்து புத்துணர்ச்சி பெறச் செய்கிறாள்,"என்னங்க கோவில் கூட்டிகிட்டு போங்க" என்றதும் நான் குளித்து தயாராகிறேன்.அவள் பெரிய பொட்டும், தலையில் பூவோடும் பட்டுபுடவைக்குள் புகுந்து தேவதையாய் இருக்கிறாள்.இருவரும் காரில் புறப்பட்டு செல்கிறோம், வழியில் உமேஷ் தனது யமஹாவில் வருகிறான், என்னை வண்டியை நிறுத்த சொல்லி அவனோடு பைக்கில் போகிறாள் எனக்கு டாட்டா காட்டியவாபடி.விதிர்விதிர்த்து அசல் உலகுக்கு வந்தேன்.ஒரு வேளை உமேஷுக்கும் இவள் மீது நாட்டம் இருக்குமோ என்ற ஆழ்மதின் ஐயம் தான் இந்த அற்புதமான கற்பனையோட்டதை கெடுத்துவிட்டது.இது எதுவும் அறியாத வித்யா,"எதுக்கு அப்போ கை ஆட்டினீங்க?".

"நானா? எப்போ?"

"நம்ம சீனியர் பேசும்போது"

அப்போதுதான் உணர்ந்தேன், எனது கனவுலகின் அசைவுகள், நிஜத்திலும் பிரதிபளித்தது என்று.சரி சமாளிப்போம்,

"அது ஒண்ணும் இல்ல, ஒரு சந்தேகம்...இப்போ இல்ல..." என்றேன்.இதை விட மோசமாக உளர எவர்க்கும் வாய்ப்பு கிடைக்காது என்பது போல் சிரித்தால் வித்யா.

அப்போது தான் கவனித்தேன், எதிரே உள்ள வெள்ளைப் பலகையில், தடிமனான பேனாவால் சில உருண்டைகளும், ஒவ்வொரு உருண்டையையும் அம்புக்குறிகளால் சிறிய உருண்டைகள் மூன்றுடன் இணைக்கப்பட்டிருந்தன.ஒரு பக்கத்தில் ஆறு முதல் நூற்றியிருபது சதவிகிதம் வரை ஒழுங்கற்ற ஏற்றத்தில் எழுதப்பட்டிருந்தது. பலகையின் கீழ்ப் பகுதியில் ஒரு ஆறு இல்லக்க எண் இருந்தது. எனக்கு ஒன்றுமே புரியவில்லை.

உமேஷ் "எப்படி மீட்டிங்க்?" என்றான்.

"ஸூப்பர் டா"

"எப்போ சேரப் போறீங்க?" என்ற என் எதிர்கால மனைவியைப் பார்த்து "கூடிய சீக்கிரமே" என்றேன் அவள் கண்களை உற்று பார்த்தவாறு."இன்னிகே சேர்ந்தா ரொம்ப நல்லது" என்றாள் கள்ளி, நான் கிளர்ச்சியடைந்தேன் என்று நான் சொல்லி தான் உங்களுக்கு தெரிய வேண்டுமா?

அடுத்த நாளே வண்டியின் பத்திரம் அடகுக் கடையில் அடைக்கலம் பெற்றது சங்கிலி விடுதலை பெற்றது.உமேஷுக்கு பணம் கொடுத்தாயிற்று."சாயங்காலம் வருவேன்,அதுகுள்ள உன்னோட ரூமை ஆஃபீஸ் மாதிரி தயாரா வை"என்று விட்டு கிளம்பிவிட்டான்.நான்கு மணி நேரத்திற்குள் குறைந்தது இருபது முறை என் அறையின் உள்ளமைப்பை மாற்றி பின் ஒரு மாதிரி திருப்தி அடைந்தேன்.ஒரு (வெட்டி) கௌரவம் கருதி ஒரு பழைய ஹிண்டு செய்தித்தாளும் என் மேசையில் ஆஜர்!உமேஷ் எந்நேரமும் வரக்கூடும்,அது வரை கொஞ்சம் கற்பனைகள் வேண்டாமா?இதோ இங்கிருக்கிறேன் என்பது போல் வரத் தொடங்கின."அந்த மேத்தா அண்ட் மேத்தா ஃபைல் எங்க?","அந்த பத்து கோடி கான்ட்ராக்ட் நமக்கு தான்னு உறுதியாச்சு","ப்ரியா இன்டஸ்ட்ரீஸ் செக் வந்தாச்சா?","எனக்கு டெல்லியில ஒரு மீட்டிங்க் இருக்கு ஒரு தனி விமானம் ஏற்பாடு பண்ணுங்க" என்ற ரீதியில் என் கட்டளைகளும் ,கேள்விகளும் வந்தன வந்தன வந்து கொண்டே இருத்தன.
(நன்றி தமிழ் திரைப்படங்கள்).

"அட் எனி காஸ்ட் மந்திரிய பாத்தே ஆகணும்" என்றது கொஞ்சம் டூ மச் ரகம்."இன்னும் ஒரு வருஷத்துக்கு எந்த புது வேலையும் செய்ய முடியாது" இது கொஞ்சம் பரவாயில்லை ரகம்.

"ஏன்டா ஒரு மாவு மில்லுக்கு போய்ட்டு வர்றதுக்கு அவ்வளவு அலுப்பா? செய்ய முடியாதா?" என்றபடி என்னறையில் என் அம்மா.சட்டென என் சுழல் நாற்காலி சுருங்கி சூம்பிப்போன முக்காலியானது, அழகான காரியதரிசி (ரீட்டா என்று அழைத்தாக நியாபகம்) நின்ற இடத்தில் என் அம்மா கையில் அரிசி தூக்கோடு.

"சரி போறேன் உமேஷ் வந்த இருக்க சொல்லுமா" என்று கிளம்பினேன்.திரும்பி வரும்போது வீட்டு வாசலில் உமேஷின் யமஹா ஆறுதலளித்தது."ரூம் நல்லா இருக்கு," என்றவன் ஒரு அட்டைப் பெட்டியிலுருந்த நான்கு பாட்டில்களை எடுத்து எனக்கு விளக்கினான்.

"இது 'நோயின்ஃபெக்' திரவம், இதை காது குடைந்ததும், கொஞ்சம் காதில் விட்டு கொண்டால் இன்ஃபக்ஷன் வராது,இந்த சிகப்பு எண்ணெய் 'மல்டீபர்பஸ்' ஆயில்ன்னு பேரு, இத தினமும் மூனு வேளை சாப்பிட்டா, உடம்பு சூடு குறையும், தலைக்கும் தேய்க்கலாம் , புண்களுக்கும் போடலாம், அதோ அந்த கிரீம் நகத்தை சுத்தப்படுத்தும்"
"சரி இதெல்லாம் வெச்சி நான் என்ன பண்ணனும்?" கொஞ்சம் போல் அழுகை வந்தது.

"அன்னிக்கி மீட்டிங்க்ல கேட்டியேடா, இதெல்லாத்தையும் நீ உபயோகிக்கனும், அப்புறம் விக்கணும்"

என் கற்பனைகளுக்கும் இந்த தொழிலுக்கும் தொடர்பு எதுவும் இல்லை என்று உணர்ந்தேன்.

"5500 ரூபாய்க்கு இவ்வலவு தானா?"

"இங்க பாரு சில புத்தகங்கள், சில சீடீ எல்லாம் இருக்கு, இத கேளு அத படி, பிஸ்ணஸ் தன்னால நடக்கும்"

"ஐயா அம்மா எண்ணெய் வாங்கலியா தென்னைமரக்கொடி எண்ணெய் " என்பது போல் கூவிவிற்கும் எண்ணமே எனக்கு விரக்த்தியை கொடுத்தது.

காதுகுடைய பட் வாங்கினாலே எரிந்து விழும் என் அப்பாவிற்கு அந்த "நோஇன்ஃபெக்"கின் நான்கு இலக்க விலை தெரிய வந்தால், வீட்டில் ஒரு மரணம் உறுதி.என் குழப்பத்தை அறிந்தவனாக, "இன்னிக்கு ஒரு ஃபாலோ அப் இருக்கு நீயும் என் கூட வா, அப்போ தான் உனக்கு தெளிவு கிடைக்கும்"

இருவருமாக கிளம்பினோம்.பலத் தெருக்களை தாண்டியதும் வண்டியை நிறுத்தினான்."இன்னிக்கும் அதே ஹோட்டல்ல கான்ஃபரன்ஸ் இருக்கு" என்றான், உடனே வித்யா கண்முன் வந்து சென்றாள், அடுத்து அடகுகடைக்கார சேட்டும் வந்து சென்றார்.பத்து ரூபாய் தாளை என்னிடம் கொடுத்த உமேஷ்,"ஒரு ஓரமா நின்னு தம்மடிச்சிட்டு இரு, நான் வந்திடுவேன், அஞ்சு நிமிஷதுக்கு ஒரு தடவை எனக்கு ஃபோன் பண்ணுடா". என்றும் இல்லாத் திருநாளாக பணம் கொடுத்து விட்டு மறைந்து சென்றான்.

ஒரு ஆழ்ந்த புகை ஈர்ப்பு வைபோகத்தை கொண்டாடிவிட்டு, அவனுக்கு ஃபோன் செய்தேன் சில்லரை ஃபோனில்.

"ஹலோ உமேஷ் ஹியர்"

"உமேஷ், கோபி பேசறேன் டா, நான் இங்கியே தான் இருக்கேன்"

"அடடா சொல்லுங்க சார் எப்படி இருக்கீங்க?"

"மாப்ள நான் கோபிடா"

"அப்படியா? ஒரு டென் தௌசண்ட் செக்கா குடுங்க மீதிய பணமா குடுங்க, பை" துண்டித்து விட்டான்.

என்னாச்சு அவனுக்கு? ஒரு வேளை க்ராஸ்டாக்காக இருக்கலாம்,சிறிது நேரம் கழித்து செய்வோம் என்று நினைத்தேன்.இன்னுமொரு தம்மை அடித்து விட்டு, மறுபடியும் அழைத்தேன்.

"ஹலோ உமேஷ் ஹியர்"
"உமேஷ், கோபி பேசறேன்"

"நான் முக்கியமான ஒருத்தர் கூட பேசிகிட்டு இருக்கேன்,அப்புறமா கூப்பிடுங்க, பை".இணைப்பு இறந்தது.
அதற்கு பின் பலமுறை அழைத்தும் தவிர்த்தவன் ஒரு முறை மட்டும் எடுத்து கோபி நீ நேரா ஹோட்டலுக்கு போ, நானும் நேரா வர்றேன் என்று நடுத் தெருவில் விட்டுவிட்டு சென்றான். வீட்டுக்கு போய் என் வண்டியை எடுத்து செல்வதா அல்லது இப்போதே பேருந்து பிடித்து செல்வதா என்று குழம்பிய படி நின்றேன்.வித்யவின் நினைவு வரவே ஒரு ஹால்ஸ் வாங்கி போட்டுக்கொண்டு பஸ்ஸில் ஏறிச் சென்றேன்.

உமேஷுடனான அந்த சம்பாஷனைகள் முன்பே ஒரு முறை நடந்ததைபோலவும், ஆனால் இப்போது வேதனை அளிக்கும் அவைகள் முன்பு இன்பமாக இருந்ததும் சிற்றறிவுக்கு எட்டியது.எனது பலவீனமான தருணத்தை பயன்படுத்திக் கொண்டுவிட்டான்.இவனைப் பற்றி வித்யாவிடம் சொல்ல வேண்டும் அவளை இந்த கூட்டத்திலிருந்து காப்பாற்றவேண்டும், உணர்ச்சிவசப்பட்டு"கொஞ்சம் வேகமா போங்க" என்று கத்தி பேருந்தில் பல முறைப்புகளையும் நகைப்புகளையும் சம்பாதித்தது எரிந்த கொள்ளியில் எண்ணெய்.

நான் சென்றடையவும், உமேஷ் இன்னும் ஒரு பலிகடாவுடன் வந்து சேரவும் சரியாக இருந்தது. எல்லோரையும் வரவேற்றுக் கொன்டிருந்த என் தேவதை புடவையில் இருந்தாள்.என்னைப் பார்த்து லேசாக சிரித்து விட்டு உமேஷிடம் சென்றாள்.

"சந்தோஷ் இவங்க தான் வித்யா, நம்ம கூட பிஸ்னஸ் செய்யறாங்க", அதற்கு வித்யா "ஓ, இவர் தான் உங்க ஃப்ரெண்ட் சந்தோஷா, ரொம்ப ஸ்மார்ட்டா இருக்காரே!"

" யூ டூ வித்யா?" என்ன உலகம் இது, எப்படி என் கடன்களை அடைக்கப் போகிறேன்? தலையைச் சுற்றியது எனக்கு.

உங்களுக்கு ஒன்று மட்டும் சொல்கிறேன், "குலதெய்வமாகவே இருந்தாலும், டை அணிந்து கொண்டு, கருப்பு பையோடு, பஞ்ச தந்திரக் கதைகள் சொல்லிக் கொண்டு வீட்டு வாசலுக்கே வந்தாலும், கதவை உள்பக்கம் தாளிட்டு, பூட்டி, கருப்பு கம்பிளி போர்த்திக் கொண்டு கட்டிலுக்கு அடியில் ஒளிந்து கொள்ளுங்கள்"

Thursday, July 22, 2010

கல்லூரிக் காதல்(கள்)


இப்படி நடக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

இனிமையாகத் துவங்கியது கல்லூரியின் முதல் நாள்.முதல் நாளன்றே தயக்கமின்றி தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான் ராஜ்."ஹலோ ஐ அம் ராஜ்,என்ன பாஸ் மீசை வெச்சிருக்கீங்க?, சீனியர் பாத்தா பிச்சிடுவாங்க மீசையையும் உன்னையும்.ரேக்கிங் தெரியுமா ரேக்கிங்? ".ஒரே வாக்கியத்தில் ஒருமைக்குத் தாவி,நட்பை எளிதாக ஏற்படுத்தினான்."தெரியாதே ரேக்கிங் பன்னுவாங்களா? " எனக்கு அடி வயிற்றில் புளி.

"ஒன்னும் கஷ்டம் இல்ல, துணிக்கடைல ஓஸீ ல தர்ற மஞ்சப்பை தான் எடுத்துக்கிட்டு வரனும், ஹவாய் செருப்பு தான் போடனும், சட்டயை இன் பன்னக்கூடாது,பெல்ட் போடக்கூடாது,கடிகாரம் கட்டக் கூடாது, சீனியர பாத்ததும் சத்தம் வர்ற மாதிரி தரைல கால அடிச்சி சல்யூட் பன்னனும்,தண்ணி பார்ட்டீ வெக்கனும் , அசைன்மெண்ட் எழுதி கொடுத்தா அவங்களுக்கு கொள்ளைப் பிரியம்,பைக்ல வர்ற கூடாது,முக்கியமா பேரு கேட்டா இனிஷியலோட சொல்லனும், அப்பா பேருக்கு மிஸ்டர் போடனும், தாத்தா பேருக்கு ரெண்டு மிஸ்டர்".

"எப்படி இவ்வளவு தெரியும்? " வியந்தபடி நான்.

"எங்க அண்ணன் ரெண்டு வருஷம் முன்னாடி இங்க தான் படிச்சான்"

வகுப்பு துவங்கியது, அறிமுகப்படலத்தோடு.

"ஹலோ ஃப்ரெண்ட்ஸ், ஐ அம் ராம்குமார், ஹெடிங்க் த டிபார்ட்மெண்ட் ஆஃப் ஃபிசிக்ஸ், உங்க க்லாஸ் இன் சார்ஜ், உங்களை நீங்க அறிமுகபடுத்திக்கங்க" சரளமான ஆங்கிலத்திலும், உடைந்த தமிழிலும் ஆர்.கே. எல்லோரும் தங்களது பெயரையும், அடுத்த ஆண்டுமுதல் படிக்கவிருக்கும் துறையையும் சொல்லி

அமர்ந்தார்கள் , அந்த வரிசையில் "சித்ரா ,கம்பியூட்டர் சைண்ஸ்" என்ற குரல் சின்னக் குயிலுக்கு சொந்தமானது போல் இருந்தது,வகுப்பே ஒன்று சேர அது வந்த திசையைத் திரும்பிப் பார்த்தோம். வாஸ்து பார்த்துக் கட்டிய டியூபக்ஸ் வீடு போல் அற்புதமாக இருந்தாள் சித்ரா.ராஜ் தன்னிச்சையாக பேனாவால் பெஞ்சில் சித்ரா என்று எழுதியதை நான் சிறிதும் ரசிக்கவில்லை.

உணவு இடைவேளையின்போது ஒரு ஒழுங்கற்ற பயோ-டேட்டா தயார் செய்து கொண்டு சித்ராவிடம் சென்றான் ராஜ்."க்லாஸ்லயே அழகான பொண்ணுகிட்ட பயோ-டேட்டா வாங்கிவரச் சொன்னார் ஒரு ஸீனியர், ப்லீஸ் இத தரனும் இல்லன்னா எனக்கும் பிரச்சனை, ஒன்னையும் தொல்லை பன்னுவாங்க". சற்று தள்ளி நின்று வயிற்றெரிச்சலோடு பார்த்து கொண்டிருந்தேன்.ஆறு பந்துகளில் அரைச்சதம் அடித்த களிப்போடு திரும்பி வந்தான் ராஜ்.

பெயர் : சித்ரா சீனிவாசன்

வயது : 17

உயரம்: 5.4

முகவரி: நெ. 22, புதுப்படி சந்து , ஆண்டாள் வீதீ, திருச்சி - 2

படித்த பள்ளி: பாஸ்டன் மெட்ரிகுலேஷன், சென்னை.

பிடித்த நடிகர் : ஷாருக் கான்

இந்த விபரங்களைத் தாங்கிய தாளை கண்முன் ஆட்டினான், "எப்புடி நம்ம டெக்னிக்?". நான் வசிக்கும் பாபு சாலைக்கும், ஆன்டாள் வீதிக்கும் பாலம் கட்டும் பணியை மனதிற்குள் துவங்கினேன்.ராஜை அணிலாக்க முடியாது, எனக்கென்னவோ அவன் இராவணன் போல தோன்றினான்.முழு நான்கு வருடங்கள் இருக்கு பொறுத்திருந்துபெண்ணை அடைவோம்.

இரண்டு மூன்று மாதங்களுக்கு இருந்த ரேக்கிங் கெடுபுடிகள் கொஞ்சம் தளர்ந்தது.கல்லூரிப் பேருந்தில் பாடச் சொல்லி கேட்பார்கள், பத்து ஆபாச வார்த்தைகள் சொல்லக்கேட்டு மகிழ்வார்கள், நமக்கு தான் பத்தோடு நிறுத்திக்கொள்ள சற்று கடினமாக இருந்தது! எல்லாம் எங்கள் விருப்பமாகவும் இருந்ததால் ரேக்கிங்கை மகிழ்ச்சியாக ஏற்க துவங்கினோம்.பாடிப்பாடியே ராஜ் சீனியர்கள் மத்தியில் பிரபலம் ஆனான்.எனக்கென்னவோ அவன் பாடுவதற்கும் பேசுவதற்கும் அதிக வேறுபாடு தெரியவில்லை.அவன் கல்லூரியின் இசைக்குழுவில் சேர்ந்தது, என் சித்ரா கனவின் ஒரு சன்னல் மூடியதாகவே எனக்கு பட்டது.இதெல்லாம் ஒரு புறம் இருக்க நாங்கள் இருவரும் ஒன்றாகவே சுற்றித் திரிந்தோம்.

"வெல்கம் பார்ட்டி " என்ற சடங்கு முடியும்வரை சொல்லிக்கொள்ளும்படி சிறப்பாக ஒன்றும் நடக்கவில்லை.காரணம் அதுவரை பெண்களிடம் அதிகம் பேசக்கூடாது என்ற சீனியர்களின் கட்டளையே.வெல்கம் பார்ட்டி அன்று ராஜை சீனியர்கள் பாடச் சொன்னார்கள். அவனும் "பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாக..." என்று சற்றும் சுருதியின்றி பாடி கைத்தட்டல்களைப் பெற்றான்.கடைசிவரை நீடித்த சித்ராவின் கைத்தட்டல் எனக்குள் கலவரத்தை ஏற்படுத்தியது.கில்லாடி தான் அவன், இவளுக்கு

பிடித்த ஷாருக் கான் பாடலைப் பாடி முதல் கல்லை எறிந்துவிட்டான். அவன் போல் எனக்கு தனித்திறமை எதுவும் இல்லை, ஆனால் அவனைவிட நான் படிப்பில் அக்கரை கொண்டதால் அதை வைத்தே காய்களை நகர்த்த முடிவு செய்தேன்.ரேக்கிங்க் பயம் விலகிய முதலாமாண்டு மாணவர்களில் பெரும்பாலானவர்கள் கண்ணாடி அணிந்து கொண்டார்கள்.எந்த விதமான கண் கோளாறும் இல்லாதபோதும் கண்ணாடி அணிவது மோஸ்தர்.குறிப்பாக விஜய் கண்ணாடி, அப்போது வெளிவந்திருந்த "கண்ணெதிரே தோன்றினாள்" பிரஷாந்த் கண்ணாடியும் மிகப் பிரபலம்.

ராஜ் மற்றும் சித்ராவும் சகஜமாக பழகினார்கள்.அவனிடம் சிரித்து சிரித்து பேசுவாள், என்னோடு பேசுவாள்! பெரும்பாலும் அவள், "ராஜ் எங்கே?","ராஜ்க்கு எப்போ பிறந்தநாள்?","ராஜ் வீடு எங்கே?" என்ற ரீதியில் அவனைப்பற்றியே தான் .ராஜின் நண்பன் என்ற முறையில் மட்டுமே அவள் என்னோடு பேசியது போல் இருந்தது. போதாக்குறைக்கு "ராசி" என்ற புனைப்பெயரில் கவிதை (என்ற பெயரில்!) எழுதலானான் ராஜ்.புனைப்பெயரில் அவர்களிருவரின் முதல் எழுத்தும் சேர்ந்திருந்தது என்னை மேலும் கலவரமாக்கியது.என்பெயரையும் அது போல் முயற்சி செய்து பார்த்தேன்,அருவருக்கத்தக்க வழுக்கும் பொருளாக அது அமைந்ததில் எனக்கு கொஞ்சம் வருத்தம் தான் ஆகவே அந்த முயற்சியை கை விட்டேன்.வெறும் புனைப்பெயரை வைத்துக்கொண்டு என்ன செய்வது?

சின்ன சின்ன கற்களாக போட்டுக் கொண்டிருந்தவன் அன்று ஒரு மலைக்கோட்டையே தூக்கி போட்டான்.எரிமலையாய் உள்ளுக்குள் சிதறிக் கொண்டிருந்தேன்.

"எவ்வளவு நாளைக்கு தான் , ஒன் சைடா லவ் பன்றது, இன்னிக்கி சொல்லி டபுள் சைட் ஆக்கப் போறேன்". எச்சில் விழுங்கி கொஞ்சம் எரிமலையின் சூட்டை தணித்து கொண்டபடி, "ராஜ் ,லவ் என்ன ஆம்லெட்டா?ஒன் சைட் , டபுள் சைட்ன்னு சொல்ற? ", அதாவது இந்த காதல் கத்திரிக்காய் கசுமாலம் இதிலெல்லாம் சிறிதும் ஆர்வம் இல்லாதது போல் சொன்னேன்.படுபாவி உண்மையிலேயே கல்லூரி மைதானத்தில் வைத்து சொல்லி விட்டான்.இதைக் காண பொறுக்காமல் ஒரு மரத்துக்கு பின் மறைந்து நின்றேன்.அவள் பதில் என்னவென்று தெளிவாக தெரியவில்லை ஆனால், ராஜ் என்ற ராசி, விரக்தியோடு திரும்பி வந்தான்.எனக்கு உள்ளூர மட்டற்ற மகிழ்ச்சி, பின் ஒரு கவலை,"எனக்கும் இந்த விரக்தி தான் மிஞ்சுமா?"

மண்டல பொறியியல் கல்லூரியில் ஒவ்வொரு வருடமும் நடக்கும் ஃபெஸ்டம்பர் கலை நிகழ்ச்சிக்கு எங்கள் கல்லூரிக்கும் அழைப்பு வந்தது.சித்ரா பாடுவதற்கு பெயர் கொடுத்திருந்தாள், எவ்வளவோ எல்லோரும் வற்புறுத்தியும் ராஜ் பாட சம்மதிக்கவில்லை. இதையறிந்த பல நாட்கள் ராஜுடன் பேசாமலிருந்த சித்ரா "ராஜ் நீ பாடனும், இல்லேன்னா நானும் பாடலை".

"பாடறேன் சித்ரா, ஒனக்காக பாடறேன், ஒன்னை பத்தி தான் பாடுவேன் " அன்று அவன் எறிந்தது கடைசிக்கல் அல்ல, கூரான அம்பு.நிகழ்ச்சியன்று ராஜ் தான் முதலில் பாடினான்,பாடலுக்கு இடையில் வரும் வரிகளான "காமங்கள் ஒன்றே என் காதல் அல்ல கண்டேனே உன்னைத் தாயாக", என்று அர்த்ததோடு சித்ராவைப் பார்த்தான்.அடுத்து பாடிய சித்ராவும், "ராசாவே உன்ன நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுய்யா.." என்று தன் சம்மதத்தை சொல்லி விட்டாள்,அளவில்லா சந்தோஷத்தில் அவர்கள் இணைந்து பாடிய அடுத்த பாடல் "வா வா அன்பே அன்பே,காதல் நெஞ்சே நெஞ்சே". முடிந்தளவு மோசமாகப் பாடி, மேடையை விட்டு இறங்கினார்கள் அல்லது ஆரவாரம் செய்து இறக்கிவிடப்பட்டார்கள்.

அழகான சித்ராவுக்கு அறிவில்லாமல் போனதே என்று வெம்பினேன்.எனக்கு ஆசை விட்டு போனது, இருந்தாலும் நப்பாசை மிச்சமிருந்தது. "ஊர்ல யாரும் முறைப்பையன் இருந்தாதான் பிரச்சனை, இவனதான லவ் பன்றா, எப்போ வேணும்னாலும் இத உடைக்கலாம்" என்று மனதை தேற்றிக் கொண்டேன். எனக்கு என் எண்ணத்தை நினைத்து கேவலமாக தோன்றவில்லை! ராஜ் தான் பாட்டுப் போட்டியில் தோள்வியடைந்தாலும், காதலில் வெற்றி பெற்றதை சொன்னான்."அவளுக்கு எங்கே போச்சு அறிவு? என்னவோ இவனே பாட்டெழுதி மெட்டமைச்சா மாதிரி, ச்ச சுலபமா சிக்கிட்டாளே" என்று நொந்தேன்.

அவன் காதலைக் கொண்டாடும் விதமாக ராஜ், சித்ரா மற்றும் நான் ஹோடலுக்கு போனோம். நாங்கள் சென்றது , "தி கிரேட் ரகுநாத்" . அங்கு சித்ராவிடம் பேச எதுவும் இல்லாததால், " அசைண்மெண்ட் எழுதியாச்சா?" என்று உப்பு சப்பில்லாமல் பேசினேன், ஆனால் மனதிற்குள் "ஆமாம் இவ அசைண்மெண்ட் எழுதினா என்ன ஆயின்மெண்ட் போட்டா என்ன? :-(". நான் அப்படி பேசியது அவளுக்கு பிடித்திருந்தது விசித்திரம்.அவள் பாடங்களில் சந்தேகம் கேட்க, நானும் ஒன்றுமே தெரியாத போதும் துணிந்து கதை அளந்தேன்."ஆரம்பிச்சிட்டியா டா நீ? சரியான சொம்பு" என்றான் ராஜ்."சும்மா இரு ராஜ், நீ வேஸ்ட்டு அவனப் பாரு எவ்வளவு, டீப்பா தரோவா படிச்சிருக்கான்னு" அன்று எனக்காக பரிந்து கொண்டாள், ஆஹா, மூடிய சன்னலில் சன்னமாக ஒரு ஓட்டை, அதன் வழியே மெல்லிய காற்று வருவதால் சற்று ஆறுதல் அடைந்தேன் ,அவள் அதை சொல்லும்போது அவன் காதை கிள்ளியதை மனக்குறிப்பிலிருந்து நீக்கியவாரே.எல்லாம் முடிந்து ராஜ் வீட்டிற்கு போனோம் நானும் ராஜும், அங்கு அவன் அப்பா "ஏன்டா ராசு, பில்டிங்க் ஃபீஸ் கட்ட பணம் வாங்கினியே, கட்டியாச்சா?" என்று கேட்கும்போது,ரகுநாத்தில் சாப்பிட்ட நவரத்தின குருமா எனக்கு ஏப்பத்தை தந்தது.

கார்டுகள் இல்லயேல் காதலின் சாதல் என்பது போல், அவர்களின் காதல் காகித அட்டைகளில் பதிக்கபட்டு, பரிமாறிக்கொள்ளப்பட்டது."ஆர்ச்சீஸ்" என்ற கடைக்கு என்னையும் அழைத்து செல்வான்,ஹேப்பி சன்டே, ஹேப்பி மன்டே என்று ஏதாவதொரு டே இவர்களுக்கென்று கிடைத்ததுதான் கொடுமை.இவர்கள் காதலுக்கு உறுதுணையாக இருந்த இரண்டு தோழிகள் ஆற்றிய அரும்தொண்டுகள் எண்ணிலடங்கா.இருவரும் அவளோடு வருவார்கள், நானும் மாப்பிள்ளைத் தோழன் போல் உடனிருப்பேன். சிறிதும் கூச்சமின்றி மூக்கு முட்ட சாப்பிடுவார்கள்.அதற்கான பயன் நிச்சயம் இருந்தது, "ஸ்பெஷல் க்லாஸ்" என்ற நூற்றாண்டு பாரம்பரியம் மிக்க பொய்யை சொல்லி சித்ரா வெளியில் வர உதவியாக இருப்பார்கள்.சாப்பிட்டு விட்டு இவர்களை கொஞ்சம் சொறிந்து விட வேண்டும் என்பதற்காக தோழிகளில் ஒருவள்,"பாத்துடீ, ரொம்ப செலவு செய்யறார் ராஜ், கொஞ்சம் பிரீதிக்கும் சேத்து வைங்க" என்று சொல்லி விட்டு கார்ட்டூன் பார்த்தவள் போல் அப்படி சிரிப்பார்கள்.சித்ரா வெட்கப்பட ஒரு முறை விளக்கினான் ராஜ் "பிரீதி எங்க குழந்தையோட பேருடா".

நான் "ஸூப்பர் ஸூப்பர்", மனதிற்குள் "கருமம் கருமம்".

சித்ராவும் ராஜும் என் வீட்டிற்கு வருவார்கள், சித்ரா படிக்க வருவாள், ராஜ் வரும் காரணமும் அதை விட அவன் வருவதே எனக்கு ஒப்பவில்லை.ஒரு நாள் சித்ரா மட்டும் வந்தாள். ராஜ் உடன் இருந்தால் அவனே சித்ராவின் முழு கவனத்தையும் கவர்ந்து விடுவான், என்னை சைட் டிஷ் போல உபயோகிப்பான்.சித்ரா வழக்கத்தைவிட உம்மென்றிருந்தாள். இஷ்டமில்லை என்றாலும் கேட்டுத் தொலைப்போமென்று "ராஜ் வரல?"."அவன பத்தி பேசாத, எனக்கு அவனுக்கும் ஒன்னும் இல்ல இனிமே", "ரமா கஃபே"யின் புதன் கிழைமை பாஸந்தி போல் இனித்தது வெளிக்காட்டாமல் தொடர்ந்து அவள் சொன்னதைக் கேட்டேன்,"என் ஃப்ரெண்ட் வருவா இல்ல, பிரியான்னு, அவளோட ராஜ் சினிமா போனது எனக்கு தெரிஞ்சு போச்சு, அவன் கிட்ட கேட்டா இல்லன்னு பொய் சொல்றான், ரொம்ப சீப் அவன்.". இதை பற்றி பேசி அவள் மனதில் ராஜிற்கு முக்கியத்துவம் வளர நான் விரும்பவில்லை.அவன் பொய் சொன்னதால் இவளுக்கு கோபம் அது போதும் எனக்கு.எங்களுக்கிடையில் அவன் வருவதில்லை. ராஜ் முன்பு போல் என்னோடு பேசுவதில்லை,விரோதமும் பாராட்டவில்லை.அவளுக்கு கோபம் குறைய கூடாதென்பதால், ஒரு முறை அந்த பிரியாவையும் இவனையும் பைக்கில் பார்த்ததாக சொல்லி வைத்தேன்.

கேட்காத கேள்விக்கும் பதில் சொல்லி வந்த ராஜ், இப்போதெல்லாம் கேட்ட கேள்விக்கு கூட பதில் சொல்லாத அளவுக்கு அமைதியானவன் ஆகிவிட்டான். திருச்சியில் "சௌக்" என்று பழைய புத்தகங்களை,ஏமாந்தால் இரண்டு மடங்கு விலைக்கும், சுதாரித்துக்கொண்டால் பாதி விலைக்கும் விற்கும் இடம் உண்டு.அதை புத்தகங்களின் சரணாலயம் என்றே சொல்லலாம்.என் பேரம் பேசும் திறமையால் பத்தில் ஒரு பங்கு விலை கொடுத்து சில ஆங்கில புத்தகங்களை வாங்கி எப்போதும் உடன் வைத்திருப்பேன்.என்னை ஒரு ஞானி போல்,அறிவாளி போல் காட்டி கொள்வதில் கவனம் செலுத்தினேன்.சித்ராவும் என்னை நம்பினாள்!

ஒரு நல்ல நாள் பார்த்து என் காதலை சொன்னேன்."சித்ரா,எல்லா பசங்களும் ஒரே மாதிரி கிடையாது,உனக்கு என்னை பிடிச்சிருக்கா? இல்லேன்னா எப்பவும் போல ஃப்ரெண்ட்ஸா இருக்கலாம்".

"இப்போதைக்கு எனக்கு படிப்பு தான்" என்று அவள் சுறுக்கமாக முடித்து கொண்டாலும், ஒரு மணி நேரம் கழித்து,"தெரியல, எனக்கு என்ன செய்யனும்னு தெரியல, ஆனா நான் தப்பு பன்னலைன்னு தான் நினைக்கிறேன், ஆனா பயமா இருக்கு" என்றாள்.பல முறை அவள் சொன்னதை கிரகித்துக் கொள்ள முயற்சி செய்து தோற்றேன்,குழப்பத்தில் இருக்கிறாள் என்பது எனக்கு புரிந்தது.

நம் முன்னோர்களும் , கோடாணுகோடி தேவர்களும், பூத்தூவி வாழ்த்தும், ஃபெப்ரவரி பதினான்காம் தேதி, பச்சை கொடி காட்டினாள் என் காதலி சித்ரா.எனக்கு ஒரு காதலி இருக்கிறாள் என்ற உணர்வே ஒரு தெம்பை கொடுத்தது, அவளுக்கு பிடிக்காத மீசையை எடுத்தேன், "ரசிக ரஞ்சன" சபாவில் மிருதங்கம் கூட கற்றுகொள்ள ஆரம்பிக்கலாம் என்று யோசித்தேன், "முல்லை தியேட்டரில்" படம் பார்ப்பதில்லை என்று உறுதி மொழி எடுத்தேன்.

கல்லூரியில் தென்படாத ராஜை "லூர்து சாமி" பார்க்கில் கிரிக்கெட் ஆடப் போகும்போது பார்ப்பேன். ஒரு பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு எதையோ எழுதிக் கொண்டிருந்தான் ‘ராசியில்லா ராஜ்’.அவன் செய்த தவறால் தான் சித்ரா அவனை விட்டு விலகினாள் என்று என் குற்ற உணர்ச்சிக்கு சமாதானம் செய்து கொண்டேன்.

இப்படி நடக்கும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை

என் காதல் பராக்கிரமத்தை பறைச்சாற்றும் விதமாக என்னுடன் கிரிக்கெட் ஆடும் நண்பன் கிஷோரை பட்ம பழமுடிர் சோலைக்கு வரச் சொன்னேன். நானும் சித்ராவும் முன்னமே ஆஜர்.அங்கு உட்கார்ந்திருக்கும்போது சித்ரா கேட்டாள் "வர்ஷா பேரு எப்படி இருக்கு?அது தான் நம்ம குழந்தைக்கு பேர்".இம்முறை ஏனோ கருமம் கருமம் என்று நான் நினைக்கவில்லை. காதலிக்க தொடங்கியதுமே தங்கள் குழந்தைக்கு பெயர் சூட்டுவது ஒரு அடிப்படை உரிமை அல்லவா?

கிஷோரும் வந்து விட்டான், அசந்து விட்டான் என் சித்ராவைப் பார்த்து.

இப்படி நடக்கும் என்று நானும் எதிர்பார்க்கவில்லை

கைரேகைப் பார்க்கத் தெரியும் என்று பீலாவிடும் நண்பர்களிடம் காதலியை அறிமுகபடுத்த கூடாது போலும்.கிஷோர் -நண்பனா அவன்? துரோகி

லூர்து சாமி பார்க்கில் ராஜுக்கு நான்கு பெஞ்சு தள்ளி நான் அமர்ந்திருக்கிறேன், நானும் கவிதையெல்லாம் எழுதறேன், ஒன்னு கேளுங்களேன்

கண்ணே படி தாண்டாதே

கல்லரையில் இடமில்லையாம்

உன்னைக் காதலிக்க வரிசையில் பலர்!

இரண்டு பெஞ்சுகள் தள்ளியுள்ள பெஞ்சில் கிஷோர் என்று செங்கலால் எழுதி அவனுக்கு இடம் பிடித்து வைக்க தவறவில்லை.

*டிஸ்கி: இக்கதையில் வரும் கதாபாதிரங்கள் யார் யாரென்று தெரியும்வரை, அவையெல்லாம் கற்பனையே யாரையும் குறிப்பிடுவன அல்ல.