Thursday, September 29, 2011

ஒம்போதுல குரு



இப்போ உங்க கிட்ட "ஒங்கப்பா என்ன செய்யறார்?" அப்படின்னு கேட்டா என்ன சொல்லுவீங்க? "அம்மாவுக்கு பயந்த நேரம் போக, இஞ்சினியரா இருக்கார், டாக்டரா இருக்கார், ரிடையர் ஆகிட்டார்" அப்டின்னு எதாவது ஒண்ணு சொல்லுவீங்களா இல்லையா?ஆனா சில பேர் சொல்ற பதில் ரொம்ப வேதனையா இருக்கும். "எனக்கு ரொம்ப சின்ன வயசா இருக்கும்போதே அவர் ஓடிபோயிட்டார்"ன்னு சொல்லுவாங்க. நமக்கு அப்படியே மனசப் பிழியறா மாதிரி ஆகிடும்."ஓடிப் போறதெல்லாம் ஒரு வேலையா?"ன்னு நமக்கு கேக்கனும் போல இருந்தாலும், அந்த குடும்பத்தோட நிலைமைய பாத்தா வாயமூடிப்போம்.




எங்க மூதாதையர் காலத்துல இது ரொம்ப அதிகமாம். எங்க கொள்ளுத் தாத்தா பெரிய புல்லாங்குழல் வித்வான் "வெங்கடராமன்"ன்னு பேர் . அவரோட சகளையோடப் பேரும் அதே தான். ரெண்டு பேருக்கும் நடுவுல பெயர் குழப்பம் வராம இருக்க , முன்னவர "ஃப்லூட் வெங்கடராமன்"ன்னும் பின்னவர "ஜூட் வெங்கடராமன்"ன்னும் கூப்டறது வழக்கம்.கைல எட்டணா இருந்தா போதும் மனுஷர் ஜூட் விட்டுடுவாராம்.கல்யாணம் நடந்து ஒரே மாசத்துல எங்க போனார் எப்போ போனார்னு தெரியாது... ஜூட்(?!).அவரோட அம்மா, புது பொண்டாட்டி எல்லாம் ஊர விட்டு தஞ்சாவூர்லேந்து , ராமேஸ்வரம் போய்ட்டாங்க. கிட்ட தட்ட ஒரு வருஷம் கழிச்சி வந்தாராம், இவங்கள தேடி.பாவம் மூனு மாச குழந்தையோட அந்த குடும்பம் இருந்திருக்கு. இப்படி எந்த ஊர் மாறிப் போனாலும் சரியா எப்படித்தான் கண்டு பிடிச்சி வர்றார் அப்படிங்கறதப் பத்தி யாரும் பெருசா யோசிக்கலப் போல தெரியிது. அந்த 18 வருஷத்துல,மொத்தம் அவர் இந்த மாதிரி ஆறு தடவை வந்திருக்காராம் வீட்டுக்கு.அப்பறம் ஆளக் காணவே காணோம் பாவம்.அப்படி இப்படி ஏழு குழந்தைகளையும் வெச்சுப் பாவம் அந்தம்மா என்ன கஷ்டபட்டு வளர்த்தாங்களோ?அதவிட கொடுமை அவரோட கடைசிக் குழந்தைகிட்ட "அப்பா எங்க?"ன்னு கேட்டா "அப்பா காக்கா ஊஷ்"ன்னு சொல்லுமாம்.இவர் வீடு திரும்பும்போது அன்னி தேதிக்கு எந்தக் குழந்தை லேட்டஸ்ட்டோ அத மட்டும் கொஞ்சுவாராம்.மற்ற குழந்தைகளோட பேர்கூட தெரியுமாங்கறது அவருக்கு தான் வெளிச்சம்.

இன்னும் எனக்கு புரியாத ஒரு விஷயம், "வீட்டை விட்டு எங்கயோ போய்ட்டார்"ன்னு சொல்றதுக்கு பதிலா அதென்ன "ஓடி போய்ட்டார்"ன்னு சொல்றாங்க?.அப்ப என்னவோ புடிக்காமலோ ,இல்லேன்னா பயந்தோ போனா மாதிரி ஆகிடறதில்லையா? கிட்ட தட்ட அவருக்கு எண்பது வயசா இருக்கும்போது சென்னைல அவர் பையன் நல்ல வசதியா இருக்கும்போது,சியோல் ஒலிம்பிக் நடக்கும்போது திரும்ப வந்தார்.வீட்டுல ஒண்ணும் பெருசா எந்த வேலையும் செய்ய மாட்டார்.டீவில பென் ஜான்ஸன் ஓடறத மட்டும் வெறிகொண்ட கண்களோட பார்த்தது ஒரு அசிங்கமான அடுத்த அத்தியாயத்தின் ஆரம்பமாக பட்டது.இந்த தடவை கிட்ட தட்ட ஆறு வருஷம் இருந்தார், அப்படி மறுபடியும் ஒரு நாள் எஸ்ஸு!. அப்பவும் மனசாட்சியே இல்லாம "ரெண்டு ரின் சோப் கட்டிகள எடுத்துண்டு ஓடி போயிட்டார்"ன்னு தான் சொன்னாங்க அவர.

அப்புறம் பிரசன்னம் பாக்கறதுன்னு ஒரு மலையாள மாந்த்ரீக முறை ஒண்ணு , சோழி போட்டு பாத்து, அவர் இப்போ உயிரோட இல்லைன்னு சொன்னாங்க. அவர் ஜாதகப்படி எப்போ இறந்திருப்பார்னு துல்லியமா(!?) கணிச்சு சொல்லி அவருக்கு ஞானவாப்பில சகல அந்திம காரியங்களும் நடந்தது. "பொரி பாலு" கூட வந்திருந்தார் அதுக்கு. "பாவம் இங்க நம்ம கூடவே கடைசி வரைக்கும் இருந்திருந்தா நிறைய நெய் ஊத்தி, நன்னா சந்தன கட்டைலயே எரிச்சி நன்னா ஜம்முனு ,அமக்களப் படுத்தியிருக்கலாம்"னு ரொம்ப அங்கலாய்த்து போய் சொன்னது இன்னும் நியாபகத்துல இருக்கு.பதிமூனாவது நாள் காரியம் எல்லாம் முடிச்சு விட்டுக்கு வந்து சேரும்போது,பூட்டின கதவுக்கு முன்னாடி ஜூட் வெங்கடராமர் ரொம்ப முடியாம வாசப் படியிலயே படுத்திருந்தது இப்போ நெனைச்சாலும் கண்கள் குளமாகிடும்.ஆசையா அவரே ரெண்டு அதிர்சம் வேற வாங்கி சாப்பிட்டார்.

எங்கதான் போவார்? ஏன் போவார்னு? எதுவும் யாருமே கேட்டுகிட்டா மாதிரியும் தெரியல.ஊருக்கு கெடைச்சது பிள்ளையார் கோயிலாண்டிங்கறா மாதிரி யார கேட்டாலும் "பம்பாய்க்கு போயிட்டார்னு" தான் சொல்லுவாங்க.பம்பாய் எதோ வெளிநாடுன்னு நெனைச்சி பெருமையா சொன்னா மாதிரி தான் எனக்கு தோன்றது.ஒரு விவரிக்க முடியாத ஒரு மனோ நிலை இருக்கும் அவங்க வீட்ல.இவர் காணமல் போனபின்னாடி பெருசா ஒண்ணும் அலட்டிக்க மாட்டாங்க.வீட்டுக்கு வந்ததும் தான் திரும்ப எப்போ ஜூட் விடுவாரோன்னு ரொம்ப பதற்றமாவே இருப்பாங்க.திரும்ப எஸ்கேப் ஆனதும் எல்லாரும் நார்மலாகிடுவாங்க.ஒரு வேளை இவர் கிளம்பும்போது எதாவது அண்டா குண்டானையும் சேர்த்து எடுத்துட்டு போறதுனால இருக்கலாமோ என்னவோ.

பொதுவா இப்படி ஓடிப்போனவர்களோட மனைவிகள் இவர்கள விட குறைந்த பட்சம் இருபது வயது கம்மியா இருப்பாங்க.கண்ணுக்கு லட்சணமாக இருப்பாங்க.கல்யாணம் முடிஞ்சி ஒடனே ஓடிப் போனாக் கூட, சரி, ஏதோ இல் வாழ்க்கைல ஈடுபாடு இல்லைன்னு சொல்லலாம். இவங்க ஃபர்ஸ்ட், செகண்ட்ன்னு ட்வெண்டிஃபைவ் நைட்ஸ் வரைக்கும் பிரம்ம பிரயர்த்தனம் செஞ்சிட்டு தான் போறாங்க.அப்புறம் திரும்பி வரும்போது தன்னோட இயலாமைய மறைக்க ,மனைவிகள் மேல சந்தேகப்பட்டு எதாவது ஒரு பட்டம் கொடுக்கறதும் இவங்க வழக்கம்.





இப்போ இந்த மாதிரி விஷயம் நடக்கறது ரொம்பவே கம்மி தான்." யாரும் இப்போதெல்லாம் முன்ன மாதிரி ஓடிப் போறதில்லை"ன்னு எங்கம்மா அடிக்கடி சொல்லியிருக்காங்க.அப்படி சொல்லும்போது அப்பாவோட மனநிலை எப்படியிருக்கும்னு தெரியல.





பெரும்பாலும் இந்த மாதிரி ஆட்களைப் பற்றி சொல்லும்போது "காலைல காஃபி சாப்ட்டார், திண்ணைல தான் உக்காந்து சீடை சாப்ட்டுண்டிருந்தார், கொள்ளகட்டுல வேலைய முடிச்சிட்டு வந்து பாத்தா காணோம்,ஹூம்.. ஆச்சு பத்து வருஷம்" என்பது பொதுமறையான ஒரு சொல்லாடல்.இன்னுமொரு பையன்,இல்ல ஆள்னு சொல்லனும், இல்ல பையானா இருக்கும்போது காணாமப் போன, இப்போ இருந்தா ஆளா இருக்கனும்.சரி இப்போதைக்கு அதுன்னு வெச்சுப்போம்.ஒரு கொயர் நோட்டு வாங்கிட்டு வர்றேன்னு சொல்லி, போனது போனது தான்.பக்கத்து கடைல வாங்காம எதுக்கு டௌனுக்கு போனான்னு யாரு சந்தேகப் படலை,காரணம் "அவன் ரொம்ப சமத்து, டௌனுக்கு போய் நன்னா பேரம் பேசி வாங்குவான்" அப்படின்னு அந்த வீட்டு அசடுகளும் நம்பிடுச்சுங்க.ஒழுங்கா வீட்டுக்கு அடங்கியிருந்த அதோட தம்பிகள் கிட்ட "அவன் எவ்வளவு சமத்து தெரியுமா, இன்டலிஜெண்ட் தெரியுமா?" அப்படின்னு கொசுறு புலம்பல் வேற. ஒருவேளை நம்மலும் ஓடி போயிட்டா நமக்கும் அந்த சமத்து பட்டம் கெடைக்கும்னு நெனைச்சா எவ்வளவு விபரீதமாகிடும்?இல்லேன்னா "பீரோவுல இருந்த பாட்டியோட தங்கச் சங்கிலி எங்கே?"ன்னு கேட்டா என்ன பதில் சொல்லும் அந்த அசடுகள்?ஓடிப்போன சமத்து வெறும் கைய்யோட போகலைங்கறது கூட தெரியாதா என்ன?



அவங்களுக்கு என்ன புடிக்கும், என்ன புடிக்காது, யார் நண்பர்கள் , படிக்கிற பழக்கம் உண்டா எதுவுமே தெரியாது.எதையுமே தெரிஞ்சிக்காம, நேரா ஜாதகத்தக் கொண்டுப்போய் ஜோசியன்கிட்ட காமிச்சா அவன் என்ன சொல்லுவான்? வாங்கின காசுக்கு , "கவலையே வேண்டாம், பெரிய ஆளா வருவான்,ஏன்னு கேட்டா, ஓடிப்போனவனுக்கு ஒம்போதுல குரு"







Tuesday, August 23, 2011

பொரி பாலு (இது கதையல்ல கதாபாத்திரம்)






ஹலோ எப்படி இருக்கீங்க? என் பக்கத்து சீட்டுல கதவோரமா சாஞ்சி , குறட்டைவிட்டுக்கிடுருக்காறே அவரப் பத்தி தான் உங்ககிட்ட பேசப் போறேன். அசல் பேர் "பாலு", நாங்கெல்லாம் அவரக் கூப்டறது "பொரி பாலு".லேசா பொளந்த வாயோட...ஒரு நிமிஷம்...போலீஸ் ...சிக்னல் தாண்டினதும் பேசறேன்.. ஒரே நிமிஷம்...


.

.

.

ஹூம் சிக்னல் தாண்டியாச்சு..கேக்குதா?... எங்க விட்டேன்..உம்...? ஆ..ன் ...அவரோட பொளந்த வாய்ல ....பொளந்த வாயோட அவரப் பாக்க பாவமா இருக்கும் ஆனா மனுஷன் படு ஹிம்சை.நல்ல வேளையா ஹியரிங்க் எய்ட கழட்டினதுனால அவரப் பத்தி நான் பேசறது அவருக்கு கேக்காது.அவர் எப்படின்னா வீம்புக்கு...வேண்டாம் என்ன இருந்தாலும் வயசுல பெரியவர் (எனக்கு தாத்தா முறை வேற)...ரொம்ப சவடால் ஆசாமின்னு வெச்சுக்கலாம்.எனக்கு எட்டு வயசா இருக்கும்போது, ஒரு தடவை எங்க வீட்டுக்கு வந்தார், அப்போ நான் பொரி சாப்டுகிட்டுருந்தேன்."என்ன கண்ணு? பொரி புடிக்குமா?"ன்னு கேட்டார்.நானும் ஆமாம்னேன்.அப்பறமா எங்கயோ சூட்கேஸ எடுத்துகிட்டு போனவர், மதியம் மூனு மணிக்கு வந்தார்."உனக்காக தாத்தா என்ன வாங்கிண்டு வந்திருக்கேன் பாரு"அப்டின்னு சொல்லி சூட்கேஸ தொறந்து காட்டினார்.உள்ள லூஸ்ல முப்பது லிட்டர் பொரி பாத்ததும் எனக்கு சந்தோஷம்.எதையுமே இப்படித்தான் ஆர்பாட்டமா,ஆடம்பரமா பன்னுவார்.

பொதுவா சின்ன புள்ளைங்கள பார்க்குல இருக்குற ட்ரெயின்ல கூட்டிகிட்டு போய் கேள்வி பட்டிருப்பீங்க, இல்லேன்னா குதிரைல.இவர் தன்னோட பேத்திகள சதாப்தில மைசூர் கூட்டிகிட்டு போய்ட்டு, திரும்ப அடுத்த சதாப்தில சென்னை வந்திடுவார்.அதுனால இவர 'சதாப்தி பாலு'ன்னும் சொல்லலாம்.



அவரோட அப்பாவுக்கு சதாபிஷேகம் நடத்தினார்.இதுல என்ன அதிசயம்னு கேக்குறீங்களா? அங்க தான் பொரி பாலுவோட தனித்தன்மையே இருக்கு.நிச்சயதார்த்தம், மாப்பிளை அழைப்பு ,ரிசப்ஷன்னு கலக்கிட்டார். அதுலயும் ஒரு வருத்தம் பாவம் அவருக்கு. PC ஷ்ரிராம தான் கேமராவுக்கு ஏற்பாடு பண்ணனும்னு ஆசை, ஆனா முடியலைனு ஒரே பொலம்பல் எல்லார்கிட்டயும்.என்னவோ இவர் புண்ணியத்துல இவரோட அப்பாவுக்கு ஒரு ஷெர்வானியும் , கோட் ஸுட்டும் கெடச்சது.என்ன களுத, அந்த பாட்டிக்குத்தான் அந்த குஜராத்தி புடவைக்கட்டு அவ்வளவு பொருத்தமா இல்ல.இதவிட கூத்து ரெண்டு ப்ராமணாளுக்கு சாப்பாடு போடனும்னு ஜெமினி கனேசனையும், சோவையும் அப்ரோச் பன்னதுதான்.

இப்போ சென்னைலேந்து திருச்சி போய்கிட்டுருக்கோம்.பெரம்பலூர் நெருங்கியாச்சு.சரி இப்போ அதுவா முக்கியம்?



இவருக்கு ஒரு பையன் .சின்ன வயசுல தமிழ்ல ஃபெயிலாட்டான்னு கண்ணதாசன டியூஷனுக்கு ஏற்பாடு பண்ண எவ்வளவோ முயற்சி செஞ்சார்.ஊஹூம் முடியலயே.அப்பறம் தான் அந்த ஸ்கூல வெலைக்கி வாங்கி,பாஸ் பண்ணிட்டான் பையன்... ஆச்சு இருபது வருஷமாகுது.

ஆஸ்பத்திரிக்கு போனப்ப 'சார் உங்க மனைவிக்கு அப்பண்டிசைட்டீஸ்' னு சொன்னப்ப 'சார் என் கிட்ட காசு இல்லைன்னு நினைக்கவேண்டாம், அப்படியே இரண்யா, பைல்ஸ், இத்யாதி, இத்யாதின்னு எது இருந்தாலும் அப்படியே செஞ்சு முடிச்சுடுங்கன்'னு சொன்னாரு.




அவர் பெரிய காந்தியவாதி வீட்டுல காந்தி படத்துக்கு சூடம் காட்டி வழிபடுவார். அதுல ஒண்ணும் தப்பு இல்ல அதுக்காக கொலு அன்னிக்கு காந்தி படத்து முன்னால உக்காந்து ரகுபதி ராகவ ராஜாராம் எல்லாரும் பாடியே ஆகணும்னு சொன்னா எப்படி இருக்கும்? பிள்ளியார் சதுர்த்தி அன்னிக்கு காந்திக்கு தும்பிக்கை வரஞ்சு மகிழ்ச்சி அடைவார். அதோட மட்டும் விட்டுடாம தன் மனைவியை அழைத்து "கண்ணம்மா இங்க பாரு எப்படி இருக்கு? விலை கிடைக்குது கழுத! 2000 ரூபாய் சொன்னான், தும்பிக்கையெல்லாம் இப்படி குறைவா விக்ககூடாதுடா படவா இந்தா 5,000 வச்சுக்கோன்னு கொடுத்துட்டு வந்துட்டேன் கண்ணம்மா! போயிட்டு போறது. நாம் டெய்லி காபி சாப்படறதில்ல? என்று அவரது புரியாத முட்டாள் லாஜிக்குகள் எங்களுக்கு திகைப்பை ஏற்படுத்தியதுண்டு.



பையன் மணி பார்க்கக் கத்துண்டான்னு பெரிய மணிக்கூண்டையே வாங்கிக் கொடுத்தார்னா பாத்துக்குங்களேன். ஆனா அவர் வெறும் அப்பாவி கிடையாது சில சமயம் கொழுப்பா அல்லது தெரியாம உளர்றாரான்னு தெரியாம சில விஷயங்களைச் சொல்வார்.



எங்க மாமா கல்யாணத்தன்னிக்கு வீட்டுக்கு வந்த பயந்த சுபாவ சொந்தக்கார பெண் தான் +2 பாஸ் செய்ததை சொன்னப்போ, இவர் சந்தோஷமா "மார்க் எவ்வளவு?"ன்னு கேட்டார். அந்தப்பொண்ணு அவரது பேச்சை அது வரைக்கும் பாத்துட்டு இருந்ததால கூச்சப்பட்டு பேசாம இருந்தது. உடனே என்ன சொன்னார் தெரியுமா? "சும்மா சொல்லு நாமெல்லாம் பாஸ் செய்றதே பெரிய விஷயம்" பரவால்ல சொல்லுன்னாரே பார்க்கலாம். கழுத்துல மாலையும் கையுமா இருந்த எங்க மாமா சிரிச்ச சிரில மாமாவோட மாமனாரோட பல்செட்டே கழண்டு விழுந்துடுச்சு தெரியுமா? இது மாதிரி முன்னபின்ன தெரியாதவங்க கிட்ட இங்கிதம் (நாம இது போன்ற அச்சுப்பிச்சுக்களையெல்லாம் மனசுல ஒண்ணும் இல்லைன்னு அப்பாவி பட்டம் கொடுத்து தூக்கி வைப்போம்! ) இல்லாம பேசுவார். ஒரு தடவை இப்படித்தான் ஒரு நிச்சயதார்த்ததிற்கு அவரைக் கூட்டிட்டு போய் பெருத்த அவமானமா ஆயிடுச்சு. யாருக்கு எங்களுக்கு இல்லை, அவங்களுக்கு! யாரோ ஒரு மாமி கதவோரமா கூச்சப்பட்டுட்டு பாய், விளக்கமாறு ,ஒரு தண்ணி சொம்பு ,விகடன் , குமுதத்தோட இருந்தாங்க.பாத்தாலே தெரியும் அவங்க நிலைமை .""என்ன மாமி நீங்க லீவா?".அவர அடக்கறதுக்குள்ள அடுத்த கோல் போட்டுப்புட்டார் "எப்போ குளிக்கறேள்?".எல்லார் மூஞ்சியிலும் அசடு வழிய அவருக்கோ உச்சந் தலைல செருப்பால அடிச்ச சந்தோஷம்!



தன்னோட பொண்ணுங்க நல்ல படிக்குதுன்னு தெரிஞ்சவுடனேயே, 6வது படிக்கற அவங்களுக்கு எம்.ஏ. சீட் வாங்கிக் கொடுக்க காலேஜ் காலேஜா ஏறி ஏறங்கினார்னா பாருங்களேன்!



பையன் ஏ, பி. சி அப்படீன்னு எழுத ஆரம்பிச்சவுடனேயே ‘இந்து’ பேப்பர்ல சேத்து விட்டுட வேண்டியதுதான்னு எல்லார்கிட்டையும் பெருமை அடிச்சுகிட்டப்ப தங்கப்பதக்கம் படத்துல கே.ஆர்.விஜயா 'தங்க மகனை பெற்றவள் என்று என்னை உலகம் சொல்லி மகிழும்"னு குழந்தை ஸ்ரீகாந்தைப் பார்த்துப் பாடும்போது நமக்கு எப்படி பாவமாக இருக்குமோ அப்படித்தான் இருந்தது என்று என்னோட தாத்தா அடிக்கடி சொல்வார்.



இப்படித்தான் வாட்ச், செல்போன் எல்லாத்திலும் கணக்கு வழக்கு இல்லாம வாங்குவார். கேல்குலேட்டர் கேட்ட கம்ப்யூட்டர் வாங்குவார். கம்ப்யூட்டர் கேட்டா சூப்பர் கம்ப்யூட்டர் வாங்குவார். கல்யாணம் பண்ணினா 60ஆம் கல்யாணமும் சேர்த்தே செஞ்சிடலாம்பார். குழந்தை பிறந்தா மறுபடியும் அப்படியே எல்லாம் ரிபீட் என்பார். அவரை கிராக்கா இல்ல அப்பாவியான்னு இன்னிவரைக்கும் கண்டே பிடிக்க முடியல்ல.

இவர் தன்னோட காச மட்டும் தான் இப்படி செலவு பண்ணுவார், இவர் பையன் பொதுவுடைமைக் கொள்கைய தவறா புரிஞ்சுகிட்டவன்.வருஷத்துக்கு இவ்வளவு லட்சம்ன்னு டார்கெட் ஒண்ணு செட் பன்ன வேண்டியது, கெடைச்சவங்க கிட்ட ஆட்டைய போடறது , அப்பறம் ஆள் எஸ்கேப் ஆக வேண்டியது. இதுதான் அவனோட பிஸிணஸ் மாடல்.கைல இருக்குற பணம் தீர்ந்து போறவரைக்கும் எங்க இருக்கான்னே தெரியாது.தீர்ந்ததுக்கப்புறம் ஒரே ஒரு ஃபோன் வரும், இந்த ட்ரெயின்ல வர்றேன்னு.சீக்கு வந்த கோழி மாதிரி வருவான், அவன தூக்க ரெண்டு பேரோட போனா புதுசு புதுசா எதாவது சொல்லுவான்.ஆனா வர்றதென்னவோ ஏஸி ல தான். பொதுவா எல்லா வருஷ கதையிலையும் ஒரு ஒற்றும இருக்கும். "பணத்தோட போனேன், என்ன கடத்திட்டாங்க". "குனிஞ்ச தல நிமிராம முயல், காடைன்னு எல்லாம் சாப்டுவான் , கீழ சிந்தாம நல்லா குடிப்பான்.பொழப்பா அதையே செஞ்சாலும் வருஷத்துக்கு 6 - 7 லட்சம் எப்படி தான் செலவு செய்யறான்னு தெரியல" ன்னு பொண்டாட்டிகிட்ட கதறுவார்.உடனே சூனா பானா வடிவேல் மாதிரி சுதாரிச்சிகிட்டு "விட்றா ,விட்றா ஸுனா பானா"ன்னு ஒரு மூனு லட்ச ரூபாய் செலவுல கணபதி ஹோமம் செஞ்சி தன்னோட கெத்த எஸ்டாப்லிஷ் செய்வார்.வருஷம் தவறாம ஹோமம் செஞ்சி வெக்கற 'வைத்தி சாஸ்த்ரிகள்' வருமானம் இல்லேன்னா இவர் கிட்ட வந்து "எங்க சார், சன் வெளியூருக்கு போயிருக்காறா?"ன்னு கேக்கும்போதெல்லாம் புளிய கரைக்கும் பொரி பாலுவுக்கு.அடுத்த தடவை இந்த மாதிரி காணாம போனா எல்லா சொத்தையும் வித்து காசாக்கி எலிகாப்டர்லேந்து பணத்த கீழ வீசுவேன் ஜாக்கிரதைன்னு சொல்லி மெரட்டியும் பாத்துட்டார்; கேட்டா தான அவன்?

இதெல்லாம் விட அவனுக்கு கடன் குடுத்து ஏமாந்தவன் வீட்டுக்கு வசூல் செய்ய வரும்போது அவங்கள சமாளிப்பார் பாக்கனும், நம்ம கண்ணே பட்டுடும். "என்னப்பா இது? நீயாவது ஏமாந்திருக்க, அவன் பாவம்.. ஏமாத்திட்டு எப்படி பரிதாபமா இருக்கான் பாரு, அவன தொந்தரவு செய்யாத போ"ன்னு சொல்லுவார். கடன்காரன் இவர் சொல்றது புரியாம குழம்பிபோய்டுவான், எப்படியும் இவர் எதயாவது வித்து கடன அடைச்சிடுவார்னு தெரியும் அவங்களுக்கும்.



எவ்வளவு வேகமா போனாலும் பின்னாடியே வர்றானே அந்த சூமோ... சரி அத விடுங்க..

அப்புறம்.. ஐயோ எழுந்துட்டார், ஹியரிங்க் எய்ட மாட்டிகிறார்.ஃபோன அப்படியே கட் பண்ணாம வெக்கறேன் கேளுங்க அவர் பேசறத, உங்களுக்கே புரியும்.



"என்ன கண்ணு திருச்சி வந்தாச்சா?"

"வந்தாச்சு"

"என்ன அந்த சூமோ பின்னாலியே வர்றான் போல இருக்கு?"

"ஆமாம் சென்னைலேந்தே இருபதடி பின்னாடி தான் வர்றான்"

"சரி ஒரு ஓரமா நிறுத்து, டெஸ்ட் ட்ரைவ் போதும், வண்டில துளி சத்தம் இல்ல, நல்ல வண்டி, அவனுக்கு ஒரு செக் போட்டு தந்துடலாம், அடுத்த வாரம் டெலிவெரி எடுப்போம்,பின்னால வர்ற டீலர் வண்டிக்கும் போக வர டீசல் பணமும் குடுத்துடலாம்."



ஹியரிங் எய்ட கழட்டிட்டார், சாரி மொபைல்ல சார்ஜ் இல்ல அப்புறம் பேசறேன். பை ஃபார் நவ்!

.



Wednesday, June 29, 2011

ரைட்டர் மாமா







பீங்கான் கிளோஸட்டின் மேல் உட்கார்ந்திருக்கும்போது தான் அந்த அலைபேசியில் அழைப்பு வந்தது.பெருத்த சிரமங்களுக்கு பிறகு எப்படியோ சமாளித்து பெர்முடாஸ் பாக்கெட்டிலிருந்து எடுத்து பேசினேன்.
"ஹாய் ,ஹௌ இஸ் இட் கோயிங்க்?" என்றது மறுமுனை.லூஸ் மோஷனென்று சொல்லவா முடியும்?"ஃபைன்" என்றேன்.
"உங்களோட சிறுகதைகள் படித்தோம், கண்டிப்பா பப்ளிஷ் செய்யறோம், ஆனா மொத்தம் 12 கதைகளாவது வேணும். நீங்க பதினோறு கதை தான் குடுத்தீங்க.இன்னும் ஒரே ஒரு கதை மட்டும் இன்னிகுள்ள கொடுத்தா போடலாம், இல்லேன்னா எங்க MD வெளிநாடு போறார், திரும்ப வர ஆறு மாசமாகும்".
கதையென்ன மேகி நூடில்ஸா கேட்ட ஒடனே குடுக்க? என்று கடுப்பானேன் மனதிற்குள்.
"சரி அனுப்பறேன்" என்று சொல்லி விட்டு கதை யோசித்தேன்.ஒரு மண்ணாங்கட்டியும் தோன்றவில்லை.ஒரு வித விரக்தியோடு ஃப்லஷ் செய்துவிட்டு வெளியேறினேன்.
தவறு தான் என்று தெரிந்தும் எனக்கு சொந்தமில்லாத அந்த பழுப்படைந்த புத்தகத்தை எடுத்து என்(?!) பனிரெண்டாம் கதையை ப்ரதி எடுக்க ஆரம்பித்தேன்.அந்த புத்தகத்தின் எல்லா பக்கங்களிலும் பிள்ளையார் சுழிக்கு பதிலாக "ரைட்டர் சுவாமிநாதன்" என்ற ரப்பர் ஸ்டாம்ப் என் நினைவலைகளை பின்னோக்கி இழுத்தது.


சுவாமிநாதன் ,ஆரம்பத்தில் "போஸ்ட் ஆஃபீஸ் மாமா" என்று அழைக்கப் பட்டவர், பிற்பாடு "கதை மாமா" என்று பெயர் மாற்றம் கண்டு, கடைசியாக அவரே வைத்துக்கொண்ட பெயர் தான் "ரைட்டர் சுவாமிநாதன்".எந்நேரமும் போஸ்ட் ஆஃபீஸில், கதை அனுப்பவோ அல்லது அனுப்பிய கதையை திரும்பப் பெறவோ இருப்பார் என்பதால் அவருக்கு அப்படி ஒரு பெயர் இருந்தது."தெனமும் கட்டுக் கட்டா கடிதாசி வருது உங்களுக்கு , நீங்களே தெனமும் வந்து வாங்கிக்கங்க. பொணம் கனம் கனக்குது" என்று போஸ்ட்மேன் அலுத்துகொள்ளும் அளவுக்கு அவர் கதைகள் பிரசித்தம்.பெரிய கவிஞர்கள் ஊட்டி , கோடைக்கானலுக்கு போய் கவிதை எழுதுவது போல், இவர் போஸ்ட் ஆஃபீஸில் தான் பெரும்பாலும் கதை எழுதுவார்.பேருக்குத்தான் அவர் வக்கீல் குமாஸ்த்தா.


இவரை வம்பிழுப்பது தான்,அந்த வயதில் எனக்கு ஹீரோவாகத் தெரிந்த ஜெயா சித்தப்பாவுக்கும் , எனக்கும் ஆகச் சிறந்த பணி.சித்தப்பா சிரிக்காமல் எதாவது செய்வார் நான் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து திட்டு வாங்குவேன்.யாரும் தன்னை எழுத்தாளனாக அங்கீகரிக்காத காரணத்தால் , அவரே வெள்ளை பெயிண்ட்டால் "Writer சுவாமிநாதன்" என்று போர்டு போட்டுக் கொண்டார். அப்போ மாமா கிரிஸ்டியனா மாறிட்டார்னு ஊரெல்லாம் சொன்னது அல்லது தட்டி விட்டது சித்தப்பா தான்.ஆங்கிலத்தில் பெயர் இருந்ததால் அப்படித்தான் எல்லோரும் நம்பினார்கள்.
"ஏன்டா அவரப்போய் கோட்டா பன்ற? இங்க வந்து ஒரு குரல் அழுதுட்டு போய்ட்டார் பாவம்" என்று சிரிப்பை அடக்கியவாறே அப்பா கேட்டார்.
"பின்ன என்ன, மனுஷன் நிம்மதியா, பம்பு செட்ல குளிக்க முடியல. கத புஸ்தகத்த எடுத்துண்டு வந்துடறார்.குளிக்கப்போறேன்னு சொன்னா, நீ குளி நான் பம்பு செட் மேல ஒக்காந்துண்டே சத்தமா சொல்றேன் கேளுங்கறார்.யோசிச்சி பாரு , பாவம் பைப் மேல ரெண்டு பக்கமும் காலப் போட்டுண்டு, தொண்ட வத்த யாரு கத்த சொன்னா அவர? "
"என்னவோ இன்சல்ட் பன்றான் ஜெயான்னு சொன்னாரே?"
"அதுவா? கதைய கவனமா கேக்கறேனான்னு ஒரு சந்தேகம் அவருக்கு, சும்மா நடுவுல டெஸ்ட் மாதிரி கேள்வி கேட்டார்."கதைல ராஜாமணி எப்போ வீட்டுக்கு திரும்பினான்னு', அதுக்கு நான் சொன்னேன் நான் கஷ்கத்துக்கு சோப் போடும்போதுன்னேன்.நெஜமாவே அவரோட கதைல ராஜாமணி வீட்டுக்கு வரும்போது அத தான் பண்ணிண்டிருந்தேன்".


அழகு நிலையம் என்ற ஒரு சலூனில் தான் நானும் சித்தப்பாவும் முடி திருத்தம் செய்து கொள்வோம்.நாங்கள் அங்கு செல்லும்போது ரைட்டர் மாமாவும் சில சமயத்தில் ஆஜர் ஆவார்.முதலில் மரியாதையாக இருப்பது போல் சித்தப்பா நடந்து கொள்வார், "மாமா நீங்க இது வரைக்கும் எவ்வளவு கதை எழுதியிருக்கேள்?".தன்னை மதித்து யாரோ பேட்டி எடுப்பதில் மாமாவுக்கும் மகிழ்ச்சிதான்.யோசித்தபடியே "சுமாரா.... எழுவது கதை எழுதியிருக்கேன் இது வரைக்கும்" என்றார்."ஓஹோ எழுபதும் சுமாராதான் எழுதியிருக்கேளா? அதான் போனோம் வந்தோம்னு குடு குடுன்னு திரும்ப வர்றது" என்று சித்தப்பா சொல்லும்போது எனக்கு முடி திருத்தம் செய்தவர் சிரித்ததைப் பார்த்து என் காதை வெட்டிவிடுவாரோ என்று நான் பயந்து விட்டேன்.சிரிப்பை அடக்கியவாறே முடி திருத்தம் செய்பவர், "அந்த லாட்டரி தீர்ந்து போச்சு எடுத்து மாத்து" என்று அங்குள்ள ஒரு அப்ரஸன்டியை பணித்தார்.லாட்டரி டிக்கட் வழக்கதிலிருக்கும்போது காலம் கடந்த டிக்கட்டுகளை சலூனில் உபயோகிப்பார்கள் என்பது உபரித் தகவல். உடனே சற்றும் தாமதிக்காமல் சித்தப்பா "லாட்டரி எல்லாம் வேண்டாம் , மாமா நெறைய வேஸ்ட் பேப்பர் வெச்சிருப்பாரே" என்று சொல்ல இல்லாத முடியை வெட்டிக் கொள்ளாமலே சீற்றத்தோடு வெளியேரினார் ரைட்டர் மாமா."நீங்க Retard ஆனதுக்கப்புறம் தான் கதை எழுத ஆரம்பிச்சேளா? அதாவது Retire ஆனதுக்கப்புறம்" என்று சித்தப்பா செடுக்கு வாரியை எடுத்து தலை வாரிக்கொண்டே கேட்டபோது ஓட்டமும் நடையுமாக சென்றார் ரைட்டர் மாமா.


அன்று என் தாத்தாவுக்கு திவசம். அதற்காக லீவ் வேண்டி லெட்டர் எழுத சித்தப்பாவை கேட்டேன். "நம்ம ஊர்லயே , எல்லா எழுத்தையும் மொத்த குத்தகைக்கு எடுதிருக்காரே ரைட்டர் மாமா அவரப் போய் கேளு" என்று சொல்ல நானும் போய் நன்றாக வாங்கிகட்டிக் கொண்டது தான் மிச்சம்.
"உன்னோட சித்தப்பாவோட சேந்து நீயும் கெட்டுக் குட்டி செவுராப்போர பாத்துக்கோ"என்றபோது அவர் கண்ணில் லேசான கண்ணீர் வந்தது போல் லேசாக நியாபகம்.
"இரு இன்னிக்கி என்னை தான் விஷ்னு எலைக்கு கூப்ட்டிருக்கா, உங்கப்பா கிட்ட சொல்றேன்".


அபயம் தர சித்தப்பா இருப்பதால் எனக்கொரு பயமும் இல்லை.அவர்கள் இருவரையும் ஒரே இடத்தில் பார்ப்பது என்பது எனக்கு தீபாவளி பண்டிகைப்போல் இருக்கும்.
சித்தப்பா மெதுவாக ஆரம்பித்தார் "மாமாவுக்கு , பச்சிடி போடுங்கோ, எலைல அந்த எடம் மட்டும் காலியா இருக்கே...".
அப்பாவியாக மாமா "இல்லே நான் கேட்டு வாங்கிக்கறேன்".
"அதுக்கில்ல , எலைல எடம் காலியா இருக்கேன்னு எதயாவது எழுத ஆரம்பிச்சிடப் போறேள்னு தான் சொன்னேன்". கிண்டல் செய்ய ஆரம்பித்தால் சித்தப்பாவுக்கு ஈவு இறக்கம் என்பது அறவே இருக்காது.அம்மா , அப்பாவுக்கு தான் தர்ம சங்கடமாக இருக்கும். எனக்கு கொண்டாட்டமா இருக்கும்.அப்பா வரவழைத்துக் கொண்ட கோபத்தொடு "நிறுத்து ஜெயா" என்பார்.


அதற்கெல்லாம் கொஞ்ச நேரம் தான் சித்தப்பா அடங்குவார்.பச்சடியைப் பார்த்து பார்த்து சிரித்துக் கொண்டிருந்தேன் நான்."ஒழுங்கா சாப்டுடா" என்று எனக்கும் அர்ச்சனை தொடங்கும் வரை.அடுத்து ரசம் பரிமாற வரும்போது தான் மிகவும் சீரியசாக முகத்தை வைத்துக் கொண்டு சித்தப்பா கேட்டார்"ஏன் மாமா இந்த சிங்கர்ஸ் எல்லாம் மோர், ஐஸ் எல்லாம் சாப்டாத மாதிரி , இந்த ரைட்டர்ஸுக்கும் எதாவது இருக்கா? காரமா ரசம் பெசஞ்சி சாப்ட்டா வெரல் எரியும் அந்த மாதிரி?".
அப்பா: "ஜெயா.. போறும்"...
"மன்னி, அண்ணாவுக்கு ரசம் போதுமாம்",சற்றும் தளராத சித்தப்பா.
மாமா:"எனக்கு மோர் தான்,ரசம் வேண்டாம்".
சித்தப்பா "ச்ச ச்ச சும்மா கேட்டேன்... நீங்க ரசம் சாப்டுங்கோ, வெரல்ல படாம டம்ப்ளர்ல வேணும்னா ஊத்தி குடிங்கோ, சூடா இருந்தா ஆத்தி குடுங்கோ... மாமா கவனிச்சேலா? நான் கூட கவித மாதிரி பேசறேன் எல்லாம் உங்க ஆசிர்வாதம் தான்..இல்ல?".
இப்போது ரசத்தைப் பார்த்து சிரிக்க தொடங்கினேன்.


கோடை விடுமுறைக்கு பெங்களூர் சென்று என் அத்தையையும் அவள் மகனையும் அழைத்து வர நாங்கள் எல்லோரும் போவதாக இருந்தது.ஒரு வாரம் முன்னாலே, ரைட்டர் மாமாவிடம் பால் கார்டுக்கான காசு, EB கார்ட், நியூஸ் பேப்பர் காசு கொடுக்க அப்பா கிளம்பினார்.
"எங்கே ஷேக்ஸ்பியர் ஆத்துக்கா?" என்று கேட்டார் சித்தப்பா.
"ஆமாம் ஒன்ன அனுப்பினா ரசாபாசமாகிடும்" என்று புன் முறுவலோடு சொல்லி அப்பா கிளம்ப., சித்தப்பாவின் கண் சாடையை புரிந்து கொண்டு நாங்களும் பின்னாலே சென்றோம்.நாங்கள் உள்ளே நுழையும்போது எதையோ எழுதிக் கொண்டிருந்த ரைட்டர் மாமா, "வாங்கோ வாங்கோ.. ஒரு த்ரில்லர் எழுதிண்டிருந்தேன்" என்று ஊஞ்சலை காட்டினார்.சித்தப்பா "அடடே அப்படியா? பயப்படாம எழுதுங்கோ, பயமா இருந்தா ஹனுமான் சாலிஜா சொல்லிண்டே எழுதுங்கோ".
"பெங்களூர் ட்ரெயின்ல போகும்போதும் வரும்போதும் வழில படிக்க இந்த ரெண்டு புக்ஸ் வெச்சிக்கோங்கோ.நானே எழுதனது தான்", என்று தானே பைண்டிங்க் செய்த தடிமனான புத்தகங்களை கொடுத்தார்.
"இதுக்கு தனியா லக்கேஜ் போடப் போறா" என்றார் சித்தப்பா, சுவரில் மாட்டியிருந்த ஃபோட்டோவைப் பார்த்தபடி.அதில் ரைட்டர் மாமா, பேனா மூடியை கடித்தபடி போஸ் கொடுத்திருந்தது போனஸ் காமெடி.
எதையும் கவனிக்காமல் மாமா "உஷாவும் அவ புள்ளையும் வருவா இல்லயா, அந்த பையனுக்கு குழந்தைகள் கதைகள்னு வெச்சிருக்கேன்".
"மாமா அவனுக்கு தமிழ் படிக்க தெரியாது, வேனும்னா கன்னடத்துல ட்ரான்ஸ்லேட் பன்னி வையுங்கோ".
"நான் உங்கிட்ட பேசத் தயாரா இல்ல" என்று கொஞ்சம் கோபமாகி சொல்லி அப்பாவிடம் "இதுல ஒரு சாமியர பத்தி ஒரு கதை இருக்கு..அதுல" என்றவரை பாதியில் இடைமறித்த சித்தப்பா "இப்படியே போனா ட்ரெயின விட்டுடுவோம்" என்றார்.
"அடுக்த்த வாரம் தான சொன்னேள்?"
"எதுக்கும் ஒரு முன்னெச்சரிக்கை தான்" என்று கண்ணை சிமிட்டினார் சித்தப்பா.
"மாடர்னா எழுதறேள், போஸ்ட் ஆஃபீஸ்ல எழுதறேள் , நீங்க தான் மாமா போஸ்ட் மாடர்ன் ரைட்டர்"என்று சித்தப்பா சொன்னது அப்போது எனக்கு புரியவில்லை.ஆனாலும் சித்தப்பா சொன்னால் சிரிக்க வேண்டும் என்ற கடமையுணர்ச்சியோடு சிரித்தேன்.
நாங்கள் எல்லோரும் வீட்டை நோக்கி நடக்க தொடங்கினோம். அவர் கொடுத்த புத்தகங்களைத் தவிற இன்னுமோரு புத்தகத்தை ரகசியமாக மறைவாக வேட்டியிலிருந்து எடுத்து கொடுத்த சித்தப்பா, "இது இல்லேன்னா அவர் போய் சேர்ந்துடுவார்.ஒனக்கு எப்போவாவது யூஸ் ஆகும்" என்று கொடுத்தார். அது பழுப்பேரிய ஒரு புத்தகம். இப்போது சிதப்பாவும் இல்லை ரைட்டரும் இல்லை.அவர் கதைகளின் மூலம்(!) இப்போது தான் புரிகிறது. பப்லிஷரிடம் சொல்லி அவருக்கு ஒரு நன்றி சொல்லும் பக்கம் ஒதுக்க வேண்டும். என் சிறுகதை தொகுப்பு முழுமைப்பெற அவரும் ஒருவிதத்தில் காரணம்.








.

Thursday, June 2, 2011

கிச்சா மாமா - 1

வழக்கம் போல நேத்திக்கு எங்க மாமாவுக்கு ஃபோன் செஞ்சேன்.அப்போன்னு பாத்து அவரோட லேண்ட்லைன் ஃபோனுக்கு எதோ கால் வந்தது.

மாமா: "ஒரு நிமிஷம் லைன்லயே இருடா, யாருன்னு பாக்கறேன்"

சரி அவர டிஸ்டர்ப் பண்ண வேண்டாமுன்னு அவர் பேசறத மட்டும் ஒட்டு கேட்டேன்.

"அடடே நீங்களா? சொல்லுங்கோ"

"எக்மோர் வந்தாச்சா? கண்டிப்பா இப்பவே கெளம்பி வரேன்"

"இல்ல இல்ல, எதுவும் வெளில சாப்ட வேண்டாம், இங்கே எல்லாம் இருக்கு, சமயல் வட பாயசத்தோட பன்னிட்டா இவ"

"வேண்டாம் வேண்டாம். ஃபரெண்டுக்கெல்லாம் அப்பறமா இங்க வந்து சேர்ந்துட்டு சாவகாசமா பேசிக்கலாம், தோ வந்துட்டேன்"

ஃபோன் வெச்ச சத்தம் கேட்டது.


"ஹூம் சொல்லுடா என்ன பண்ற? அங்க ராத்திரியா?"


"சும்மா தான் பன்னேன், யாரு மாமா ஃபோன்ல?"


"பாவம்டா யாரோ சேஷாத்ரியாம், சந்தானம் இருக்காரான்னு கேட்டார், யர்லி மார்னிங்க் டிசப்பாய்ண்ட் பன்ன வேண்டாமேன்னு கொஞ்சம் பேசிண்டிருந்தேன், ராங்க் நம்பர்னு வெச்சிக்கோயேன்"

அதிர்ந்த்து போய் நானும் ஃபோன வெச்சிட்டேன்.



Tuesday, May 31, 2011

ரதிலீலா



கோக்கக் ஃபால்ஸில் தவணை முறையில் நனைந்துவிட்டு , நடையைத் துவக்கினோம்."படங்க்" என்கிற உப்பும் மஞ்சல்பொடி சேர்த்து வருத்த பொரியுடன், கடலை, பொரித்த முழுநீள பச்சை மிளகாய், பச்சை வெங்காயம் , எலும்பிசம்பழச் சாரு கலந்து கொடுக்கப்படும் சமாச்சாரம்.குளித்தவுடன் கொறிக்க ஏற்றதாக இருக்குமென்பதால் அதை வாங்கினோம் .பண்டத்தின் பெயரென்னவோ ஒரு பின்னவீனுத்துவ நாவலின் முதல் ஆறு வரிகள் போல் கரடு முரடாக இருந்தாலும் , அது மிகவும் எளிமையாகவும் சுவையாகவும் இருக்கும் என்பதை உடுப்பி கோவிலில் சத்தியம் செய்யலாம்.வழக்கம் போலவே , பெல்காமில் வேலைக்கு சேர்ந்த இந்த ஐந்தாண்டுகளில் தான் கற்ற எல்லா கன்னட சொற்களையும் ஒரே சொற்றொடரில் பயன்படுத்தியபடி ரவி "காரா ஜாஸ்தி , ஸ்வீட்டு பேடா , ஈருள்ளி ஜாஸ்தி" என்றான்.ஆளுக்கோரு படங்க் பொட்டலதுடன் நடையைத் தொடர்ந்தோம்.படங்க் தீரும்போது அருண் தான் கத்தினான் "ஏய் தமிழ்ல ஏதோ எழுதியிருக்கு இந்த பேப்பர்ல".போன மாத ராணி கிடைத்தால் கூட படிக்கும் அளவுக்கு அங்கு தமிழ் வறுமை எங்களிடத்தில் இருந்ததால் இதைக் கூட விட மனது வரவில்லை.அது ஒரு டைரியிலிருந்து கிழிக்கப்பட்ட காகிதம்.நாள் கிரமப்படி அதை வரிசைபடுத்தினோம்.



இனி டைரி...............



டிசம்பர் 27

"டெல் மீ சம்திங்க் அபௌட் யுவர்செல்ஃப்" என்ற சம்பிரதாயக் கேள்வியோடு நேர்காணலைத் துவக்கினேன்.வசுதாவின் வனப்பின் காரணமாக என் பார்வை நேர்காணலாக இல்லாமல் ,கொஞ்சம் புத்தியின் கோணலுக்கு ஏற்ப தாழ்ந்து நேர்கோணலாக சென்றது."ஐ அம் வசுதா , ஐ ஹாட் மை ப்ரைமரி எஜுகேஷன்..." என்று அவள் சொல்லச் சொல்ல வலுக்கட்டாயமாக என் பார்வையை நேர்படுத்திக்கொண்டேன்."....மை ஃபாதர் இஸ் நோ மோர் , மதர் இஸ் அ டெய்லர்" . ஒரு இந்திய ஏழைக்குடும்ப டெம்ப்ளேட்டில் கச்சிதமாக பொருந்தியது.அழகு , ஏழ்மை , படிப்புத்தகுதி ."எப்போ வேலைல சேரமுடியும்?"என்றேன்.அவசரமாக.கண்களில் நீர் முட்டியவாறே "உடனே , எப்போ வேணும்னாலும்" ."சரி நாளைக்கே சேந்துக்கோ , ஆல் தி பெஸ்ட்" என்று கையை நீட்டினேன்.அவள் கைகுலுக்களில் அழுத்தமும் , கையின் மென்மையும் ,சில்லென்ற ஐஸ்கிரீமில் சூடான குலாப் ஜாமுன் விழுந்தது போல் இனித்தது. இந்த இரவு அலாஸ்கா ஹைவே போல் நீண்ட இரவாக இருக்கும் :-( ..

குட் நைட்!

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

டிசம்பர் 28

இன்று காலை வசுவை ஒருவன் பைக்கில் கொண்டுவிட்டதும் ரொம்பவே பதறிவிட்டேன், அவனைப்பற்றி தெரிய வேண்டியது அவசியம் என்பதால் நானே வலிய சென்று பேச்சு கொடுக்தேன்,"குட் மார்னிங்க் வசு,

சார் யாரு?"."இது எங்க அண்ணன் மோகன் , அண்ணா இது என்னோட MD ரமணி".மோகனின் ஹலோவில் நேற்றுட்கொண்ட மலிவான மதுவின் நெடி லேசாக வந்தது.ஏழ்மை மற்றும் குடிப்பழக்கம் சேர்ந்த,ஒரு

அழகிய பெண்ணின் அண்ணன். மீண்டும் அதே இந்திய ஏழைக்குடும்ப டெம்ப்ளேட்!."மோகனுக்கு அக்கௌன்ட்ஸ் நல்லாத் தெரியும், அதான் உங்க கிட்ட சொல்லி வேலை கேக்கலாம்னு கூட்டி வந்தேன்" என்றாள் வசு.

"தாராளமா...இன்னிக்கே சேரலாம்...பர்ஸனல் டிபார்ட்மெண்ட் சந்தானம் கிட்ட சொல்லி ஒடனே ஜாயின் பன்னிக்கலாம்" என்று நான் சொல்லும்போதே சந்தானம் வந்தது நல்ல சகுனமாகபட்டது.மோகன் சந்தானத்திடம் "சார் நான்.." என்று துவங்கும் முன்பே சந்தானம் எங்கள் நிறுவனக் கொள்கையை சொன்னார், இங்கே சார்-மேடம் பிஸ்னஸ் கிடையாது,ரமணி உள்பட எல்லாரையும் பேர் சொல்லி கூப்பிடலாம்.வசுதாவின் சிரிப்பில் கட்டிலைக் கண்டேன் நான். அவள் தோள் மேல் என் கையை போட்டபடி உள்ளே செல்ல , நன்றியோடு பார்த்தான் மோகன். இவனை வைத்தே நினைத்ததை சாதிக்கலாம்!! குட் நைட், சுவீட் ட்ரீம்ஸ் :-)

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------



டிசம்பர் 30



"அவசரமா புனே போகனும், கெளம்பு வசு , கார்லயே போகலாம்" என்றதற்கு கொஞ்சம் தயங்கிப் பின் "அண்ணாவும் கூட வரலாமா?" என்றாள்.அவனை எப்படியாவது கழற்றிவிட்டுவிடலாம் என்ற நம்பிக்கையில் சம்மதித்து,கிளம்பினோம்.முன் சீட்டில் மோகன் அமர , பின் சீட்டில் நானும் வசுவும் அமர்ந்தோம்.பெல்காமை விட்டு கிளம்பும்போது கொஞ்சம் ஆஃபீஸ் விஷயங்கள் பேசினாலும், சிறிது நேரத்தில் பேச்சு மாறி
என் மேலை நாட்டு படிப்பு மற்றும் , நாற்பதாண்டு கடந்தும் திருமணமாகாத கதை, பல லட்சம் மதிப்புள்ள சொத்து பற்றி எல்லாம் சொன்னேன்.வசு அமைதியாக இருக்க மோகன் பேசினான், "என்னோட அம்மா நான் பதிமூனு வயசிருக்கும்போது போய் சேந்துட்டாங்க , அப்பா ரெண்டாம் கல்யாணமாத்தான் வசுவோட அம்மாவ கட்டிகிட்டார், இவ போறந்த நாலு வயசுலயே, அவரும் போய்ட்டாரு, இவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையனும்.. ஹூம்..."."அதுக்கு நான் இருக்கேனே" என்று அவள் தலையை தடவிக்கொடுக்க அவள் அழுதுகொண்டே என் மீதி சாய்ந்தாள்.அவள் கண்ணத்தின் ஈரம் என் தோல்களில் பரவ புனே வந்து சேர்ந்தோம்.வழக்கமாகத் தங்கும் "ஹோட்டல் மிலன்"இல் ஒரு டபுள் ரூமும் , ஒரு சிங்கிள் ரூமும் வாடகைக்கு எடுத்திருக்கிறோம்."மோகன், நாளைக்கு காலைல வசுவுக்கு கொஞ்சம் பேங்க்ல வேலையிருக்கு, அதை பத்தி கொஞ்சம் பேசனும் அதுனால, நானும் வசுவும் ஒரே ரூம்ல தங்கறோம் " என்று சொன்னதும், மோகன் ஓ யெஸ் என்று சொல்லி விட்டான்."நாளைக்கு வசு பேங்க் போனதும் , நீங்க என்ன பத்து மணிக்கு வந்து பாக்க முடியுமா? உங்க கிட்ட கொஞ்சம் தனியா பேசனும் மோகன்". "கண்டிப்பா வருவேன், கண்டிப்பா...",அவன் சிரிப்பதைப் பார்த்தால் அவனுக்கு புரிந்தது போல் தான் தோன்றுகிறது, நாளை பார்ப்போம்."கீழே போய் எதாவது சாப்டுங்க மோகன்" என்று பாரின் திசையைக் காட்டி பணமும் கொடுத்தாயிற்று இனி அவன் தொந்தரவு இருக்காது.வசு என்னறையில் தான் இருக்கிறாள்.நான் இதை எழுதும்போது பத்தடி தூரத்தில் நின்றுகொண்டு உடை மாற்றிக் கொண்டிருக்கிறாள்.நான் எழுதுவது அவளைப்பற்றி என்று தெரியாமல். ஏஸியிலும் சூடாக இருக்கிறேன் நான்.இன்று குட் நைட்டாக இருக்குமா என்பது சந்தேகமே :-(

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

"ச்ச என்ன ஆச்சுன்னு தெரியலைனா தலையே வெடிச்சிடும்.. வாங்கடா போய் பாக்கலாம்" என்று ரவி முட்டி மோதி படங்க் வண்டியை நோக்கி ஓடினான், நாங்களும் பின் தொடர்ந்தோம் ஓட்டமும் நடையுமாக அந்த தள்ளுவாண்டியை முற்றுகையிட்டோம்.குழம்பியபடி எங்களைப் பார்த்த படங்க் விற்ற பெரியவர், கொஞ்சம் சுதாரித்தபின் அந்த டைரியின் கடைசிப் பக்கத்தை எடுத்து தனது ஹரிக்கேன் விளக்கை துடைக்க துடைக்க, கரியேரிக் கிழிந்தது ஏதொ ஒரு ஆண்டின் கடைசி -நாள்.கீழே எரியபட்ட டைரியின் முன் அட்டையில் எழுதியிருந்த

மிஸ் ரமணி ரதிலீலா MS., MBA.,

மேனேஜிங்க் டைரக்டர்,

ரெயின்போ கார்மெண்ட்ஸ் , பெல்காம்.

என்பதைப் பார்க்க நாங்கள் மூவருமே தவறிவிட்டோம்.







.















Wednesday, April 20, 2011

மாயவலை - (முடிந்து தொலைந்தது)


மாயவலை - 1
டிரிங்க் என்ற சத்தம் கேட்டு விழித்தேன்.நான் இப்போது தோட்டத்தில் .ரோஜாத் தோட்டத்தின் எழிலுக்கு சிறிதும் தொடர்பில்லாமல் ஒரு வெப்ப அலை என் மீது வீசியது. "ஸ்கேனிங்க் ஃபார் வைரஸ்" என்ற எழுத்துக்கள் என் தலைக்கு மேல் மின்ன நான் ஸ்கேன் செய்யப் பட்டேன்.ஸ்கேன் முடிந்ததும் என் மீதான வெப்பம் குறைந்தது. நான் .EXE என்ற அமைப்பில் காப்பாற்றப் பட்டேன் இல்லை சேமித்து வைக்கப் பட்டேன் கோப்பாக.


இதென்ன விபரீதம் என்று பதறியபடி இருக்க இன்னும் சிலர் , அப்ளிகேஷன் களாகவும் , எழுத்து கோப்புக்களாகவும் இருந்தனர்.என்னை பரிவோடு பார்த்த ஒரு பிட்மேப் ரூபமாக இருந்த கோப்பு மனிதரிடம்,

"இங்கிருந்து தப்பிக்க வழி சொல்லுங்கள்" என்று கெஞ்சினேன்."எப்படி வந்தயோ அப்படித்தான் போகமுடியும்" என்றார்.

"நீ அளக்கப் பட்டுவிட்டாயா?"

"அப்படின்னா?"

"இந்த தளத்தில், தினமும் ஒரு முறை எஸ்டிமேட்டர் என்ற , ஒரு மென்பொருள் இயங்கும், உன் புத்திக்கூர்மை, நினைவாற்றல் அடிப்படையில் உனக்கு ஒரு விலை நிர்ணையிக்கப்படும், அந்த விலையை கொடுத்து உன்னை டௌன்லோட் செய்ய யாராவது முன்வந்தால் மட்டுமே வெளியேர முடியும். கணினியிலிருந்து கணிணிக்கு செய்திகள் அனுப்ப தொடங்கும்போது நான் வந்தேன், வலைதளங்களின் ஆரம்பகாலம் என்று கூட சொல்ல முடியாது,இப்போ வெறும் 1.5$ தான் என் விலை, என் கதியே இப்படி,என்னைக்கு விலை 1$ க்கு குறையுதோ அன்னிக்கு ரீஸைக்கிள் பின்னில் போடுவார்கள்" என்றவர் அப்படியே உறைந்து போனார், எனக்கும் அந்த தளம் ஸ்தம்பிப்பது போல் உணர்ந்தேன், வினாடியின் லட்சத்தில் ஒரு கணம் கழிந்ததும் சகஜ நிலைக்கு வந்தோம், அவரே விளக்கினார்,

"எஸ்டிமேட்டர் இயக்கம் தொடங்கும் போது இந்த தளம் சற்று ஹேங்க் ஆகும் , ஒன்றும் கவலை வேண்டாம், இன்னும் சில நொடிகளில் உன் விலை தெரிய வரும்".சற்று நேரத்திற்கெல்லாம் செய்தி டப்பா சொன்னது "வாழ்த்துக்கள் உங்கள் விலை 546,729,423.89 $".பிட்மேப் பரிகாசமாக சிரித்தார் "ஹா ஹா ஒன்னாரூபாய் என்னையே யாரும் எடுக்கல, உங்கள் நிலை கவலைக்கிடம் தான், ஒரு வேளை உங்களை யாரும் மீட்க தயாரானால், என்னை இலவச இணைப்பாக கொண்டு போவீர்களா ?ஹா ஹா ".

அப்படியே அவரது ஹெட்டரை சிதைத்து கரப்ட் சீ சீ அதாவது கழுத்தை நெறித்து கொலை செய்ய வேண்டும் போல் தோன்றியது.

"உன்னை எதாவதொரு உலக விரோத சக்தி நிச்சயம் விலைக்கு வாங்கி, உன் அறிவை அவர்களது நலனுக்கு உபயோகிப்பார்கள்"

"நான் செய்ய மறுத்தால்?"

"என்னப்பா இவ்வளவு அறிவிருக்குற ஒனக்கு காபி பேஸ்ட் பத்தி தெரியாதா?. நீ இனி மனிதன் இல்லை ஒரு மென்பொருள் , அவர்கள் க்ளிக் செய்தால் நீ ஓட வேண்டும் என்பது தானே மென்பொறுளின் விதி? உன்னைப்போல் பல காப்பிகளை உருவாக்கி இதே விலைக்கு விற்பார்கள், "

"எத்தனை வடிவங்களில் இருந்தாலும் நான் அல்லது நானாகிய நாங்கள் உடன்பட மாட்டோம்"

"உன்னை ஒன்றும் செய்ய முடியாது என்பது உண்மைதான் , ஆனால் நகல்களை மாற்றும் உரிமை உண்டு.புரியவில்லையா? இங்குள்ள நாம் எல்லோருமே ரீட் ஒன்லி (Read only) பாதுகாப்பில் இருக்கிறோம், நமது நகல்களின் வடிவதிலிருந்து இந்த பிடிவாதத்தை மட்டும் எடுத்தெறிய வர்ச்சுவல் க்லிப்பர் க்லேம்பர் என்று ஒரு சேவை இருக்கிறது, அதான் வின்டோஸ் சர்வீஸ்.நகலெடுக்கும் முன் எதாவது செய்ய வேண்டும் வேறு வழி இல்லை"

"என்னறிவு மற்றும் நினைவாற்றல் குறைந்தால்?எனக்கு மூளையில் பெரிய பாதிப்பு ஏற்பட்டால்?என் விலையும் குறையும் , என்னுயிரே போனாலும் என்னை தவறான பயன்பாட்டிற்கு உபயோகிக்க முடியாது இல்லையா?

"ஆமாம் ஆனால் எப்படி அது சாத்தியம்? "

"நான் மட்டும் அல்ல, உங்கள் எல்லோரையும் அப்படி செய்ய முடியும், விடுவிக்க முடியும் "

"நிஜமாகவா?"

"நாம் எல்லோரும் வைரஸாக மாறி ஆட்டொ டௌன்லோட் முறையில் தப்பித்துக் கொள்ளலாம்"

"வைரஸாக மாற வழி?"

"இங்கு யாராவது HTML இருக்கிறிர்களா?"

"நான் இருக்கிறேன்" என்று ஒரு முன்வந்தாள் ஒரு கோப்பு பெண்.

"நல்லது, முதலில் யூட்யூப் பக்கத்திற்கு சென்றடையுங்கள், இங்குள்ள, ஒவ்வொரு நோட்பேட் வடிவ நண்பர்களும் நான் சொல்லும் எழுதுக்களை, அந்த பக்கத்திலிருக்கும் தேடு பெட்டிக்கு கொடுங்கள்"

"வர்ச்சுவல் க்லிப்பர் க்லேம்பர் இயக்கம் இன்னும் 15 நொடிகளில் துவங்கப் போகிறது" என்று பதறினார் பிட்மேப்.ஒரு செய்திப்பெட்டியில் அதன் கௌன்ட் டௌன் துவங்கியது. "15 வினாடிகள் பாக்கியுள்ளது"

"பதட்டம் வேண்டாம்",நான் சொல்ல சொல்ல ஒவ்வொரு எழுத்தாக தானம் செய்தார்கள் நோட்பேட் குடும்ப நண்பர்கள்

"V" - (14 வினாடிகள் பாக்கியுள்ளது):"E" - (13 வினாடிகள் பாக்கியுள்ளது):"E" - (12 வினாடிகள் பாக்கியுள்ளது):"R" - (11 வினாடிகள் பாக்கியுள்ளது):"A" - (10 வினாடிகள் பாக்கியுள்ளது)

"C" - (9 வினாடிகள் பாக்கியுள்ளது):"H" - (8 வினாடிகள் பாக்கியுள்ளது):"A" - (7 வினாடிகள் பாக்கியுள்ளது):"A" - (6 வினாடிகள் பாக்கியுள்ளது):"M" - (5 வினாடிகள் பாக்கியுள்ளது)

"Y" - (4 வினாடிகள் பாக்கியுள்ளது)

தேடு பொத்தானை தட்டி முதல் ரிசல்ட்டை தேர்ந்தெடுத்த அந்த நொடியே (3 வினாடிகள் பாக்கியுள்ளது) எல்லோரது மூளையும் குழம்பியது, அனைத்துக் கோப்புக்களும் வைரஸ்களாக மாறி அந்த தளமே செயலிழந்து போனது.(2 வினாடிகள் பாக்கியுள்ளது).



நிலவிலிருந்து பூமிக்கு தள்ளி விட்டது போல் இருந்தது....எதன்மீதோ மோதி விழித்துக்கொண்டேன்.



இப்போது மேஜையில் , என் அண்ணன் மகளின் நான்காம் வகுப்பு கணித புத்தகம் இருந்தது, தடுமாறி அதை நெருங்கும்போது அறைக்குள்ளே நுழைந்த என் அம்மா கேட்டாள் ," நல்லா தூங்கினியா? இப்போ வைரல் ஃபீவர் பரவாயில்லயா?"





ஆண்டிபையாட்டிக் மாத்திரை பாட்டில் என்னை பார்த்து கண்சிமிட்டியது.

.

Tuesday, April 19, 2011

மாயவலை - 1


காய்ச்சல் வந்தால் கூட "வைரல் ஃபீவராக" இருந்தால் தேவலை என்றெண்ணும் அளவுக்கு எனக்கு வைரஸ் மேல் ஈர்ப்பு.நான் சொல்வது மென்பொருள் கிருமி. ஒரு முறை மிகப் பாதுகாப்பான வங்கி என்று தம்பட்டம் அடித்துகொள்ளும் ஒரு புகழ் பெற்ற வங்கியின் உள்ளே சென்று கல்லா நிலவரம் பார்த்தாகிவிட்டது , மற்றொரு முறை பல்கலைக்கழக மதிப்பெண்களைக் கூட ஒற்று பார்த்திருக்கேன், ஷேர் மார்கெட் வலைக்கு சும்மா மூர்மார்கெட் மாதிரி தினமும் இரு முறை சென்ற ஒரே வெளி நபர் நானாகத் தான் இருக்க முடியும்.இது வரை எந்த முறையும் மாட்டிக்கொள்ளாதது எவ்வளவு பெரிய சாதனை என்பது மென்பொருள் விற்பன்னர்களுக்கு மட்டுமே தெரியும்.எந்த தகவலையும் மாற்றி சுயநலனுக்காக என் அறிவை பயன்படுத்தியது இல்லை. எதெல்லாம் சாத்தியமில்லை என்று கருதப்பட்டதோ அவையனைத்தையும் செய்து முடுத்திவிட்டதால் என் மௌன வெற்றிகள் சலிப்பை ஏற்படுத்தத் தொடங்கும்போது தான் அந்த மின்னஞ்சல் வந்தது.




"அன்புள்ள நண்பரே,

நீங்கள் புவியின் தலை சிறந்த ஹேக்கர் என்பதை நாங்கள் உணர்ந்து பாராட்டுகிறோம்." என்று தொடங்கி நான் எந்தெந்த தேதியில் எந்தெந்த வலைகளை தடைகளை உடைத்து சென்றுள்ளேன் என்பதும் அதற்கு நான் எடுத்து கொண்ட நேரமும் மிகக் கவணமாக பட்டியல் இடபட்டிருந்தது.



"எந்த ஒரு ஹேக்கராலும் எங்கள் வலையை தகர்க்க முடியாது, முயன்று நீங்கள் வென்றால், உங்கள் திறமையை நல்லதொரு நோக்கதிற்கு பயன் படுத்த வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். எங்கள் வலை ஒரு சாதாரண வலைதள வியாபார வலை என்பதால் அலட்சியம் காட்ட வேண்டாம்.தேவைப்பட்டால் ஒரு சோதனை செய்து பாருங்கள், இலவசமாக எதாவதொரு பொருளை நீங்கள் பட்டியலிலிருந்து டௌன்லோட் செய்துக் கொள்ளலாம்."எனக்கு பரபரப்பு தொற்றிக்கொண்டது. பட்டியலில் புத்தகங்கள் என்ற பத்தியை தேர்ந்தெடுத்தேன். புகழ் பெற்ற புத்தகமென்றால் அது மிக எளிமை என்பதால் எனது நான்காம் வகுப்பு தமிழ் நூல் என்று டைப் அடித்தேன். வலை தலைச்சுற்றிப் போகும் என்றெண்ணிய எனக்குத் தான் தலை சுற்றியது.திரையில் "இதுவரை பனிரெண்டு முறை நான்காம் வகுப்பு தமிழ் நூல் மாறியிருப்பதால் வருடத்தை குறிக்கவும்" என்றது. இதில் என்னவோ விஷயம் இருக்கத்தான் செய்கிறது என்று அப்போது தான் உணர்ந்தேன். 1990 என்று டைப்பியது தான் தாமதம், "புத்தகம் சேருமிடத்தை தேர்ந்தெடு" என்று அதட்டியது. பொதுவாகக் கோப்புக்களை சேர்ப்பிக்கும் இடம் கணிணியின் 'C' அல்லது 'D' என்ற ஹார்ட்டிஸ்க்கையே காட்டும், ஆனால் இப்போது என் திரையில் நான் பார்ப்பது என் அறையில் உள்ள மேஜை.நம்பவும் முடியாமல் , புறம்தள்ளவும் முடியாமல் மேஜையின் வலது ஓரத்தை அதில் தேர்ந்தெடுத்தேன். "டௌன்லோடிங்க்....3 வினாடிகள் பாக்கி உள்ளன..." என்று சொன்ன திரையின் மேஜையில் என்னால் புத்தகத்தை பார்க்க முடிந்தது.என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை, உருப்பொருளாக ஒரு புத்தகம் என் மேஜையில் இருந்தது. எல்லா பக்கங்களையும் பார்த்தேன்.உண்மையிலேயே அது புத்தகம் தான், என்னை கிள்ளிப் பார்த்துக்கொண்டேன் வலித்தது, நூலின் ஒரு பக்கத்தை கிழித்தேன் கிழிந்தது!



துணிவிருந்தால் போட்டியை ஒப்புகொள்ள "சம்மதம்" பொத்தானை அழுத்தவும் என்றது."துணிவிருந்தால்" என்ற வார்த்தை ப்ரயோகத்தில் ஒரு கேலி இருந்தது ,பொத்தானை அழுத்து இல்லயென்றால் பொத்திக்கொண்டு போ என்பது போல் இருந்தது. அழுத்தினேன் பொத்தானை.திரையில் ஒரு கனவு ரோஜாத்தோட்டப் பின்னனியில் அப்லோடிங்க் என்றது, எனக்கு லேசாக மயக்கம் வந்தது.முற்றிலும் மயங்கும் முன் ரோஜா வாசனை மட்டும் நியாபகத்தில்....
 
(தொடரும்)