மின்சாரம் தாக்கப் பட்டது போல் அல்லது யாரோ உலுக்கியது போல் கையை விலுக்கென்று உதறி எதன் மீதோ இடுத்துக் கொண்டேன். உறக்கம் கொஞ்சம் மிச்சம் இருந்தது, மீதி இருட்டு,நெற்றியில் வியர்வை .இதுவரை நான் பார்த்திராத, படுத்திராத ஆனால் பரிச்சயமான கட்டில்.நாக்கின் வறட்சியை போக்க எடுக்கும் எந்த முயற்சிக்கும் உடல் ஒத்துழைக்கவில்லை. என் உடலில் நாக்கு மட்டுமே இருப்பது போல் இருந்தது,அதுவும் வறண்டு போய்.வெளிச்சம் கண்களுக்கு பழகத்துவங்க , அல்லது கண்கள் அந்த இருட்டுக்கு பழகத்துவங்க, நாசியில் சூடான பாலாடையின் வாடை தெரிந்தது.தலைமாட்டில் ஒரு 650 மில்லி திரவத்தை சுமக்கும் திறனுள்ள ஒரு கண்ணாடி பாட்டில் இருப்பது அதை நான் பார்க்காமலே தெரிந்தது.ஆறுக்கு மேற்பட்ட பிளேடுகளைக் கொண்ட உத்திர மின் விசிறி அசுர கதியில் சுழன்று என்னை நோக்கி இறங்கியது.கண்கள் மீண்டும் சொருக...
சட்டென்று பிளிறல் ஒலி கேட்டு சற்று சுதாரித்தேன். கிட்டத்தட்ட சாலையின் ஒட்டில் நான் ஓட்டிக் கொண்டிருந்த கார் வகையறியாதிருந்த மரத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது.பிளிறல் ஒலி எழுப்பியதன் மூலம் என்னை காப்பாற்றிய லாரியை ஓட்டிக் கொண்டிருந்தவர் பார்க்க என் அப்பாவை போல தெரிந்தார் ,ஆனால் லாரியோ, லாரியைப் போல் தெரியவில்லை. வழக்கத்துக்கு மாறாக ஸ்டியரிங் இடப்புறம் இருப்பதாகப் பட்டது.கிளட்ச்சைக் காலால் துளாவியும் கிடைக்கவில்லை.
எத்தனை தூரம் இப்படி தூங்கியபடி ஓட்டினேன் என்று புரியவில்லை. இடம் பரிச்சயமானதாக இல்லை.பிரேக்கை மிதித்து தற்காலிக நிம்மதி பெறலாம் என்று பிரேக்கை மிதித்தேன்.இருந்தும் சீறியது கார். கட்டுப் பாட்டை இழக்க,பள்ளத்தில் இறங்கியது. பக்கத்து இருக்கையில் இருந்த இன்னும் சூடு குறையாத பீட்ஸா , பிளாஸ்டிக் தட்டோடு கீழே சரிந்தது. பள்ளத்தாக்கில் விழ இருக்கும் விபரீதம் உணர்ந்து பிரேக்கை மீண்டும் அழுத்தி மிதிக்க செய்த முயற்சியை வீணாக்கியது, பின்னிருக்கையிலிருந்து உருண்டு வந்து பிரேக்குக்கு அடியில் சொருகிக்கொண்ட அந்த உயரமான காலிக் கண்ணாடி கல்யாணி பாட்டில்.இவ்வளவு நடந்தும் பிளிறல் ஒலியை தவிர வேறு எதுவும் எனக்கு நினைவில் இல்லை. என்னை யாராவது உலுக்க மாட்டார்களா?
ப்ச் (PS):புரிந்துக்கொள்ளல்திறனை (Understanding ability) உத்தேசித்து சில இடங்களில் ஆங்கிலத்தில் மேற்கோள்/ஸைடுகால் வாங்கியுள்ளேன்.
பொன் வறுவலாக என்பதெல்லாம் கற்காலம் என்று வியக்கும்படி இன்று மண் வறுவல்களின் பொற்காலம் .அண்டசராசர அளவில் மாபெரும் கண்டுபிடிப்பாக அறியப்படும் , இலக்கமுறை மோப்பக் கருவியின் (Digital Sniffer Device) செயல்பாடு, அதன் பின்னால் உள்ள சமூகப் பார்வைகள் , அனுகூலங்கள் , அஷ்டகோணங்கள் (Octal Dimensioning) எல்லாவற்றையும் பற்றி அமெரிக்காவின் , பாஸ்டன் எம்.ஐ.டீ பல்கலைக் கழகத்தில் நான் தமிழில் ஆற்றிய உரையின் தமிழாக்கம்.
DSD: பிறந்த கதை , செயல்பாடுகள் குறித்து, எளிய முறையில் பார்ப்போம்.
மனிதனைவிட நாய்களுக்கு நுகரும் தன்மை அதிகம் என்பது கல் தோன்றி மண் தோன்றா காலத்தே , சொல்லப் போனால் நாய்கள் தோன்றும் முன்னரே நமக்கு தெரிந்தது தான். சராசரியாக ஒரு நாய் இருணூறு கோடி நாசி மோப்பம் வாங்கிகள் (Nasal olfactory receptors) கொண்டது.இராம நாரயணனின் வளர்ப்புகளுக்கு அதன் எண்ணிக்கை பதினைந்து முதல் இருபத்தி இரண்டு விழுக்காடு அதிகம்.
*அதாவது ஒரு வாங்கிக்கு ஒரு ரூபாய் என்ற சராசரி விலைக்கு அவைகள் விற்கப்பட்டால் , ஒவ்வொரு நாயும் , கலைஞர் டீவியில் பங்குதாரர் ஆகலாம் என்றால் அதன் எண்ணிக்கையின் பிரம்மாண்டம் நமக்கு புரியும்.
ஒரு தொட்டித் தண்ணீரில், ஒரு துளி பீர் கலந்தாலும், மீதியைக் கண்டு பிடித்து குடிக்காமல் விடாது.மனிதனுக்கு அந்த திறன் இல்லாது போனாலும், நாய்களையும் ,நாய்களின் தனித் தன்மையை பயன்படுத்திக் கொள்ள ஒருபோதும் தவறியதில்லை. இல்லாவிட்டால் வசை சொல்லுக்கு மேலை நாடுகளில் பிட்ச் என்றும் , கீழை நாடுகளில் நாயே , பட்டி, குத்தா ... என்றும் அதன் புகழ் உலகம் முழுவதுமாக விரவியிருந்திருக்காதே!
ஆகவே ஒரு நாயிடம், அதை போன்ற கலவைத் தண்ணீரை மோப்பம் காட்டி , அண்டை வீடுகளில் யார் வீட்டில் இந்நேரம் பாட்டில் கிடைக்கும் என்பது போன்ற தகவல்களை பெற முடியும்.ஆனால் இதில் பல நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன.
-> நாம் மேலே குறிப்பிட்ட நாய் , மற்றும் அண்டை வீட்டில் வளரும் நாய்களின் நட்பு மற்றும் , பாலுணர்வு சம்பந்தப்பட்டது.இதனால் தலையீட்டு சமிக்ஞைகள் (Interference Signals) ஏற்பட்டு நமக்கு நாக்கு வரண்டு போகும் பேராபத்துக்கும் வாய்ப்பு உள்ளது.
-> நாற்ற அலையின் அதித்தீவிர அதீத கவன குவிப்பு (Aromatic Concentration) அதிகம் உள்ள இடத்திற்கு தான் நாய்கள் செல்ல முயற்சி செய்யும். அதாவது பக்கத்து வீட்டில் உள்ள மினி பியரை விட ,அது மதுபானக் கடையிலிருந்து வெளிபடும் நாற்ற அலை அதிகமாக இருக்கும் பட்சத்தில், நம்மை தரதரவென்று இழுத்து சென்று , டாஸ்மாக் வாசலில் நிறுத்தி "மச்சி ஒரு குவார்ட்டர் சொல்லு " என்பது போல் நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு மூச்சு வாங்கி நிற்கும். நாய்க்கு சைட் டிஷ்ஷும் , காசு கொடுத்து வாங்கிப் போட்டு , பின் வைத்திய செலவும் செய்ய சாமானியர்களின் பொருளாதாரம் இடம் கொடுக்காது.ஆகவே இதையும் நாம் ஆலோசிக்க வேண்டும்.
மேல் கூறிய மிக முக்கியமான இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வாக "மரபணு பொறியியலும்" ,"மின்னணுவியல்" தொழில்நுட்பமும் இணைந்ததன் விளைவு தான் இந்த அதி அற்புத கண்டுபிடிப்பு.
விந்தையான பல மின்னணுக் கருவிகள் பல இருப்பினும், ராஜபளையம் நாய்களின் விந்தையும் , சில அரை கடத்திகள்(semi conductors),மணல் வறுவல்களையும்(Silicon Chips) ரசாயன வைத்திய முறையில் (Chemical Treatment process) ஒன்று படுத்தி(Amalgamation) [எப்படி என்பதை விரிவாக, பின்னால் வரும் பகுதிகளில் பார்க்கலாம்],விஞ்ஞான உலகை புரட்டி கொத்தி கைமா செய்துவிட்டது என்பதை யாரும் மறுக்க முடியாது.
ராஜபளையம் நாய்களுக்கு , முப்பது கிலோமீட்டர் தொலைவில் இருந்தாலும் , அது பொரித்த புரோட்டா என்றால் "பர்மா கடை புரோட்டா" என்பதை நொடியில் கணித்து, வடக்கே விருதுநகரை நோக்கி ஓடவும், வீசப்பட்ட வீச்சு புரோட்டா பொட்டலத்தை பிரித்தால், சிலோனை நோக்கி பாயவும் தனித் திறன் கொண்டது என்பதையும் கவனிக்கவேண்டும்.
இந்த கண்டுபிடிப்பை அடுத்த கட்டத்திற்கு அழைத்து சென்ற பெருமை
வில்பர் தேவராஜ் (இவருக்கு பூர்விகம் மதுரை மாவட்டம் என்பது நமக்கு கூடுதல் பெருமை)மற்றும் ராபர்ட் சுஷ்வாக்ரே*.
*ராபர்ட் சுஷ்வாக்ரே: சுவீடன் நாட்டை சேர்ந்தவர் "Camel" என்ற தலைப்பில், வெண் பக்கங்களைக் கொண்ட "ஒரு கொயர் நோட்டுகள்" வெளியிட்டவரும் இவரே.
இந்தக் கருவியில் , சிட்டுகுருவியின் விந்தணுக்களை செலுத்தி குற்றத் தடுப்பு கருவியாக மற்றி சாதனை படைத்தனர். இது நடந்தது கி.பி.2013.
இதன் பயன்பாடு , செயல்பாடு எல்லாம் சற்று உயர் மட்டத்தில் (High Level) பார்ப்போம்.
சுருக்கமாக சொன்னால், எப்படி கண்கருவிழி, மற்றும் விரல் ரேகை ஒவ்வொருவருக்கு வேறுபடுகிறதோ அதைப் போல் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விசேஷமான நறுமணம் (Characteristic Odor) இருக்கிறது என்பது தான் இந்த அற்புதத்தின் சாவி காரணம்.அந்த வாசனையை (அதை டாக்டர். வில்பர் தேவராஜ் 'கப்பு' என்று குறிப்பிடுகிறார்) நுண்செய்திகளாக்கும் "கப்சிப்" என்ற சிப் மூலம் சேகரித்து அதை தரவு தளத்தில் பத்திரப்படுத்தப்படுகிறது.
அந்த மிண் சமிக்ஞைகளை (electronic signals ) "கப்புக்கு சிக்கான் சிக்" (Characteristic odor Silicon Signals )என்றும் சுருக்கமாக அழைக்கப்படுகிறது.கப்சிப் விண்வெளிக் களண்ளோடு தொடர்பில் இருப்பதால், ஒருவர் எந்த ஜவ்வாது, அல்லது மல்லி செண்ட்டு , போட்டாலும், எங்கு சென்றாலும் நொடி நேரத்திற்கும் குறைவாக சிட்டுகுருவியின் சுறுசுறுப்போடு குற்றவாளிகளைப் கண்டு பிடிக்க முடியும்.இது சக்தி மசாலா, ஆச்சி மசாலா முதலிய மிளகாய்த் தூள் கம்பனிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுதினாலும் , திருடர்களுக்கு இந்த கருவி சிம்ம சொப்பனமாக இருக்கும் என்று அகில உலக வேதியியல் காங்கிரஸின் துணைத் தலைவர் 'அக்குள் காந்தி' உறுதிபட தெரிவித்துள்ளார்.இந்த கருவியின் அராய்ச்சி தொடங்கிய காலகட்டம் ஏறக்குறைய கி.பி. 2000 ஆம் ஆண்டிலிருந்து துவங்கியிருக்கிறது என்பதையும் பல அறிஞர்கள் தெரிவிக்கிறார்கள்.சிட்டுக் குருவிகள் அதிக அளவில் அழிய இது ஒரு முக்கிய காரணம் என்று பெங்களூரு "யாகவா யுனிவர்ஸிட்டி ஆஃப் ஸ்பேரோ சைண்ஸ் " கவலை தெரிவித்தது. பிரதமருக்கு புறாக் காலில் புகார் அனுப்பியது இன்னும் கிடப்பில் இருப்பது என்பதையும் கவனிக்க வேண்டும்.
இந்தியாவில் ஏற்கனவே சில நிறுவனங்கள் (மெண்டல் , என்ன வூடுயா,லேஸ் , ஹாட் சிப்ஸ் ) ஒருமித்து ,சோதனை அடிப்படையில் சில முன்னேறங்களை செய்துள்ளன.இதனால் சில தொண்டு நிறுவனங்களும் (ப்ளூ கிராஸ்) , அரசியல்வாதிகள் , தொழிலதிபர்கள் (பெரும்பாலும் கேரளாவை சேர்ந்த நேந்திரம் சிப்ஸ் அதிபர்கள்) சில எதிர்மறையான கருத்துக்களை முன் வைத்திருக்கிறார்கள்.மணல் கொள்ளை இனி அரசு துணையோடு நடக்கும் . லாரிகளில் மட்டும் அல்லாமல் , கப்பல்கள்/எலிகாப்டர்கள் கொண்டு மணலையும் , நாய்களையும் கடத்த பன்னாட்டு நிறுவனங்கள் ரகசிய ஒப்பந்தமும் போட்டிருப்பதாக "சுப்ர ஹோ மண்ணிய சுவாமி" சர்ச்சையை கிளப்பி உள்ளார்.
நாய் வண்டி சத்தம் கேட்டால் நான்கு கால் பாய்ச்சலில் ஓடிய நாய்கள் இனி எலிகாப்டர் ஒலிக்கு எங்கே ஓடி ஒளியும்?
அன்புள்ள அம்மா,நான் 21 வயது நிரம்பிய அழகான இளம் பெண்.தற்கொலைக்கு முன் உங்களிடம் ஆலோசனைக் கேட்கலாம் என்று நினைத்து தான் இந்த கடிதத்தை எழுதுகிறேன்.
நான் இனியும் உயிர் வாழ்வது அவசியமா என்று சொல்லுங்கள்.
எனக்கு பதினான்கு வயதாகும்போது , என் அக்காவிற்கு திருமணமானது.அக்காவின்
கணவருக்கு தம்பி ஒருவர் இருக்கிறார் ,(பாவம் அக்காவின் மாமனார் அந்த காலத்து மனிதர்)(திருமணத்தின்போது அவர் தம்பிக்கு பத்து வயது, இப்பொழுது பதினேழு) . ஆரம்பத்தில் அக்கா வீட்டிற்கு செல்லும்போதெல்லாம் மாமா அதிகம் பேச மாட்டார். என் இடுப்பை கிள்ளியபடி"நல்லா படிக்கிறியா"ன்னு மட்டும் கேட்பார்.
எங்க அக்கா தலை பிரசவத்திற்காக எங்கள் வீட்டிற்கு வந்தபோது, மாமா வாரம்
ஒரு முறை வருவார்.அப்படி வருகையில் ஒரு முறை என்னிடம் "தேவி வா நம்ம
சுவாமி மலை கோவிலுக்கு போய்விட்டு, முருகனை தரிசனம் செய்துட்டு வரலாம்"னு
அழைச்சார். எங்கள் வீட்டு பெரியவங்களும் மாப்ளையாயிற்றே என்று அனுப்பி வைத்தார்கள். "நடந்து போனால் ரொம்ப கஷ்டம் வா உன்னோட சைக்கிள்ல போகலாம்"னு சொன்னார்.
நானும் என் லேடி பர்ட் சைக்கிளை தள்ளிகிட்டே தெருமுனைக்கு போனதும் "வா
தேவி, டபிள்ஸ் போகலாம்"னார்.நான் கேரியர்ல உட்கார்ந்து போகும்போது "கஷ்டமா இருந்தா என்னைய கட்டி புடிச்சுக்க"ன்னார். சும்மா விளையாடுகிறார்
என்று நினைப்பதற்குள் என் கையை அவரே தன் மீது போட்டுக் கொண்டார்.
சட்டென நான் கையை விலக்கி கொள்ளவே "இங்க பாரு தேவி, நீ மனசு வெச்சா இதே
சைக்கிள்ல, கேரியர்ல உங்க அக்கா லதாவையும், முன்னாடி உன்னையும் வெச்சி
டிரிப்பிள்ஸ்அடிக்க நான் தயாரா இருக்கேன்" என்று என் இதயத்தில் குண்டை
தூக்கிப் போட்டார்."உங்க பாப்பாவ என்ன செய்ய?" என்று கண்ணீரை அடக்கியபடி
கேட்டதற்கு, அதுக்கு ஒரு பேபி ஸீட் வாங்கிக்கலாம் என்று சொன்னார்.
அவர் கொடுக்கும் டார்ச்சர் தாங்க முடியாமல் , நான் எல்லோரிடமும் உண்மையை சொல்லலாம் என்றெண்ணிய போது நான் அவர் மூலம் கருவுற்றேன்.ஆண் குழந்தையாக இருந்தால் "சூர்யா" என்றும் , பெண்ணாக இருந்தால் "ஷாலினி" என்றும் நான் துக்கத்தோடு எண்ணிய போதே மாமா , அதெல்லாம் முடியாது , பெண்ணாக இருந்தால் பிரியங்கா என்றும் ஆண் குழந்தையாக இருக்கும் பட்சத்தில் "சோப்ரா" என்றும் வைக்கவேண்டும் என்று அவர்(மீண்டும் ஒரு முறை)ஒற்றைக்காலில் நின்றார். "மாமா தயவு செய்து வேண்டாம் " என்று நான் கெஞ்சியும் அவர் மனம் இறங்காததால் அந்த கருவை கலைக்க நேரிட்டது.
பாப்பாவின்((அக்காவின்))காது குத்து வரை தொடர்ந்த இந்த வருத்தம் என்னை மிகவும் வாட்டவே ,அவர்கள் வீட்டில் நடந்த காது குத்துக்கு சேலம் சென்ற போது, அவரது தம்பிய ஜீவாவிடம் , என் சோக கதையை சொன்னேன்.அதற்கு அவர் தம்பி ஜீவா "கவலைப் படாதே தேவி , உனக்கு "சூர்யா", "ஷாலினி" என்ன, "கார்த்திக்" , "ஷாமிலி"க்கு கூடா நான் உத்தரவாதம்" என்று சத்தியம் செய்ததை நம்பி நான் அவனுடன் மீண்டும் சேலத்திலேயே, சுவாமி மலைக்கு போனேன். தரிசனமும் , பிரசாதமும் கிட்டியது என்னவோ வாஸ்தவம் தான். ஆனால் "சொன்னா புரிஞ்சிக்க,இப்போ போய் இப்படி பேர் வெச்ச எங்க அப்பா அம்மா சம்மதிக்க மாட்டாங்க,அவங்க எஸ்.ஜே.சூர்யான்னு (சேலம் ஜீவாவின் மகன் என்று )தப்பா நெனைப்பாங்க" என்றான்.
பெற்றவர்களிடம் சொல்லமுடியாமல் , கூடப் பிறந்த சகோதரிக்கு துரோகம் செய்த குற்ற உணர்வில், அவளது மாமனாரிடம் மன்றாட முடிவு செய்தேன். "பேர் எல்லாம் அப்புறம் வெச்சிக்கலாம், முதல்ல தேவி, யம்மா சரோஜா (தேவி - (முன்னரே சொன்னது போல் ,பாவம் அக்காவின் மாமனார் அந்த காலத்து மனிதர்)) சாமன் நிக்காலோ" என்று என்னை மறுபடியும் சுவாமி மலைக்கு அழைக்கப் பார்த்தார்.
அவர்கள் மூவரையும் ஒன்றாக அழைத்து வாதிட்டேன், அதற்கு மாமா " நானாவது லேடிஸ் சைக்கிள்ல ட்ரிபிள்ஸ் அடிக்குறேன்னு சொன்னேன், நீ ட்ரை சைக்கிள்ல ஃபுட் போர்டே அடிக்குறியே" என்று ஏளனப் படுத்தினார்.
பெற இருக்கும் என் குழந்தைக்கு எனக்கு பிடித்த பெயர் வைக்கக் கூட உரிமை இல்லையா? என்று கண்ணீர் விட்டு அழுதேன்,கணக்கு வாத்தியார் சுந்தரத்தின் மகள் தேவி இப்படி சோரம் போய்விட்டாள் என்று ஊர் முழுக்க ஏசுவார்கள் என்று பயந்து தற்கொலை கூட செய்துகொள்ள மனம் துடிக்கிறது.. அல்லது நீங்களே எங்கள் குழந்தைக்கு ஒரு நல்ல பேர் வெய்யுங்க அம்மா.
பெயர் ஊர் வெளியிட விரும்பாத உங்கள் அன்பு மகள்.
---------------------------------------
அடி பெண்ணே பொன் ஊஞ்சல் ஆடும் இளமை ,வண்ணங்கள் தோன்றும் இயற்கை ;உல்லாசம் சந்தோஷம் வாழ்வில் ;கொண்டாடுதே சுகம் கோடி என்றதே;பண் பாடுதே மனம் ஆடுகின்றதே ;அடிப் பெண்ணே,
அடி பைத்தியக்கார பெண்ணே.பெண்களை போகப் பொருளாக நினைக்கும் ஆண் வர்க்கம்.. எனத் துவங்கி நான் எத்தனை பதில்கள் போட்டாலும் திருந்தாது இந்த ஆணாதிக்க சமூகம்.என் பதிலை நீ நிஜமாகவே எதிர்பார்க்கிறாய் என்பதை என்னாலே நம்ப முடியவில்லை.இந்தப் பகுதியைப் படிக்கும் பலர் , கில்மா மேட்டரை மட்டும் பாத்ரூமில் படித்து, என் பதிலை புறக்கணிக்கிறார்கள் என்பது ஊரறிந்த விஷயம்.நீ இன்னும் செய்ய வேண்டியது எவ்வளவோ இருக்கிறது, இதற்கெல்லாம் மனம் உடையாதே.அடிக்கடி இதே போல் கடிதம் எழுது.உன் கடித அளவில் பகுதியளவேனும் என் பதில் இல்லையென்றால் எனக்கு அடுத்த வார சன்மானம் கூட கிடைக்காமல் போய் விடும் பெண்ணே, என் அன்பு மகளே.ஆகவே முல்லும் மலரும் பாட்டை வைத்து சற்று பத்தியின் நீளத்தை ஒப்பேற்றியுள்ளேன்.இந்த தாயை மன்னிப்பாயா?மன்னிக்கவும் மறக்கவும் கற்றுக் கொள். நீ உன் சமூகத்தில் ஒரு முன் உதாரணமாக இருந்து உனக்கு தெரிந்தவர் எல்லோரையும் இப்படி குஜாலாக கடிதம் எழுத ஊக்குவிக்கனுமடி கண்ணே.அம்மாக்கு சன்மானம் வேணுமா இல்லையா?பெண்ணுக்கு தன்மானமும், இந்த அபலை அம்மாவுக்கு சன்மானமும் எவ்வளவு முக்கியம் என்பது உனக்கே தெரியும், உன்னைப் போன்ற புத்திசாலிக்கு சொல்லி புரிய வைக்க வேண்டிய அவசியம் இல்லயே.வாய்க்காலையும், வயல் காட்டையும் படைத்தாள் உனக்கென கிராம தேவதை என்று தொடர்ந்து இந்த உலகத்தைப் பாரடியம்மா.தானுண்டு, தன் வேலையுண்டு என்றிருந்த இளைஞர்களை, திசை திருப்பி, சீரழித்த சேலம் சித்தர் வழி சிலரும் இதற்கு காரணம்.ஆனால் அவர்களிடம் முறையிடுவது வீண், தம்புடி தேறாது மகளே.
உன் பிரச்சனை தான் என் பிரச்சனையும், இந்த சமூகத்தின் பிரச்சனையும், ஒட்டு மொத்த பெண் வர்க்கத்தின் பிரச்சனையும்.எனக்கு தீர்வு கிடைத்தால் உனக்கும் கிடைக்கும், ஏன் இந்த சமூகத்திற்கே கிடைக்கும்.பெயர் ஊர் வெளியிடாத சுவாமிமலை தேவி, எனக்கு இந்த சூழலுக்கான சரியான விடை கிடைக்கும்போது நானே உன்னை தொடர்பு கொள்கிறேன். அதுவரை போராடு. வீதிக்கு சென்று போராட வேண்டிய அவசியம் இல்லை. இதைப் போல் எனக்கு கடிதம் எழுதினாலே போதும்.இதை போல் நீண்ட கடிதம் வந்தாலே எனக்கு என்னையும் அறியாமல், ஆற்றாமைப் பொங்கி வழியும்.இதை விட நீலமாக பதில் எழுதும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு விடுகிறேனே? என்ன செய்ய ?பெண்ணுக்கு பெண்ணே விரோதியாக இருக்கும் நிலை தான் இன்று நிலவுகிறது.
"அன்பும் அரணும் உடைத்தாயின்" என்று ஒரு அன்பு மனம் கொண்ட , மனம் உடைந்த தாயின் சிறப்பை வள்ளுவர் சொன்னது போல், நானும் உனக்கு தாய் தானே?மற்றவரிடம் , பாசமும் , நேசமும், பரஸ்பரம் அன்பும் இருந்தால் தானே வாழ்க்கை முற்று பெறும்? அந்த விஷயத்தில் நீ நல்ல அதிர்ஷ்டசாலியம்மா , உனக்கு சற்று அதிகமாகவே கிடைத்திருக்கிறது.
நிதானம் தவறாதே அன்பு மகளே, அவசரப்பட்டு , ஜீ தமிழுக்கு போகாதே, பொறுமை தானே பெண்ணின் சிறப்பு.மேலும் அதையும் மீறி நீ ஜீ தமிழுக்கு போவதாக இருந்தால், ஒரு மாதம் பொறுத்திரு, அங்கு நிகழ்ச்சி நடத்தும் அம்மையார் கூடிய விரைவில் வெளியேற உன் கண்ணீர் கதையை உலகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டுவோம். அந்த பெண்மணி விடைபெற்றதும் என்னை அங்கு அழைக்கிறார்கள்.பேரம் படியும் வரை சற்று பொறுமை கொள் பெண்ணே. எனது முதல் போணி நீயாக இரு, அக்கிரமம் நடந்தால் தீயாக இரு.
கண்ணீரை துடைத்து விட்டு உன் அக்காவின் மாமனார் சொன்னது போல் தைரியமாக 'சாமான் நிக்காலோ' அதாவது புத்தியை உபயோகித்து செயல்படு. எவ்வளவோ செய்துவிட்டாயடி பெண்ணே.நீ இன்னும் செய்ய வேண்டியது எவ்வளவோ இருக்கிறது!சுவாமி மலை முருகன் உன்னை கை விட மாட்டார்.
"எனக்கு மிஷ்டர் ரிசர்வேஷன் உங்க ஃப்ரெண்டுன்னு தெரியாதே சார்" சற்று எரிச்சலை கட்டுப்படுத்த முடியமாட்டாமல் சொன்னேன்.
"ச்ச என் ஃப்ரெண்டு பேரு சர்வேஷன்...ரிசர்வேஷன் இல்ல,சரி போய் தொலையறது, எத்தனை மூட்டை சொமக்குறீங்க?"
எனக்கு வயது 31 ஐ தாண்டுவதால் பெண் பார்க்கப் போகும் போதிலிருந்தே பெண்ணின் அப்பாவின் நமச்சல் .
"அங்க வந்து தங்கற உத்தேசம் இல்லை அதுனால" என்பதை மட்டும் மனப் பல்லைக் கடித்து , "ஒண்ணு தான்" என்றேன்.
" சரி ஒழியுது, எமர்ஜென்ஸிக்கு பணம் எல்லாம் இருக்கா?"
"இருக்கு இருபதா.."
"நாசமா போச்சு…சார் நிறுத்துங்க..மெதுவா.. இப்படி எல்லாருக்கும் கேக்குறா மாதிரியா கத்துவீங்க? வந்து சேர்ற வரைக்கும் கவனமா இருங்க.ஆமாம் சொல்லிட்டேன்,போய் ஸீட்டுல செட்டாகுங்க, ஃபோன் பண்றேன் அப்புறமா"
இவரொருவர் தான் ஜாதகம் பொருந்தியிருக்கிறது என்று சொன்னதால் இவ்வளவு ஹிம்சையைப் பொருத்துக்கொள்ள வேண்டியதாகி விட்டது.ஆஞ்சநேயர் நட்சத்திரத்தில் மாப்பிள்ளை வந்தால் மாமனாருக்கு ஆகாதாம், உயிருக்கே ஆபத்தாம்! பார்ப்போம் பகவான் கிருபை எனக்கு எப்படி இருக்கிறது என்று.
முதல் முறை அவர் ஃபோனில் பேசும்போதே வாத்தியார்கள் கடுங்கோபத்தோடு "என்னது? ஹோம் வொர்க் செய்யலியா?" என்பது போல் "என்னது? அம்மா அப்பாவோடயா இருக்கீங்க?". ஏதோ,நான் செய்த புண்ணியம், கால் செண்டர் (முன்னிரண்டு சொற்களும் ஆங்கில வார்த்தைகள்) துறையில் கோலோச்சியிருப்பதால் , இந்த மாதிரி ஆட்களை சமாளிக்கும் திறன் பெற்றவனாகிவிட்டேன்."ச்ச ச்ச அவங்க வெல் செட்டில்ட்... எப்பவாவது எனக்கு பணம் வேணும்னா கொண்டு குடுக்க மட்டும் வருவாங்க.வந்தமா, பணத்த குடுத்தமான்னு குடு குடுன்னு திரும்ப போயிடுவாங்க" என்று சொல்லி வைத்தேன்.திரும்ப எங்க போவாங்க என்று கேட்கும் அளவுக்கு பொறுமை இல்லைப் போல, மேற்கொண்டு எந்த கேள்வியும் கேட்கவில்லை. சும்மாவா ? ராஜ தந்திரியான எனக்கு பி எம் பீ சர்டிஃபிக்கேட் கொடுத்தார்கள்?
ராஜ்ஜிய சபை சீட்டு ஏலம் போல் பர்த் நேக்கு, சைடு நோக்கு என்று வாஸ்து நம்பிக்கை, வயது முதிர்ச்சி சாதகம், வனப்பு கொண்ட பெண்கள் என்று பலரது கோரிக்கைகளை நிறைவேற்றி, எனக்களிக்கப்பட்ட ஸீட்டை தாரை வார்த்து, வேறு ஒரு ஸீட்டில் ( சந்தேகமின்றி கழிவறைக்குப் பக்கத்தில் உள்ள வரிசையில்) அமர்ந்து, ரயில் ஜலம் அருந்தும் முன் மறுபடியும் அவரே தான் "என்ன ஒக்காந்தாச்சா?"
"ஹும் …இப்போ தான்"
"என்ன எழவு இது? இவ்வளவு நேரம் என்ன செஞ்சீங்க? ஒரு ஸீட் கண்டுபிடிக்க இவ்வளவு நேரமா?"
நான் பொய் சொல்லியிருக்கலாம், ஆனால் ,அவர் இருக்கும் ஜோரில் நிச்சயம் அந்த பாழாப்போன டீடீஆரை உளவு பார்க்க விடுவாரென்பதால், பொய்யை தற்காலிகமாய் தவிர்த்தேன் மனசாட்சிக்கு விரோதமாய் .
"போகட்டும், என்ன பொது சேவையா? நல்ல வசதியான ஸீட்ட விட்டு இப்போ எங்க இருக்கீங்க?"
"இல்ல அந்த ஸீட், பர்த் எனக்கு வசதியா இல்லைனு நான் தான் மாத்திகிட்டேன்"
"அப்டியா, சரி , ஐ ஃபோன் தான இருக்கு உங்க கிட்ட? எனக்கு உங்க ஸீட்ட ஒரு ஃபோட்டோ எடுத்து அனுப்பி வெச்சிட்டு ஃபோன் பண்ணுங்க " ரோமம் அளவும் இங்கிதமின்றி துண்டித்தார் இனைப்பை.
இன்னமும் அவருக்கு! "ர்" விகுதி தேவையா? "ன்" போதுமே! என்று எண்ணிக்கொண்டே கர்ம சிரத்தையாக ஃபோட்டோ எடுத்து அனுப்பினேன்.அவர் அழைக்கவில்லை , பதில் மட்டும் அனுப்பினார்.. "கக்கூஸ்ல இருந்து ரெண்டாம் வரிசை!"என்று பதில் எஸ்.எம்.எஸ் மட்டும் வந்தது. இத்தோடு ஒழிந்தார் என்று நினைத்து முடிக்கும் முன் "கால் மீ" என்றது அடுத்த குறுஞ்செய்தி.என்ன இது? காதலிப் போல் இந்த லூட்டி அடிக்கிறார் என்று செல்லக் கோபத்தோடு டயலினேன்.
அதே கோபத்தோடு "என்ன?" சற்று ஓங்கிய குரலில்,
"என்ன சத்தம் ஜாஸ்தியாறது?
"இல்லயே , இங்க ஒரே கூட்டம்... சத்தம் ...அதான்..." பம்மிவிட்டேன். ஆனால் இப்படி ஆரம்பம் தொட்டே இவ்வளவு அடிபணிவது பிற்காலத்தில் எனக்கு ரொம்ப ஆதாயமாகவோ அல்லது , மிக கேவலமாகவோ ஆகக்கூடும் என்றெண்ணி முறையே மகிழ்ந்துப் பயந்தேன்.
"சரி ,ஒரு காலி பர்ஸ் எடுத்துகிட்டு வரச் சொன்னேனே கொண்டு வந்திருக்கீங்களா?, அத மட்டும் பார்வைல படறா மாதிரி பாக்கெட்ல வெச்சிக்கங்க , ஒரிஜினல் பர்ஸ ஜாக்கிரதையா..."
"வீட்டுலயே வெச்சியிருக்கனுமோ?"
"என்னது?....குறுக்க பேசாதீங்க சார் இன்டீஸண்டா ...எழவு... எங்க இருந்தேன்?.. ஆ...ன்.. ஜாக்கிரதையா , ஜட்டி பாக்கெட்ல வெச்சிடுங்க.. ஜாக்கில பாக்கெட் வெச்சி ஒரு மாடல் வரும்னும், அத போட்டு வர்ற சொன்னதும் நியாகபம் இருக்கா? இல்ல வேற ஏதாவது அபத்தமா செஞ்சி என் தாலிய அறுக்கப் போறீங்களா?"
" இல்ல அப்டி தான் வர்றேன் , நம்பலைன்ன ஃபோட்டோ அனுப்பட்டுமா?"
"என்ன சார் சர்காஸ்டிக் டோன் வருதே...?"
"ஐயோ இல்ல நான் அத சொல்லல, சாரி சாரி.. வெரி சாரி சார்". ஃபோட்டோவில் பெண் பிரமாதமாக இருப்பது , மட்டுமே உத்வேகக் காரணி
"ஓ ஆமாம் இன்னும் பத்து நிமிஷம் தான் இருக்கா? சரி சரி" அவர் பாணியில் ஒரு இங்கித கட்.
"லூஸுக்" என்று என்னையும் அறியாமல் சத்தமாக சொல்ல, எதிர்த்த ஸீட்டு மாமா பயந்து முகத்தைத் திருப்ப,பாதியில் நான் நிறுத்திக் கொள்ள, நின்றது ரயில் , நின்ற இடம் தாம்பரம்.
வரவழைத்துக் கொண்ட தைரியத்தோடு எதிர் ஸீட்டு மாமா "ட்ட்டான்னு வண்ட்டான்".அவரது பச்சைப் பையில் திலக்ஸ் என்று அச்சாகியிருந்தது.
"லிஸ்ஸன் டு மீ..வெறும் தீக்குச்சியும் ஒரு சின்ன பட்டியும் மட்டும் எடுத்துகிட்டு லெட்ரின் உள்ள போங்க, அதை உடனே அப்பவே டிஸ்கார்ட் பண்ணிடுங்க...டூத் பிரஷ் பேஸ்ட்டு எடுத்து கிட்டு போய் பிரஷ்ஷும் பண்ணிடுங்க... ஃபைன் கட்ட வேண்டாமே...மோரோவர் உடனே கெளம்பி போகக் கூடாது, முதல்ல ஒரு தடவை எடத்த விட்டு போகனும்,அப்புறம் ரெண்டு நிமிஷத்துல திரும்ப வந்துடனும்..அதே மாதிரி ஒரு நாலஞ்சு தடவை பாவ்லா ரௌண்ட் செய்யனும், ஸோ தட் உங்க பேக எடுக்கனும்னு யாராவது நினைச்சா ஏமாந்துடுவாங்க புரியறதா?"
"திருட நினைக்குறவனும் கூடவே வந்தா என்ன செய்யறது சார்?"
"வரட்டுமே என்ன மோசமா போச்சு?அவனுக்கு தான அலைச்சல்? விடுங்க..."
"அருமையா சொன்னீங்க சார், ச்ச பேசாம நீங்களும் என் கூடவே வந்திருக்கலாம் சார்"
"உங்க கூட நான் வந்தா, உங்களை யாரு இங்க ரிஸீவ் பண்ணுவாங்க?"
அவர் நான் பேசுவது புரிந்துதான் பேசுகிறாரா?ஒன்றா அவருக்கு நகைச்சுவை உணர்வு மிக அதிகமாக இருக்க வேண்டும் அல்லது நகைச்சுவைக்கும், அவருக்கும் குளியல் கிட்டத்திலும் இல்லாமல் இருக்க வேண்டும். நேரில் பார்த்தால் தான் தெரியும்.
இவ்வளவும் பொறுத்துக் கொள்வது அவர் பெண்ணுக்காகத் தான். ஆகவே அவளைப் பற்றி ஏதாவது கேட்க வேண்டுமே,
"சார் உங்க டாட்டர் என்ன செய்யறாங்க? சார்"என்றேன், ஒரு சாரார் சொல்வது போல் ஒரு சார் அனாவசியமாக விரையம் செய்ய வேண்டியதாகிவிட்டது.
"சொந்தமா ஒரு ஹாஸ்பீடல் இருக்கு, நல்ல ப்ராக்டிஸ், நல்ல கைராசின்னு பேர் , நான் போனா மட்டும் கியூல உக்கார வேண்டாம். ஸ்கூல் வரைக்கும் ஒண்ணா தான் படிச்சோம் நாங்க ரெண்டு பேரும்...அப்புறம் தான் நான் காரைக்குடி அழகப்பால போய் படிச்சி..பாவம் கல்யாணம் பண்ணிக்கலை இன்னும்"
"சர் சர் சர் ஒரு நிமிஷம் ...எனக்கு ஒண்ணும் புரியல" பார்ஷியல் அகஸ்டிக் நியுரோமாவின் பாதிப்பு அவருக்கு மட்டும் இருக்கா அல்லது வாழையடி வாழையா என்பதில் எனக்கு சிறு கவலை தான்.
"என்ன எழவ புரியல? சொந்தமா ஒரு.."
"இல்ல அது இல்ல.. நான் உங்க பொண்ணப் பத்தி கேட்டேன்"
"ஓ அவளா?... அவ ...என் டாட்டர், இந்த பழைய இதெல்லாம் இருக்குமே , அதெல்லாம் ஒரு .. இங்க தான் , மெயின் கார்ட் கேட் , போஸ்ட் ஆஃபிஸ் பக்கத்துல... , நல்ல இது சார் அது... அங்க ஒரு ஆறு மாசமா, சும்மா இருக்க வேண்டாம்னு..வெளியூர்ல கூட நெறைய வேலை எல்லாம் வந்தது , நான் தான் உள்ளூர்லயே இருக்கட்டும்னு... நல்ல பேர் அதுக்கு..இந்த ஆர்ச்சுக்கு அடுத்த கட்டடம்..."
"சரி பரவயில்லை சார் விட்டுடுங்க , டாக்டர பத்தியே சொல்லுங்க நான் கேக்குறேன்.. சொல்லுங்க சொல்லுங்க...சொந்தமா ஒரு".இந்த தருணத்தில் மேட்ரிமோனியில் அவர்கள் கேட்டிருந்த இன்றியமையாத் தகுதியான ஃப்லெக்ஸிபிலிட்டியை நிறுவினேன்.நேற்றைய என் முதலிரவுக் கனவில் சில பெரும் மாற்றங்கள் இருப்பதை உணர முடிகிறது."அதெப்படி பண்ணனும் தெரியுமா? ஹூம் ஹூம் அப்படி இல்லை சார், முதல்ல நீங்க...ஐய அத இல்ல, தப்பு தப்பு.. ஆ இப்போ கரெக்ட்" அல்லது குறைந்த பட்சம் பக்கத்திலேயே அமர்ந்து கொண்டு "சௌரியமா இருங்க" இப்படி.
"ரொம்ப சந்தோஷம் சார், டீடீஆர் வர்றார், நான் அப்புறமா கூப்டட்டுமா?"
"என்னது? டீடீஆர் கிட்டஃபோன குடுக்கறீங்களா?தாராளமா குடுங்களேன்,...என்ன மிஸ்டர் சர்வேஷன் நியாபகம் இருக்கா? ஒரு தடவை ட்ரெயின்ல வரும்போது , உங்க பேனா லீக் அடிக்க, நான் அதுக்கு ஒரு டிப்ஸ் சொன்னேனே..."
"சார் சார் , நான் தான் சார்... அவர் கிட்ட குடுக்கல... நீங்க சொன்னவர் இல்ல சார் , இவர் பேர் என்னவோ டீரெயில்னு இருக்கு பேட்ஜுல சரியா தெரியல"
எங்கள் பழைய டயனோரா டீவி போல் அவ்வப்போது நான் பேசுவது அவருக்கு சரியாக கேட்கவே செய்தது.
"இல்ல ஒண்ணும் இல்ல,டீடீஆர் பேர் டேனியல், நான் தான் தப்பா சொல்லிட்டேன் சாரி".
எனக்கு தொண்டை காய்ந்துவிட்டது, "சார் கொஞ்சம் ப்ரேக் குடுங்க.. நான் பாத்ரும் போயிட்டு வர்றேன்" என்று அவர் பாணியில் கட் செய்ய வேண்டியதாயிற்று. நல்ல ஷெஹரில் கிட்டாத சிக்னல் அத்துவானக் காட்டில் கிடைத்தது அவருக்கு சாதகமாகிவிட்டது.
திலக்ஸ் பை மாமாவுக்கு அருகில் சன்னலோர ஸீட்டில், இருந்த சிவந்த கண்களைக் கொண்டிருந்தவர் தன் சட்டையின் உள்பாக்கெட்டிலிருந்து தீப்பெட்டியும் ஸிகரெட்டும் தனது மூன்றாம் முயற்சியில் வெற்றிகரமாக எடுத்துக் கொண்டு இருந்த இடத்திலேயே தம் பிடித்தார்.எனக்கும் ஆசை தான் இருந்தாலும், ஆனந்தப் புகைக்கு ஒரு ஆத்தரைசேஷன் தேவைப் பட்டது.
ஸிகரெட்டை கையிலெடுத்தபடி "அவனுங்க வந்து என் " என்று உதடுகளை அவர் சேர்க்கவும் , ரயில் அவசர கதியில் ஒரு அசுர பிளிறல் விட்டு ஒயவும் சரியாக இருந்தது.
" ல புடிச்சி ஆட்டுவாங்கப் பார்ப்போம், ங்கோய்ய" .
பிங்க் என்று திரைப் படங்கள் மற்றும் டீவீ நிகழ்ச்சிகளில் சென்ஸார் செய்வது போல் டைமிங்குடன் ப்ப்ப்பா......ம் செய்த இஞ்சின் ட்ரைவருக்கு அசாத்திய காது கூர்மை போல! காது கூர்மை என்றதும் தான் சட்டென நியாபகம் வந்தவனாக கவனித்தேன் மூன்று மிஸ்ட் கால்.ஒரு ஒரே ஒரு குஞ்செ (குறுஞ்செய்தியின் குறுக்காக்கம்!) "எந்நேரமானாலும் திரும்ப அழைக்கவும்"
திரும்ப அழைக்கவில்லையென்றால் கோபித்துக்கொள்ளப் போகிறார் என்ன ஒரு குட் நைட்டு சொல்லப் போறார் அவ்வளவு தானே என்று திரும்ப அழைத்தேன்.
"சாரி சார் ட்ரெயின் சத்தத்துல கேட்கல"
"ஓஹோ அப்படியா? நான் கண் அசந்துட்டீங்களோன்னு நெனைச்சேன்... மணி சரியா ஒண்ணு.. அஞ்சு நிமிஷம் தான்,விழுப்புறம்ல வண்டி நின்னதும், அறிவு கெட்டதனமா, நாக்கத் தொங்க போட்டுகிட்டு, கீழ இறங்காதீங்க , அங்க விக்குற டீ வாங்க வேண்டாம் , அதை குடிச்சா ராத்திரி தூக்கமே வராது "
"வெறி நாய் கடிச்சா மாதிரி பேசுறீங்க நீங்க. நீங்க சொல்றது நூத்துக்கு நூறு உண்மை சார்" கேட்டும் கேளாமலும் இருக்கும்படி சொன்னேன்.
"அதெல்லாம் பரவாயில்ல, நான் காலைல இன்னிக்கு எழுந்ததே பத்து மணி, குளிச்சு சாப்ட்டு, பதினோறு மணிக்கு கொஞ்சம் கண் அசந்தேன், அப்புறம் விளக்கு வெக்குற நேரம் அதுனால எழுந்து , கோயில்ல கதா காலட்ஷேபம் கேட்டேன்(ஓ அதெல்லாம் கேக்குமா உங்களுக்கு?-என்மன வாய்ஸில்), அப்புறம் வீட்டுக்கு வந்து சாப்ட்டு நியூஸ் பாக்கும் போது ஒரு பவர் நேப். நல்ல வேளை ராத்திரி பத்து மணிக்கு அலார்ம் வெச்சேனோ பொழச்சோம்.எனக்கு ஒண்ணும் தூக்கம் வரல"
அதாவது குளித்த ,சாப்பிட்ட நேரத்தைத் தவிர வெவ்வேறு ரூபத்தில்,பல்வேறு இடங்களில் நித்ராதேவியோடு கலவிக் கொண்டு விட்டு கின்னென்று முழித்திருக்கிறார்.
எனக்கு காலையிலிருந்து வேலை செய்த அலுப்பு கடுமையாக தாக்கியது.
"உங்களுக்கும் நைட் ஷிஃப்ட் எல்லாம் வேலை செஞ்சி ராமுழிக்கிரது பழகியிருக்குமே?"
அவர் சொன்னால் அப்பீல் உண்டா "சரியா சொன்னீங்க சார்"
"ஹா ஹா.. அப்பறம் நான் ஃபோன ஃபுல் சார்ஜ்ல போட சொன்னது எவ்வளவு யூஸ்ஃபுல்லா இருக்கு பாருங்க... என்ன?"
"ஐயோ ரொம்ப கரெக்ட்! அது தான் சார் ஹை லைட்டே. "
"அப்பறம் சார் .சத்தியமா டீ குடிக்க மாட்டேன், கொஞ்சம் பாத்ரூம் போயிட்டு வரட்டுமா?"
" ஒரு 1:09 க்கு போகலாமா? ஏன்னு கேட்டா நடுவுல அந்த பாவ்லா ரௌண்ட் அடிக்கனுமே? பைய காபந்து பண்ண?"
"ஆஆஆன்...அப்படியே செய்யுங்க".
("சரி அப்புறம் பேசலாம்") ,( "வெச்சிடட்டுமா?" )ஹூம்ஹூம்.. அதெல்லாம் அகராதியிலேயே இல்லை, உடனே ங்கொய் ங்கொய் ங்கொய் என்று துண்டித்த ஓசை ,இரட்டை சுழி மன்டையைப் பிளந்தது!
அதென்ன சாபமோ, ஒரு மணியை தாண்டி விட்டால் அடுத்து தூக்கம் வரவே வராது. என் கம்பெனி பில் கட்டும் மொபைல் எண் என்பதால் அதை ஆஃப் செய்யும் உரிமையை அடகு வைத்திருந்தேன்.
தூக்கமின்மையால் சாதாரண விஷயத்தைக் கூட மிகவும் காம்ப்ளக்ஸாக யோசிக்க தோன்றியது உதாரணத்திற்கு இறங்கநிறையக்கு எதிர்பதமாக எல்லாரும் உறங்கி விட்டனர்.நட்ட நடு நிசியில் நின்றது ரயில்.சற்று அதிர்ந்து எழுந்தார் திலக்ஸ் மாமா. வாயில் வழிந்த கோடுகளைப் பல புள்ளிகளாய்;சிம்பிளாக சொல்ல வேண்டும் என்றால், வாயை துடைத்துக்கொண்டார்.அவசரமாக எந்த ஸ்டேஷன் என்று எட்டிப் பார்க்க முயல
"அரியலூர் வந்திருக்கோம்"
"க்ஹா ஃப்ரூ.. ம்ப்ரு..."
சட்டைப் பையிலிருந்து ஹால்ஸ் கொடுத்தேன் , இப்போ அவருக்கு சுத்தமாக பயம் இல்லை, வாங்கி கொண்டே மணிக்கட்டையும் , கடிகாரத்தையும், முற்களையும், , மணியையும் ஒரு சேரத் தேட
"ஓ பரவாயில்லையே.. பைய மேல மாட்றேன் , பாத்துக்கோங்க" என்று தொங்கவிட திலக்ஸ் தற்சமையம் தூக்ஸில் தொங்க, கழிப்பறைக்கு சென்றார்.
"க்ர்ஹா ம்க்ரூஹ்ரும், க்ர்ஹா ம்க்ரூஹ்ரும், ச்த்தூ க்ராஹ்" முடிந்து திரும்பி வந்து விட்ட இடத்தில் (!?) உட்கார்ந்தார் .
"ஹா ரொம்ப தேங்கஸ் சார்"
குற்ற உணர்ச்சியில் அவஸ்தையாக சிரித்தேன்.அந்தப் பையை அதற்குப் பிறகு பார்க்கவே இல்லை.என்னவோ அதை பார்த்துக் கொள்ளத்தான் கண் முழித்திருக்கிறேன் என்று நினைத்தாரோ?
"பை கிழிஞ்சு போச்சு, போல இருக்கே?" குறில் நெடில் குழப்பமின்றி கேட்டேன்.
"க்க்க்ஹா,ஹால்ஸுக்கும் தேங்க்ஸ், இப்போ கொஞ்சம் பெட்டரா இருக்கு சார். ஆமாம் சார் , வீடு போய் சேர்ற வரைக்கும் தாங்கினாப் போதும்"
"எது ஹால்ஸா? இல்லை சார் அதுக்குள கரைஞ்சிடும்.."
"வேடிக்கையா பேசறேள் சந்தானம் மாதிரி, நான் பைய வீடு போய் சேர்ற வரைக்கும் தாங்கினாப் போதும்னு சொன்னேன்,ரொம்ப லேவடியா தான் இருக்கு அது ரொம்ப பழசு, இப்போ சொன்னேனே சந்தானம்னு , அவன் என் மச்சினன் , அவன் கம்பெனி பை அது. க்ஹா ஹ்றூம் ம்ஹூஹ்"
எனது மிச்சமுள்ள ஒரே ஹால்ஸுக்கு அடிப் போடுகிறார் என்பதால் அவசரமாக பிரித்து போட்டுக் கொண்டேன்.
“பை த பை நீங்க எங்க ஒர்க் பண்றிங்க?”
" நான் வேலை பாக்குற கம்பனில பையெல்லாம் தர மாட்டாங்க சார்"
அவரது வினோத ஒலிகளுக்குப் பின்னால் என்னை தொந்தரவு செய்யும் நோக்கம் இருந்தால் அது அவருக்கு தான் நஷ்டம். எனக்கு ஏற்கனவே சட்டைப் பையில் சட்டாம்பிள்ளை , தடியால் அடிக்க தயாராய் இருக்கிறது அவருக்கு எப்படி தெரியும்?தற்போது சற்றொப்ப எல்லா விளக்குகளும் எரியத்துவங்க , இடை நிலைப் பிரயாணிகள் தயாராகிக் கொண்டிருந்தார்கள் எதற்கோ.ஐ ஃபோனில் பாடல்கள் கேட்க அரச கட்டளை இடம் தராததால் (அசரிரி: பாட்டு கேட்டா சார்ஜ் போயிடும் சார் அதுனால...) , மனச்சோர்வு சற்று அதிகம் தான்.
பக்கத்தில் ஒருவர் ஒரு வாராந்திரியை திறந்த வேகத்தில் மூட,
"சார் சும்மா பாத்துட்டு தர்றேன்"
சிறிதும் தயக்கமின்றி கொடுத்து விட்டு,தனது ஒரே பையை எண்ணிக்கை சரி பார்ப்பதில் மும்முரமாக இருந்தார். மணி மூன்றே முக்கால் கல்லக்குடி ஸ்டேஷன் "இப்பவோ எப்பவோ" தூரநேரத்தில் அல்லது நேரதூரத்தில்.
புத்தகத்தை திரும்ப பெறாமலே அவர் படிகளை நோக்கி செல்ல நானே நேர்மையாக அதைக் கொடுத்தேன். அவர் திலக்ஸ் மாமாவை கண்ணால் காட்ட, திலக்ஸ் மாமா என் கையிலிருந்து அதை பிடுங்கிக் கொண்டார். அவர் பிடுங்கிய விசையில் "அது என்னோடதாக்கும்" என்கிற பொசஸிவ்னெஸ் தெரிந்தது.
ஆங்கிலத்தில் எழுதுவதை விட தமிழில் பொஸசிவ்னெஸ்ஸின் ஸ்பெல்லிங் எளிதாக இருப்பதையும் நான் கவனிக்க தவறவில்லை.
மனரீதியாக ஒரு மௌன யுத்தம் நிலவியது...
"ஹால்ஸுக்கும் பொஸ்தகதுக்கும் சரியா போச்சு "
"அப்போ, நீங்க சுஸ்ஸூ போகும் போது, நான் பைய பாத்துக்கிட்டதுக்கு?"
"நான் கோழை துப்ப தான் போனேன்,மேலும் நீ தான் உன்னோட கம்பனி பை தரலியே, அதுக்கும் இதுக்கும் சரியா போச்சு"
தூக்கமின்மை பற்றி வள்ளுவர் என்ன சொல்லியிருக்கிறார் என்றெல்லாம் பலவாறு யோசித்து பார்த்துக் கொண்டிருக்கையில்,
அவர் யாரோடு பேசுகிறார் என்று தெரியவில்லை ஆனால் எனக்காகத் தான் பேசுகிறார் என்றுப் புரிந்தது.ஃபோனைத் துண்டிக்கும் போது என்னை வென்ற ஒரு கிளர்ச்சி நிச்சயம் இருந்தது அவர் முகத்தில்.அவர் தேவை இலாமல் சில்லரையை எண்ணி சட்டைபையில் திணித்துக் கொண்டிருந்தார், அவரது கார் ரகசியம் புரிந்து விட்டது.
வெயிட்டீஸ் சொல்லியிருந்தது போல் இருந்த ஃபோன் திடீரென ஜூட் சொன்னது போல் உறுமியது.
"ஹென்ன? வால்குதியா?"
"இல்ல நான் தான் பேசறேன், சாரி ..என்னது? புரியல..!"
"க்ரும்.. என்ன லால்குடி வந்தாச்சா? ஹ்ரும்"
க்ரும் ஹ்ரும் என்ன இந்த ஊர் வழக்கமா, தெரிஞ்சிருந்தா ஒரு ஹால்ஸ் மூட்டையே வாங்கி வந்திருப்பேனே? என்று வியந்து.. ஆமாம் கிட்டத்தட்ட...
"அப்போ இன்னும் இருபத்தஞ்சு நிமிஷம் தான்... சரி நான் கெளம்பிடுவேன் அங்கப் பாக்கறேன்.. டவுன் ஸ்டேஷனுக்கு தான புக் பண்ணியிருக்கீங்க?"
"இல்ல ஜங்ஷனுக்கு"
"படிச்சு படிச்சு சொன்னேன், தண்ட செலவு , என்ன சார் திருவாளத்தானா இருக்கீங்களே?"
"சாரி சார் ,சரி சார் இனிமே பண்ண மாட்டேன்"
"சரி வாங்க நான் ப்ளாட்ஃபார்ம்லயே வெயிட் பண்றேன்"
கொப்பளிப்பு சத்தம் , ஓக்காலிப்பு,"வந்துடறேன்","ஸ்டேஷன் வரட்டும் நான் யார்னு காட்டறேன் " , "எல்லாம் எண்ணிட்டியா? என்றெல்லாம் சூழ வார்த்தைகள் வளம் கொண்டு, ஒரு பாடாக திருவரங்கம் வந்தது ரயில் நேரம் சரியாக நாலு இருபத்தி ஏழு. "ட்ட்ட்டான்னு வராம ஏமாத் திட்ட்ட்ட்டான்" என்று லால்குடியில் வைரியாக மாறிப்போன திலக்ஸ் மாமாவை நினத்துக் கொண்டேன்.
ஃபோனை குறட்டையிலிருந்து விடிவித்து டட்டேடான் டேடேடேன் என்று ஒலிக்க பணிக்க, மாற்றிய அடுத்த நிமிடமே கடமை உணர்வொடு (உணர்வோடு என்பதும் ஏற்புடைத்தே..ஐய ...விடுங்க.. தூக்க கலக்கத்துலயும் ஸ்பெல்லிங்க் மிஸ்டேக் கண்டு புடிச்சிகிட்டு..)அலறியது.
"நீங்களும் சொல்லல, அதான் நான் எப்படி சொல்றதுன்னு.. தயங்கினேன் ,மென்னு முழுங்கினேன் ..சாரி சார்.. குட் மார்னிங்க் சார்.. வெரி குட் மார்னிங் சார்..."என் நிலையை நினைத்து பெண் சிசுக் கொலைக்காக ஒரு கணம் மனம் வாடியது.
நாலரை மணிக்கு டௌன் ஸ்டேஷன்.அங்கு இறங்கிவர்கள் எல்லோரும் சென்றுவிட, ப்ளாட்ஃபார்ம் காலியாகி விட்டது.விவேகானந்தர் சொன்னது போல் தனியாக, தூக்கம் துளியுமின்றி, கப கப பசியோடு இறங்கிவிட்டேன்.
அவர் பேசிய தோரணையை வைத்து உத்தேசித்தால் , அவர் என்னோடு பேசத் துவங்கும் போதே இங்கு நான்கு அட்வாண்ஸ்ட் டைம்ட் பிளாட்ஃபாரம் டிக்கெட்டோடு வந்திருப்பாரென்று நம்பி இருந்தேன்.கம்பிளிப் போர்வையோடு, ஃபோன் ஒலியொடு யாராவது இருப்பார்களா என்று தேடிப் பார்த்தேன். நானே வீட்டுக்கே வர்றேன் அட்ரஸ் குடுங்கன்னு சொன்னப்போ," அதெப்படி முன் பின் தெரியாதவங்க கிட்ட அட்ரஸ் குடுக்கலாம்"னு சொல்லி, முன் பின் தெரியாத என்னை என்னவெல்லாம் பேசினார்?
இன்னும் அவரைக் காணோம்.கண்கள் எரிச்சலில் மசமசவென இருக்க , இம்முறையும் ஒலி ரூபமாக தான் வந்தார்.
"வந்தாச்சா? சரி அப்படியே அந்த கடைசி பெஞ்சில, படுத்து ரெஸ்ட் எடுங்க , இதோ பத்து நிமிஷத்துல அங்க இருப்பேன்"
"சரி சார், சார் ...குட் மார்னிங்க் சார்" தூக்கத்தை கட்டுப்படுத்தவே முடியவில்லை.
படுத்தவுடன் உறங்கிவிட்டேன் பத்து நிமடம் கழித்து கண்விழித்துப் பார்த்தால் நடுப்பகல் வெய்யில் இது தான்டா திருச்சி என்றது.
ஒன்றும் புரியாமல் , எழுந்து, சற்று சுதாரித்து ,
ஃபோனைத் தேடினேன் =>பக்!
ஜாக்கிப் பையில் பர்ஸ் => பகீர்!!
கைப்பை => அம்பேல்!!!
சட்டை பையில் மட்டும் ரிட்டர்ன் டிக்கெட்டும் , காலி பர்ஸும் பெரிய மனதோடு விட்டுவைக்கப்பட்டிருந்தது. ஸ்டெஷன் மாஸ்டரிடம் சொல்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.
"அடாடா! நன்னா இங்கிலிஷ் எல்லாம் பேசறேள்.கொஞ்சம் கவனமா இருக்கப்டாதோ?இந்த மாசத்துல உங்களோட சேர்த்து நாலாவது கேஸ் இது"
"என்ன செய்யலாம் சார் இப்போ?"
"என்னக் கேட்டா? எல்லாம் அவன் சொன்னா மதிரியே கேட்டுட்டு இப்போ மட்டும் என் கிட்ட கைய பெசஞ்சிண்டு நின்னா? என்ன அர்த்தம்? அதையும் அவனையே கேளுங்கோ!"
என் ராசியை சரியாக சொல்லும் இவரிடம் நான் முன்பு எப்போவாவது பேசியிருக்கிறேனா என்று சிந்தித்தபடி "என் ஃபோன் எல்லாம் தீர்ந்து போச்சு சார்" என்று வந்த அழுகையை அடக்க அரும்பாடு பட்டேன். டிஸ்கி:ஆறு மணி நேரப் பயணம் என்பது சற்று நீண்டதாகத்தான் இருக்கும்.
உங்கள் எழுத்துக்களை எழுத்துகூட்டி படிக்கும் அழகிய இளம் பெண் வாசகி நான்.
குறிப்பாக உங்கள் 'ழ'கரம் மற்றும் குற்றியலிகரம் சேரும்போது.. அது அமரத்துவம் பெருகிறது.
உங்களைப்போல் சிறந்த எழுத்தாளர்களை தமிழகமே கொண்டாட வேண்டும், ஆனால்,
இங்கு தமிழ் சூழல் அப்படி இல்லை.அதற்கு உங்கள் தீர்வு என்ன?
- சரோஜா (ஏர் ஹோஸ்டஸ் ராசிக்குப்பம்)
------------------------------------------------------------------------
அன்பின் வாசகி,
உங்கள் மின் அஞ்சல் முகவரி மூலம் நீங்கள் ஏர் இந்தியாவில் ஏர் ஹோஸ்டஸ்ஸாக
பணிப்புரிவதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் அனுப்பி வைத்த ஃபோட்டோவிலும்
முக'வரி'கள் தெற்றென விளங்கியது. நீங்கள் ஒரு வீல் சேரில்
வந்து பிரயாணியான எனக்கு தீர்த்தம் அளிப்பதையும் கண்டுள்ளேன்.
மிக்க மகிழ்ச்சி அழகிய இளம் பெண் வாசகி சரோஜா.என் எழுத்தில் உங்கள் பெயர் எப்படி ஜொலிக்கிறது பார்த்தீர்களா?
Font பிடிக்கவில்லையென்றால் மாற்றி அனுப்புகிறேன். என் எழுத்துக்களில் மெய்யெழுத்து (குறிப்பாக அந்த புள்ளி) எந்த திசை
நோக்கினாலும் அது ஆகப்பெரும் சிறப்பாக அமைய உங்களைப் போன்ற இளம் வாசகிகளின் ஊக்கமும் காரணம்.
விமானப் பிரயானத்தின் ((என் எழுத்து மட்டும் அல்ல என் எழுத்துப் பிழையையும் சேர்த்து ரசியுங்கள்) )போது வீல் சேரில் அமர்ந்தபடி ,என் எழுத்துக்களைப் படிக்கும் உங்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள்...
அதை தனிப்பட்ட முறையில் மின் அஞ்சலில் அனுப்பிகிறேன் (நாகரிகம் கருதி).
என் தீர்வு: என் பெயரை தீபாவளி அல்லது பொங்கல் என்று மாற்றி வைக்கத் திட்டமிட்டுள்ளேன்.
தமிழகமே கொண்டாடும்.. முதல்வரும் வாழ்த்துக்கள் என்று சொல்வார்,இவ்வளவு ஏன் பிரதமருக்கு மேலிடத்து அனுமதி
கிடைத்தால் அவரும் வாழ்த்து சொல்ல வாய்ப்பு இருக்கிறது இல்லையா?
உங்கள் மூட்டு வலி தேவலையா?
இப்படிக்கு
-பிரபல எழுத்தாளர் தீபாவளி/பொங்கல்(வெண்)/ரம்ஜான்/விஷு(கேரளத்தில்)/கிருஸ்துமஸ்(உலகளவில்)